Showing posts with label அறிவியல் கட்டுரை. Show all posts
Showing posts with label அறிவியல் கட்டுரை. Show all posts

Sunday, January 17, 2010

சபாஷ் சரியான போட்டி!

சந்திரனுக்குப் போகலாம் வாங்க - 2

வானைத் தொடப் போட்டியிடும் வானளாவிய கட்டிடங்கள் நிறைந்த நியூயார்க் நகரம்! அங்குள்ள புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆற்றோரத்து மாபெரும் தேவாலயம்! அத்தேவாலயத்தின் புனிதமான வெண்சுவர்களில் மனித குலத்துக்கு அரும்பெரும் தொண்டாற்றிய அமரத்துவம் வாய்ந்த அறுநூறு பெரியோர்களின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன.

clip_image001

clip_image002


<- அணுவில் அண்டம் & அண்டத்தில் அணுத்திரள் ->

பேரரசர்கள், மகான்கள், தத்துவஞானிகள், விஞ்ஞானிகள் என வெண்சுண்ணாம்புக் கல்லில் சமைக்கப்பட்ட அவ்வுருவங்களில் அழிவில்லாத அருவமான உயிரோட்டம் இப்பிரபஞ்சம் முழுவதும் பரிணமித்திருக்கிறது. தேவாலயத்தின் அறுநூறு அப்பிரபல உருவங்ளில் 14 விஞ்ஞானிகளின் உருவங்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த 14 விஞ்ஞானிகளைத் தேர்ந்தெடுக்க, அதற்கான பொறுப்பேற்ற டாக்டர் ஹாரி எமர்சன் ஃபாஸ்டிக் என்பவர், அப்போது அமெரிக்க ஐக்கிய நாட்டின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுக்கு ஓர் வேண்டுகோள் விடுத்தார். அவ்வேண்டுகோளில் விஞ்ஞான சரித்திரத்தில் இடம் பெற்ற தலைசிறந்த 14 விஞ்ஞானிகளின் பட்டியலை அனுப்புமாறு கேட்டிருந்தார்.

அவ்வேண்டுகோளுக்கு இணங்க, ஒவ்வொரு விஞ்ஞானியும் ஒரு பட்டியலை அனுப்பி இருந்தனர். பெருவாரியான விஞ்ஞானிகள், ஆர்க்கிமிடீஸ், யூக்ளிட், கலிலியோ, கோபர்நிகஸ், ஐசக் நியூட்டன் போன்ற பிரபலங்களின் பட்டியலை அனுப்பியிருந்தனர். ஒவ்வொருவர் பட்டியலும் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருந்தது. ஆனால் அனைத்து விஞ்ஞானிகளின் பட்டியலிலும் ஒரே ஒரு விஞ்ஞானியின் பெயர் மட்டும் தவறாமல் இடம் பெற்றிருந்தது!

அந்த தலைசிறந்த விஞ்ஞானி யாராயிருக்கும்?

மேற்கொண்டு நாம் பயணத்தைத் தொடருமுன் நம் பயணத்திற்கு விண்வெளியில் அறிவியில் ரீதியாக ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த அந்த மாபெரும் அறிவியல் மேதையைப் பற்றி ஒன்றும் அறிந்து கொள்ளாமல் நாம் பயணத்தைத் தொடர்ந்தால் அதில் பொருள் இல்லை.

ஏனெனில் 19ம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை விஞ்ஞான உலகில் ஒரு குழப்பமான நிச்சயமற்ற நிலை நிலவியது.

கி.மு 300லிருந்து, இன்று வரை 2300 ஆண்டுகளாக ஜியோமிதி கணிதத்தின் தந்தை என்று போற்றப்படுகிறவர் யூக்லிட். சதுரம், வட்டம் செவ்வகம், முக்கோணம், ஐங்கரம், அறுகோணம், கனசதுரம், கனச்செவ்வகம், கோளம், உருளை பற்றி இன்றும் பள்ளிக் கணிதத்தில் இடம் பெற்றிருக்கும் அத்தனை கோட்பாடுகளும் இவருடையவை! பைபிளுக்கு அடுத்தபடியாக 13 தொகுதிகள் அடங்கிய இவரது கோட்பாடுகள் தான் உலகின் அத்தனை மொழிகளிலும் அதிக பிரதிகள் பதிப்பாகியுள்ளன!

ஆனால் பூமி தட்டையானது என்ற அனுமானத்தில் சொல்லப்பட்ட பல முக்கிய யூக்லிட் கோட்பாடுகள் பூமி உருண்டை என்று ஆனதும் தவறாகிப் போனது.

மேலும் அந்த காலகட்டத்தில் வெளிவந்த மேக்ஸ்வெல்லின் மின் காந்தவியல் கோட்பாடுகள் நியூட்டனின் இந்திரவியல் கோட்பாடுகளுக்கு மாறுபட்டிருந்தது. மாக்ஸ் பிளாங்கின் பகுதித் தத்துவம் (QUANTUM THEORY) விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராயிருந்தது. ஏற்கனவே கலிலியோ, பைசா கோபுரத்திலிருந்து இரண்டு வெவ்வேறு எடை கொண்ட இரும்பு குண்டுகளை ஒரே நேரத்தில் கீழே போட, இரண்டும் ஒரே நேரத்தில் தரையைத் தொட்டு, இது அதுவரை நிலவிவந்த அதிக எடை கொண்ட பொருள் தான் முதலில் பூமியைத் தொடும் என்ற அரிஸ்டாட்டிலின் கூற்றுக்கும், அவருக்கு பின்னால் வந்த நியூட்டனின் இரண்டாவது விதிக்கும் மாறுபட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒலி பரவ காற்றும், அலைகள் தோன்ற நீரும் இன்றிய மையாதது போல், ஒளி பயணிக்க ஈதர் என்ற கண்ணுக்குப் புலப்படாத ஊடகம் பிரபஞ்சம் முழுக்க நிரம்பியிருக்கிறது. நட்சத்திர மண்டலங்கள் அனைத்தும் அந்த ஊடகத்தில் மிதக்கிறது என்ற கூற்று நியூட்டன் காலத்திலிருந்து நிலவி வந்தது. இது கோபர்னிகசின் கிரகங்கள் தன்னைத்தானே சுற்றுகின்றன என்ற விதிக்கும், கிரகங்கள், நட்சத்திரங்கள் இவைகளின் இயக்கத்தால் ஒளியின் வேகம் மாறாது என்ற கோட்பாட்டிற்கும் முரண்பட்டிருந்தது.

இப்படி அவிழ்க்கமுடியாத பல புதிர்கள் விஞ்ஞான ஆராய்ச்சியில் ஒரு தேக்க நிலையை உண்டாக்கியிருந்த ஒரு காலகட்டத்தில் அம்மேதையின் கோட்பாடுகள் இந்த புதிர்களுக்கெல்லாம் விடை சொன்னதோடு மட்டுமல்லாமல், விஞ்ஞான உலகின் முகத் தோற்றத்தையே மாற்றி அமைத்தது, உலகின் கவனத்தை அவர் பக்கம் திருப்பியது. அவரது கோட்பாடுகள் மனித குலம் இருபதாம் நூற்றாண்டைக் கடந்து வர ஆதாரமாய் அமைந்தது என்றால் மிகையில்லை.

அணுவில் அண்டம்! அண்டத்தில் அணுத்திரள்! என்பது அவரது கோட்பாடுகளின் சாரம். அப்படிப்பட்ட ஒரு மகானைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் பயணிப்பது சுவைக்குமா?

அனைத்து விஞ்ஞானிகளின் பட்டியலிலும் இடம் பெற்ற அந்த அறிவியல் மேதை யார்?

சரியான விடையை மின்னஞ்சல் செய்யும் வாசகர்களில் குலுக்கல் முறையில் ஐந்து நபர்களுக்கு பரிசாக அறிவியல்வீதி பதிப்பகம் சார்பில் இரண்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.

(வெற்றியாளர்களின் விருப்பப்படி கீழ்க்கண்ட இரண்டு தொகுப்புகளில் ஏதேனும் ஒன்று)

1) கனவுக் கிராமம் + சுழலிறக்கை விமானம்

(அல்லது)

2) இங்கேயும் ஒரு சொர்க்கம் + ஆகாய விமானம்

உலகின் எந்த நாட்டில் இருப்பவரானாலும் அவருக்கு பரிசு பதிப்பகத்தின் செலவில் அனுப்பி வைக்கப்படும்.

பதில் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: arivialnambi@gmail.com

கடைசி தேதி: ஜனவரி 26 – பகல் 12 மணி வரை (இந்திய நேரம்)

Thursday, January 14, 2010

சந்திரனுக்குப் போகலாம் வாங்க - 1

14-01-2010

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்!

இனி சந்திரனுக்குப் போகலாம் வாங்க...

நிலவில் மனிதன்

18ம் நூற்றாண்டின் இறுதி வரை 100 கோடியாயிருந்த உலக மக்கள் தொகை 1920ல் இருநூறு கோடியை எட்டியது. 1960ல் மூன்று கோடியாக உயர்ந்த மக்கள் தொகையோ இன்று 679,58,00,000!

கி.மு 334ல் மகா அலெக்சாண்டர் தான் முதன் முதலில் கண்டம் விட்டு கண்டம் தாண்டி படையெடுத்து வந்த பேரரசராவார். இதன் மூலம் அவர் ஐரோப்பிய ஆசிய நாடுகளைச் சேர்ந்த மேற்கு கிழக்கு மக்கள் இணைய ஒரு பாலமாகத் திகழ்ந்தார். அவர் வழியைப் பின்பற்றி மார்கபோலோ என்ற இத்தாலிய யாத்ரீகர் கி.பி 13ம் நூற்றாண்டில் தரை மார்க்கமாக சீனா வரை சென்று, அங்கு குப்ளாய்கான் அரண்மனையில் பலகாலம் தங்கி கீழ்திசை நாடுகள் பலவற்றைச் சுற்றிப் பார்த்துவிட்டு தாய்லாந்து, இந்தியா, இலங்கை, பாரசீகம் வழியே கடல் மார்க்கமாக தாகம் திரும்பி அவரது அனுபவங்களை Description of the worldஎன்ற பயணநூலாக எழுதினார். இந்நூல் பிற்காலத்தில் ஐரோப்பிய கடலோடிகளுக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது. அவர்கள் உலகம் முழுக்க பயணம் செய்து ஜல்லடை போட்டுத் தேடி அலைகடலுக்கப்பால் இருந்த சின்னஞ்சிறு தீவுகளைக் கூட கண்டறிந்து மனித இனம் குடியேற வழி வகுத்தார்கள்.

பார்தலோமியாடையஸ் ஆப்பிரிக்காவின் மேற்குக்கரை ஓரமாகப் பயணித்து அக்கண்டத்தின் தென்கோடியில் உள்ள நனம்பிக்கை முனையை அடைந்தார். வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனையைச் சுற்றி ஆபிரிக்காவின் கிழக்குக் கடற்கரை வழியே பயணித்து இந்தியாவை வந்தடைந்தார். கொலம்பஸ், அமெரிக்கோ வெஸ்புஸ்ஸி போன்றவர்கள் அமெரிக்க கண்டத்தை கண்டறிய, மெலன் முதன் முதலில் கடல் மார்க்கமாக உலகை வலம் வந்தார். ஜேம்ஸ் குக், டஸ்மென் போன்றோர் ஆஸ்திரேலியா கண்டத்தை உலகம் அறியச் செய்தனர். இருண்ட கண்டம் என்று அழைக்கப்பட்ட ஆப்ரிக்காவின் உட்புறத்தை ஆராய்ந்த டேவிட் லிவிங்ஸ்டன், சர் ஹென்றி மார்டன் ஸ்டேன்லி போன்றோரும் இதில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

மக்கள் தொகையில் இன்று 700 கோடியை நெருங்கும் நாம், ஏறக் குறைய பூமியின் முக்கால் பங்கு வளத்தை உறிஞ்சி விட்டோம். இனி இருக்கும் வளத்தைக் கொண்டு மனித இனம் இந்த நூற்றாண்டின் பாதியைக் கடக்க முடியுமா? என்பதே பெரிய கேள்விக்குறிதான். மிருகங்களை விடக் கேவலமாக வாழ்வாதாரத்திற்காக இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மனிதனை மனிதன் அடித்துக் கொள்ளும் வேகத்தைப் பார்த்தால் அனைவர் மனதிலும் இக் கேள்வி எழுவதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. இதற்கான ஒரு பரிகாரம் தேடித்தான் மனிதன் விண்வெளி ஆய்வை தொடர்ந்து நடத்தி வருகிறான்.

14, 15ஆம் நூற்றாண்டுகளில் மனிதனின் தேடுதல் வேட்டையில் சிக்கி புது உலகம் என்று அழைக்கப்பட்ட அமெரிக்கா கண்டம், இன்று மக்கள் தொகையால் நிரம்பி வழிகிறது. அது போலவே ஆஸ்திரேலியா கண்டதித்திலும் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு இனி பூமியில் இடம் போதாது என்ற நிலையில்தான் அவன் தேடுதல் வேட்டை விண்வெளியின் பக்கம் திரும்பியுள்ளது. பூமியைப் போல் மனித இனம் வாழத்தகுந்த கிரகம் அல்லது துணைக் கிரகம் ஏதாவது அவன் தேடுதலில் அகப்படுமா? ங்கு மனிதன் குடியேறி வாழ முடியுமா? என்பது தான் அவன் இன்றைய தேடுதலின் இறுதி இலக்கு.

1865ல் பிரஞ்சு எழுதிதாளர் ஜூல்ஸ் வெர்ன் எழுதிய சந்திர ரயில் (moon train), என்ற அவரது நாவலில் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் தொடர் வண்டிபோல் சென்று வரும் கார்களைப் பற்றிய கதையை அவர் கற்பனையாகத்தான் எழுதினார். ஆனால் அவரது கற்பனைகள் கூட இன்று செயல் வடிவம் பெற்று சாத்தியமாகி வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். மனிதனது விண்வெளி யுகம் ஆரம்பமான நாள் 1957, அக்டோபர் திங்கள் 14 எனலாம். அன்றுதான் ரஷ்யா ஸ்புட்னிக்-1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. அதன்பின் சந்திர ரயிலுக்கு அடிகோலிய ரஷ் விண்வெளி வீரர் யூரிகாகரின், விண்கலம் வோல்ஸ்டாக், முதன் முதலாக ஏப்ரல் 12, 1961ல் பூமியைச் சுற்றிவர, காகரின் விண்கலத்திலிருந்து வெளி வந்து விண்வெளியில் நடந்து சாதனை புரிந்தார். இச்சாதனையைத் தொடர்ந்து அடுத்து வந் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமான விண்வெளிப் போட்டி, ஜூலை 20, 1969ல் சந்திரனில் மனிதன் இறங்கிய சாதனையில் முடிந்தது. அதன் பின் பல சாகச ராக்கெட்டுகள் சூரிய குடும்பத்தின் பிற கிரகங்களுக்கும் சூரிய குடும்பத்தைத் தாண்டி அதற்கு அப்பால் வேறு கிரகங்களுக்கும் சென்றுள்ளன.

விண்வெளி என்றால் என்ன?

வெற்றிடத்திற்கு மற்றொரு பெயர்தான் விண்வெளி. ஆனால் இந்த பேரண்டம் என்ற வெற்றிடத்தில்தான் கோடானுகோடி விண்மீன்கள் மொய்த்திருக்கும் எண்ணற்ற நட்சத்திரக் கூட்டங்கள் (Galaxies), நட்சத்திங்களைச் சுற்றிவரும் கிரகங்கள், அவற்றின் துணைக் கோள்கள், விண்கற்கள் எ நாம் அறிந்த அனைத்துமே விண்வெளியில் ஒரு சின்னஞ்சிறு புள்ளிதான் என்றால் ஆச்சரியமாய் ருக்கிறதல்லவா!

நம்மைப் பொருத்தவரை விண்வெளி என்பது, பூமியையும் அதைச் சுற்றியிருக்கும் வளிமண்டலத்தையும் தாண்டி பூமியிலிருந்து சுமார் 95 கி.மீ உயரத்திலிருந்து விண்வெளி ஆரம்பமாகிறது எனலாம். ஆனால் அங்கு இதுதான் வளிமண்டலத்தின் எல்லை என்று எதுவும் கிடையாது. காற்றழுத்தம் குறைந்து குறைந்து காற்றே இல்லை என்று ஆன இடம்தான் விண்வெளியின் ஆரம்பம்.

தத்தமது சுற்றுப்பாதையில் கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனின் ஆகர்ஷண சக்தியால் இந்த இயக்கம் நடைபெறுகிறது. சூரியனின் இந்த ஈர்ப்பு விசைக்குட்பட்ட விண் வெளிப்பகுதியை நாம் கிரகங்களுக்கிடையிலான விண்வெளி (Interplanetary space) என்கிறோம்.

இதே போன்று நட்சத்திரங்களுக்கு டையிலான விண்வெளியை நட்சத்திர விண்வெளி (Interstellar space) என்கிறோம். இந்த பெரும் தூரத்தைக் கணக்கிட கி.மீ கணக்கு பொருந்தாது என்பதால் ஒளியின் வேகமான விநாடிக்கு 2,99,792 கி. மீ வீதம் அது ஒரு ஆண்டில் பயணிக்கும் தூரத்தைக் கொண்டு கணக்கிடு கிறோம். தையே நாம் ஒளியாண்டு என்கிறோம். ஒரு ஓளி ஆண்டு சுமார் 9.46 ட்ரில்லியன் கி.மீ க்குச் சமம். (ட்ரில்லின் என்பது பத்து லட்சம் கோடி. (10,00,00,00,00,000). உதாரணமாக சூரியனுக்கு அருகில் உள்ள நட்சத்திரம் பிராக்ஸிமா செஞ்சூரி 4.3 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது.

கண்ணுக்குப் புலப்படாத விண்வெளியின் இந்த தூரங்களைக் கடக்க நாம் கண்டுபிடித்த வாகனம்தான் விண்கலம் என்பதாகும். பூமியின் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து விண்கலத்தை நாம் விண்வெளியில் செலுத்துவதற்கு அதீதசக்தி தேவைப்படுவதால், ராக்கெட்டுகள் இதற்கு உதவுகின்றன.

அமெரிக்கா ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் விண்வெளிக்கு பல ராக்கெட்டுகள் அனுப்பியுள்ளன. சந்திரனை ஆராய்வதற்காக இந்தியா சமீபத்தில் சந்திராயன் என்ற விண்கலத்தை அனுப்பியது. சந்திரனில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி அது அனுப்பிய தகவல்கள் நமக்கு நம்பிக்கையை ளித்துள்ளன. இது பற்றி அமெரிக்காவின் NASA மேற்கொண்டு ராக்கெட்டுகளை அனுப்பி ஆராய்ந்து வருகிறது.

ராக்கெட், ஏவுகணை போன்ற சொற்களால் நாம் குறிப்பிடுவது ஒரு சாதாரண எஞ்சினைத்தான். இந்த எஞ்சின், மற்ற எஞ்சின் களிலிருந்து பல வகைகளிலும் மாறுபட்டது. அதே அளவிலான ஒரு கார் எஞ்சினைவிட ராக்கெட் எஞ்சின் 3000 மடங்கு அதிக சக்தியை அளிக்க வல்லது. ஒரு ரயில் எஞ்சினை விட 1000 மடங்கு பலமிக்கது. தற்போது ராக்கெட் என்ற சொல் இந்த வகை எஞ்சின்களைக் கொண்டு விண்ணிற்கு ஏவப்படும் விண்கலத் தையும் சேர்த்தே இச்சொல் குறிக்கின்றது.

உயர அளவுகளில் வித்தியாசம் கொண்ட பல்வேறு வடிவமைப்புகளைக் கொண்ட ராக்கெட்டுகள், தற்போது உருவாக்கப்படுகின்றன. 60 செ.மீ அளவிலான பட்டாசு ரக வெடிகூட ராக்கெட் என்றே அழைக்கப்படுகின்றது. பல ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள எதிரிகளின் இலக்கைத் தாக்கும் 15மீ முதல் 30மீ நீளம் கொண்ட ஏவுகணைகளும் ராக்கெட் வகையைத்தான் சேரும். இவற்றை விட அதிக சக்தியுடன் விண்வெளிக்கு செயற்கைக் கோள்களையும் (satellite), விண்கலத்தையும் சுமந்து செல்லும் விண்ணூர்திகளும் ராக்கெட் என்றுதான் அழைக்க படுகின்றது. 1969-70களில் சந்திரனுக்கு மனிதர்களை ஏற்றிச் சென்ற சனீஸ்வர விண்கலம்-5என்பதுதான் மனிதன் உருவாக்கிய விண்கலங்களில் மிகப் பெரியது. இது 110 மீட்டர் உயரம் கொண்டது.

ராக்கெட்டுகள் வினாடி நேரத்துக்குள் அளவற்ற சக்தியை உருவாக்குக்கின்றது. அது எரிபொருளைக் கபளீகரம் செய்யும் வேகம் அதைவிட ஆச்சர்யம் அளிக்கக் கூடியது. இதனால்தான் குறைந்த தூரமே கடக்க வேண்டுமென்றாலும், அந்த குறைந்த நேரத்திற்கும் ராக்கெட்டுகளுக்கு அதிக எரிபொருள் தேவைப் படுகின்றது.

மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்! அதை விட அதியம் சனீஸ் வர ராக்கெட்- 5 விண்ணில் ஏவப்பட்டபோது அது தரையிலிருந்து கிளம்ப 2,120,000 லிட்டர் எரிபொருளை 2 நிமிடம் 45 வினாடிகளில் கபளீகரம் செய்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! இதனால் ரக்கெட் எஞ்சின்களின் வெப்பம் சிலசமயம் 33000 C என்ற உச்ச நிலைக்குக் கூடச் செல்வதுண்டு. இது எஃகின் இரண்டு மடங்கு உருகு நிலைக்குச் சமமானது.

அப்பல்லோ-11 சந்திரனுக்கு புறப்பட்ட காட்சி

பயணம் தொடரும்...

Sunday, November 22, 2009

வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய காலங்கள்

வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய காலங்களைப் பேலியோசோயிக், மீசசோயிக், சீனசோயிக் என மூன்று யுகங்களாகப் பிரித்துள்ளதைப் பற்றி ஏற்கனவே அறிவோம். பேலியோசோயிக் யுகம் பற்றிய தகவல்களைச் சென்ற அத்தியாயத்தில் பகிர்ந்து கொண்டோம். இனி மீசசோயிச் யுகம் பற்றி இப்போது பார்ப்போம்.

மீசசோயிக் யுகம்:

இந்த யுகம் 24.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன் முடிவடைந்தது. இந்த யுகத்தின் ஆரம்ப காலத்தில் நம் பூமி ஒரே நிலப்பரப்பாக இருந்தது. இப்போதைய வட அமெரிக்கா ஆப்ரிக்கா மேற்கு ஐரோப்பா முதலிய கண்டங்களின் நிலப்பகுதி மீது கடல்நீர் உட்புகுந்து பின்னர் வெகுகாலத்திற்குப்பின் ஒருசில இடங்களிலிருந்து பின்வாங்கியது. இதனால் நிலப் பகுதி சதுப்பு நிலமாக மாறி அங்கு உயிரினங்கள் தோன்றி வாழ ஏதுவான ஒரு சூழல் உருவாயிற்று. இதன் காரணமாக பின்னாளில் கண்டங்கள் பிரியவும் இந்த உட்புகுந்த நீர் வழி வகுத்தது. இந்த யுகத்தின் கடைசிக் காலகட்டத்தில் பாறைகள் நுண்ணுயிரிகளால் மிருதுவாகி சுண்ணாம்பு பாறைகள் உருவாயின. சிப்பிகளைக் கொண்ட நத்தை போன்ற இனங்கள், ஏராளமான மீன் வகைகள், தவளை, தேரை போன்ற நீர் நிலவாழ்வன, ஊர்வன போன்ற இனங்கள் பல்கிப்பெருகின. பிரமாண்ட வகை பல்லி இனமான டைனோசர்கள் தோன்றி அழிந்ததும் இந்த கால கட்டத்தில்தான். பறவை இனம் உதித்ததும் இந்த யுகத்தின் க்டைசி காலகட்டத்தில்தான். வெப்ப இரத்த பாலூட்டி வகைகள் ஒருசில இந்த யுகத்தில் தோன்றி மறைந்தன. பூக்காத தாவரங்களும் பூக்கும் தாவரங்களும் தோன்றி இன்று வரை உள்ளன.

அறிவியல் வல்லுனர்கள் மீசசோயிக் யுகத்தை டிரையாசிக், ஜுராசிக், கிரடேசியஸ் என மூன்று சகாப்தங்களாகப் பிரித்துள்ளனர்.

முதலில் டிரையாசிக் சகாப்தத்தில் நம் பூமி எவ்வாறு இருந்தது என்பதை இப்போது பார்க்கலாம்.

டிரையாசிக் சகாப்தம்: (24.5 கோடி ஆண்டுகள் முதல் 20.8 கோடி ஆண்டுகள் வரை)

ஒருங்கிணைந்த நிலப்பரப்பாக பாங்கியே (Pangaea) என நம் பூமி அழைக்கப்பட்டு பிறகு பல கண்டங்களாகப் பிரியத் தொடங்கிய காலகட்டம் இதுவே. இந்த சகாப்தத்தின் தொடக்க காலத்தில்தான் டைனோசர் இனம் இப்பூமியில் தோன்றி வளரத்தொடங்கியது எனலாம். எனவே பூமியில் எந்தக் கண்டத்தில் முதல் டைனோசர் உதித்திருக்கும் எனக் கூறுவது அரிது.

பொதுவாக பூமியில் அதிக வெப்பம் நிலவிய காலம் இது. கடற்கரையை ஒட்டிய பகுதியில் மட்டுமே பச்சைப்பசேலென அடர்ந்த புல்வெளிகளும் நீரோடைகளும் ஏரிகளும் காணப்பட்டன. உட்புற நிலப்பரப்பு அதிவெப்பப் பாலைவனமாகக் காட்சியளித்தன. இந்த சகாப்தத்தின் ஆரம்ப காலத்தில்தான் பூமியில் முதல் டைனோசர் உதித்தது. முதலைகள் போன்ற மற்ற ஊர்வன் இனத்தைச் சேர்ந்த ஏறாளமான பிராணிகள் வாழ்ந்து வந்தன

.






















டிரையாசிக் சகாப்தத்தில் நம் பூமி


தாவர வகைகளில் பசுமையான பெரணி வகைகளின் ஆதிக்கம் ஆரம்பமான காலம் இதுவாகும். இந்த காலகட்டத்தில்தான் பனைக் குடும்பத்தின் முன்னோடிகளான சைகட்ஸ் வகை தாவரங்கள் நீரோடைகள் அருகே முளைத்துப் பரவி பெருகின. எந்த ஒரு புல் வகையும் அப்போது கிடையாது.

பிராணி வகைகளில் நீரில் வாழும் இனங்களான மீன்கள், ஆமைகள் போன்றவகைகள் கடலிலும் ஆறு குளங்களிலும் நீந்தி அரசோச்சின. ஆதிகால நீர்நில வாழும் இனத்தில் தவளை, தேரை இனங்கள் தோன்றியிருந்தன. கடல் வாழ் ஊர்வன இனத்த்தில் மிக்சோசரஸ் எனும் விலங்கு தோன்றி வாழ்ந்து வந்தன. நிலத்தில் வாழும் ஊர்வன இனத்தில் ரிங்கோரஸ் எனப்படும் ஒருவித அலகுள்ள பல்லியினங்களும் இந்த சகாப்தத்தில் பல்கிப் பெருகியிருந்தன.

தோல்போன்ற இறக்ககளைக் கொண்ட பீட்டோசரஸ் எனப்படும் பல்லியினம் பறக்க முயன்ற காலம் இது. முதல் பாலூட்டி இனங்கள் தோன்றிய
கால கட்டமும் இதுவே.
Sequence 4





















அடுத்த ஜுராசிக் சகாப்தத்தில் நம் பூமி


டைனோசர் இனம் இந்த டிரையாசிக் சகாப்தத்தின் கடைசி காலங்களில் தோன்றி ஜுராசிக் சகாப்தத்தில் பூமி முழுக்க வியாபித்தன. முதன் முதலில் மாமிசபட்சனி டைனோசர் வகைகள் தான் உதித்ததாகக் கருதப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க ஒரு வகை டைனோசர்கள் ஹெரராசரஸ் ஆகும். தாவரங்களை உண்ணும் டைனோசர்கள் இரண்டாவதாகத் தோன்றி இப்புவியை ஆக்கிர மித்தன் . இதனால் மற்ற ஏராளமான ஊர்வன இனங்கள் அழிந்தன. தாவரங்களை உண்ணும் டைனோசர்களில் குறிப்பிடத்தக்கது டெக்னோசரஸ் ஆகும்.

இந்த சகாப்தத்தில் நிலப்பகுதியின் உட்புறம் வெப்பம் மிகுந்து காணப்பட்டதால் அங்கு பாலை நிலத்தின் அம்சங்களே நிறைந்து காணப்பட்டது. எனவே அந்த உட்புற நிலப்பரப்பில் எந்த வித தாவரங்களோ பிராணிகளோ வாழ்வதற்கான சாத்தியம் இல்லைலாது போனது.

Plateosaurus_2.jpg











cyclorrama_1_lrge.jpg








FERN



டிரையசிக் சகாப்தம்: விலங்குகளும் பெரணிவகைத் தாவரமும்.


FOSSILIZED GINKGO

டிரையாசிக் சகாப்த கிங்கோ வகைத்தாவரத்தின் படிமமும் இக்காலத்தில் அதன் தோற்றமும்.


***** ***** ***** ***** *****

Wednesday, November 11, 2009

டைனோசர் நகரின் புதிய முகவரி!

டைனோசர் நகர் அரியலூர்

என்னும் தலைப்பில் நான் எழுதிய அறிவியல் கட்டுரையை பெரியார் பிஞ்சு இதழில் மூத்த குடிக்கும் முன் தோன்றிய டைனோசர் என்ற தலைப்பில் வெளியிட்டமைக்கு அப்பத்திரிக்கை ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் உதவி ஆசிரியர் பிரின்ஸ் அவர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

Tuesday, October 20, 2009

டைனோசர் நகர் அரியலூர்

’கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி’ என்பது நமது தமிழ்க்குடியின் தொன்மையை விளக்கும் முதுமொழி யாகும். இது இன்று அறிவியல் பூர்வமாகவும், மரபணுக்கள் சோதனைகள் மூலமாகவும் தமிழர்கள்தான் இந்தியத் துணைக்கண்டத்தின் பூர்வ குடிகள் என்று நிரூபணமாகியுள்ளன. மனித இனம் தோன்றுவதற்கு முன்பே பழங்காலத்திலிருந்து உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்றதொரு சூழல் தென்னகத்தில் நிலவியது என்பதற்கான அடுத்த ஒரு சான்றுதான் அரியலூர்.

அறிவியலாளர்கள் 460 கோடி ஆண்டுகட்கு முன் அண்டத்தின் வாயுக்கள் குளிர்ந்து தூசுப் படலமாகி, கணமான தூசுக்கள் தாதுக்களாக பூமியின் மையத்திலும், லேசான துகள்கள் பூமியின் மேற்பரப்பில் பாறைகளாகப் படிந்து ஓடாக உருமாறி, பூமி உருவாக்கம் நிகழ்ந்ததாகக் கணித்துள்ளனர்.

பூமியில் பிராணவாயுப் படலம் ஒன்று சேர்ந்து ஓசோன் மண்டலம் உருவானது 340 கோடி வருடங்களுக்கு முன் என்றும், அதன் பிறகு 283 கோடி ஆண்டுகள் கழித்தே உலகின் முதல் ஒரு செல் உயிரினம் 57 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலில் உருவாகியிருக்க முடியும் என்பது அறிவியலாளர்கள் கருத்தாக உள்ளது.

பூமியில் எந்த ஒரு ஜீவராசிகளுமற்ற 340 முதல் 57 கோடி ஆண்டுகள் வரையிலான இந்தக் கால கட்டத்தை பிரிகேம்ப்ரியன் யுகம் என்பார்கள்.

57 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் முதல் உயிரினம் உருவான பிறகு இன்று வரையுள்ள காலத்தை அறிவியல் வல்லுனர்கள் பேலியோசோயிக் (Palaeozoic), மீசாசோயிக் (Mesozoic), சீனோசோயிக் (Cenozoic) என மூன்று யுகங்களாகப் பிரித்துள்ளனர்.

ஒரு செல் நுண்ணுயிரிகள் பல செல் உயிரினங்களாகிப் பின்னர் அவைகள் தாவ்ரங்கள், பிராணிகள் எனப் பரிணாம வளர்ச்சி அடைந்தன. அதன் பயனாக 51 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முதல் முதுகெலும்புள்ள பிராணி தோன்றியது. உலகின் முதல் தாவர இனம் தோன்றியது 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் என்றும் உலகின் முதல் தரையில் வாழும் உயிரினம் தோன்றியது 37 கோடி ஆண்டுகளுக்கு முன் என்றும் கணகிட்டுள்ளனர்.

உயிரினங்களின் இந்த பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் யுகங்களை மேலும் பல சகாப்தங்களாகப் பிரித்துள்ளனர். பேலியோசோயிக் யுகத்தை கேம்பிரியன், ஆர்டோவீசியன், சிலூரியன், டிவோனியன், கார்போனிஃபெரஸ், பெர்மியன் என ஆறு சகாப்தங்களாகப் பிரித்துள்ளனர். இந்த யுகம் 57 முதல் 24.5 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வரை உள்ள கால கட்டமாகும்.

மீசாசோயிக் யுகம் 24.5 முதல் 6.5 கோடி ஆண்டுகள் வரையிலான 18 கோடி ஆண்டுகள் காலம் கொண்டது. டிரையாசிக், ஜுராசிக், கிரெடேசியஸ் என மூன்று சகாப்தங்களாக இந்த யுகத்தைப் பிரித்துள்ளனர்.

சீனோசாயிக் யுகம் டெர்சியரி, குவாட்டனரி என இரண்டு சகாப்தங்களைக் கொண்டது. இது 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன் தொடங்கி இன்று வரையுள்ள காலகட்டமாகும்.

இதில் இக்கட்டுரையின் நாயகர்களான டைனோசர்கள் வாழ்ந்த காலம் ஜுராசிக் சகாப்தமாகும். இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த உயிரினங்களில் முக்கியமான இனம் டைனோசர்கள். அவைகள் முட்டையிட்டு, குலம் வளர்த்த பெருமை கொண்டது தமிழகம் என்பது இப்போது அரியலூரில் நிரூபணமாகி இருக்கிறது.

மீசாசோயிக் யுகத்தின் மத்திய காலகட்டமான 20.8 முதல் 14.6 வரையிலான 6.2 கோடி ஆண்டுகள் காலம் ஜுராசிக் சகாப்தம் எனப்படுகிறது.

ஜுராசிக் சகாப்தத்தில் நம் பூமி எவ்வாறு இருந்திருக்கும்?

ஜூரசிக் சகாப்தத்தில் நம் பூமி மிக மிக இளமையான கிரகமாகத் திகழ்ந்துள்ளது. அப்போது பூமியில் ஒன்றாயிருந்த நிலப்பரப்பு, யூரேசியா, காண்ட்வானா எனப்பிரிந்து, பூமி ஓடு நகர்வால் மேலும் பல கண்டங்களாகப் பிரியத் தொடங்கிய காலம் அது. ஆல்ப்ஸ் மலையோ, இமயமலையோ அப்போது தோன்றியிருக்கவில்லை. தாவரங்களில் பாசிகள், பெரணிகள், ஊசி இலைத் தாவரங்கள், பனைக் குடும்பத்தைச் சேர்ந்த சில ஒற்றை விதையிலைத் தாவரங்கள் மட்டுமே பூமியில் அப்போது தழைத்திருந்தன. பூக்கும் தாவரங்கள் கிடையாது. கடலில் முதுகெலும்பற்ற ஜெல்லி, நட்சத்திர மீன்வகைகளும் கடல்பஞ்சு போன்ற உயிரினங்களும் பல்கிப் பெருகியிருந்தன. முதுகெலும்புள்ள மீன்வகைகள், சுராமீன்கள் போன்றவைகளும் வாழ்ந்தன. நிலத்தில் வாழும் இனங்களில் ஊர்வன கோலோச்சிய காலம் இது. டைனோசர்கள் பிரமாண்டமான பல்லியினத்தைச் சேர்ந்தவைகள் என்பதால் இவைகளுக்குக் காதுகள் கிடையாது. டைனோசர்கள் தவிர்த்து தவளைகள், முதலைகள், பல்லிகள், ஆமைகள் போன்ற வைகளும் அக்காலத்தில் நிலத்தில் வாழ்ந்து வந்தன. பின்னால் வந்த கிரெடேசியஸ் சகாப்தத்தில் தான் பறவை இனங்கள் டைனோசர் குடும்பத்திலிருந்து பிரிந்து உருவானவை என்பதால் ஜுராசிக் சகாப்தத்தில் பறவை இனங்கள் வாழ்ந்த சாத்தியமே கிடையாது. அன்று உயிரோடிருந்த ஒரு சில சிறு பாலூட்டி இனங்கள் கூட இன்று அழிந்து விட்டன.

Life in the Jurassic Perioduser posted image

கடலை ஒட்டிய சதுப்பு நில பகுதிகளில்தான் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான மித வெப்ப சீதோஷ்ணம் நிலவியது. நிலப்பகுதியின் உட்புறம் மிகுந்த வெப்பமும் வறட்சியும் கொண்டதாக இருந்தது. அரியலூர் அருகில் இப்போது வெற்றுப் பாறையாக இருக்கும் இந்தப் பகுதியில் அந்தக் காலத்தில் வற்றாத ஆறு ஓடி இருக்கிறது. நல்ல தண்ணீரோடு மிகப் பெரிய ஏரி இருந்திருக்கிறது. கடலும் மிக அருகாமையில் இருந்துள்ளது. எனவேதான் இங்கு டைனோசர்கள் பல்கிப் பெருகி பலகாலம் வாழ்ந்துள்ளன.

சுண்ணாம்புப் பாறைகள் நிறைந்த அரியலூர் அருகில் செந்துரை என்னும் கிராமத்தில் 2 சதுர கி.மீ பரப்பளவில் பரந்து கிடக்கும் இந்த படிம பொக்கிஷம் டைனோசர்களின் வாழ்க்கை முறையையும் அது அழிந்த விதத்தையும் அறிய உதவும் என்கின்றனர் தொல் புவியியல் வல்லுனர்கள். ஆனால் இது இன்னும் சரிவரப் பாதுகாக்கப்படாததால் இங்கிருந்து இந்த அரிய முட்டைகள் உள்ளூர்வாசிகளால் எடுத்துச் செல்லப்படுகிறது.

இதே போன்ற டைனோசர் படிம பிரதேசம் ஒன்று 1981ல் குஜராத்தில் கண்டறியப்பட்ட போது, அம்மாநில அரசு உடனடியாகச் செயல்பட்டு அதைப் பாதுகாக்கப் பட்ட பகுதியாக அறிவித்து, அங்கு ஒரு படிம அருங்காட்சியகம் உருவாக நடவடிக்கை எடுத்தது என்கிறார்கள் தொல் புவீயியல் வல்லுனர்கள். இப்பகுதியின் முக்கியத்துவம் கருதி, இப்பகுதிகளை ஒருங்கிணைத்து அதே போன்றதொரு அருங்காட்சியகமும், ஆய்வகமும் செந்துரையில் அமைக்க உடனடி நடவடிக்கை அவசியம் என்கிறார்கள் உயிரின ஆராய்ச்சியாளர்கள். மத்திய அரசு உதவும்பட்சத்தில் இவற்றைச் செயல்படுத்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் முன்வந்துள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ராம்குமார் தலைமையிலான மாணவர் குழுவினர்தான் முதன் முதலில் அரியலூர் நகரை ஒட்டிய இப்பகுதியில் குவியல் குவியலாய்ப் பல அடுக்குகளில் இருந்த டைனோசர் முட்டைப் படிமங்கள், முட்டையிட்ட இடங்கள், டைனோசர் எலும்புகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துச் சேகரித்திருக்கிறார்கள்.

இங்கிருந்து சுமார் 60 டைனோசர் முட்டைகளை எடுத்திருக்கும் இந்தக்குழு, மேலும் ஆயிரக்கனக்கான முட்டைகள் படிமங்களாக இருப்பதையும் கண்டறிந்துள்ளது. மணலில் வளை தோண்டி கூடு மாதிரி உருவாக்கி, அதில்முட்டைகள் இடப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூட்டிலும் ஆறேழு முட்டைகள் இருக்கின்றன. இப்படி எராளமான முட்டைக் குவியல்கள் இருப்பதால், ஒரு காலத்தில் இங்கு ஆயிரக்கனக்கான டைனோசர்கள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

டைனோசர் குடும்பத்தை அதன் இடுப்பெலும்பு அமைப்பை வைத்து சௌரிச்சியன்ஸ் (Saurischians) வகை எனவும், ஆர்னித்தோச்சியன்ஸ் (Ornithischians) வகை என்றும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். முதலாவதில் பல்லிவகை இடுப்பெலும்பும், இரண்டாவதில் பறவை இன இடுப்பெலும்பும் காணப்படுவதால் இது பறவைகளின் மூதாதையர் எனப்படுகிறது.

பெரிய பெரிய மிருகங்களை வேட்டையாடிச் சாப்பிடும் மாமிசபட்சனி ரக டைனோசர்கள் மற்றும் வெறும் இலைகளை மட்டுமே சாப்பிடும் சாதுவான சைவ சாரோபோட் ரக டைனோசர்கள் என டைனோசர்களில் பல வகை உண்டு. அரியலூரில் இந்த இரண்டு இன வகை முட்டைகளும் கிடைத்திருப்பதால், இப்பகுதியில் அந்த இரண்டு இனங்களும் வாழ்ந்திருக்கின்றன என்பது உறுதியாகிறது. இவற்றின் மீது எரிமலைக் குழம்பு ஓடியதற்கான தடயங்களும் சிக்கியுள்ளன. தக்காணப் பகுதியில் இருந்த ஏதோ ஒரு எரிமலை, இந்தியத் துணைக் கண்டம் காண்ட்வானா கண்டத்திலிருந்து பிரிந்து சென்று யூரேசிய கண்டத்தில் மோதி வெடித்துச் சிதறிய காலகட்டத்தில், அந்த இயற்கைச் சீற்றத்தில் இங்கு வாழ்ந்த டைனோசர்கள் குடும்பதோடு அழிந்திருக்கலாம். அப்போது எஞ்சிய முட்டைகள் அப்படியே மண்ணில் உறைந்து படிமங்கள் ஆகியிருக்கக்கூடும். உயிரோடு புதைந்த டைனோசர்கள் எலும்புக்கூடுகள் ஆகிவிட்டன என்பதும் கருத்தாக உள்ளது. எது எப்படியோ, டைனோசர் இனம் எப்படி அழிந்தது என்பதற்கான ஆராய்ச்சியை இனி எந்த நாட்டு நிபுணரும் அரியலூரில் வந்து செய்யலாம்.

150 ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் இங்கு டைனோசர் எலும்புகளைக் கண்டுபிடித்தனர். அரியலூர் சிமெண்ட் ஆலையின் சுரங்க வளாகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பே டைனோசர் முட்டை ஒன்று கிடைத்தது. ஆனால் அப்போது ஸ்பீல்பெர்க்கின் ஜூராசிக் பார்க் போன்ற திரைப்படங்கள் வரவில்லை என்பதால், போதுமான விழிப்புணர்வு அப்போது இல்லை. இப்போது உலக வரைபடத்தில் அரியலூருக்கு என்று ஒரு தனி இடம் கிடைச்சாச்சு! இதனால் தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் பெருமைதானே! தமிழக அரசின் தனி கவனமும் செயல்பாடுமே இந்தப் பெருமையை போற்றிப் பாதுகாக்க முடியும் என்பது இந்தியத் தொல் புவியியல் துறை (Geological Survey of India) அதிகாரிகளின் கூற்றாக உள்ளது.


Ck39t1.jpg (59619 bytes)

கிரெடேசியஸ் சகாப்தத்தில் டைனோசர் இனத்திலிருந்து பறவைகள் உருவான விதம்

Cretaceous Paleomap
(கிரெடேசியஸ் சகாப்தத்தில் நம் பூமி)

Source:D.K Ultimate Visual Dictionary.

Sunday, October 11, 2009

நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனும் ரிபோசோம்களும்

2009ம் ஆண்டு வேதியல் துறைக்கான உலகின் மிக உயர்ந்த நோபல் பரிசைத் தட்டிச் சென்றிருப்பவர் சிதம்பரத்தைச் சேர்ந்த தமிழ் விஞ்ஞானியான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (வயது 57) என்பது தமிழர்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சி அளிக்கும் ஒரு செய்தியாகும். வெங்கி என்பது அவரது பெயரின் செல்லச் சுருக்கம்.

வெங்கியுடன் ரூபாய் ஏழுகோடி மதிப்பிலான இந்தப் பரிசுத் தொகை அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டெயிட்ஸ் (வயது 69) மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண்மணி அடாயோநாத் (வயது 70) ஆகிய மூவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படுகின்றது. ரிபோசோம் வேதிப்பொருளின் அமைப்பு முறைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், நுண்ணணு உயிரியல் ஆய்வகத்தில் (எம். ஆர். சி) இந்த மூவரும் கூட்டாக மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது..


தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் பிறந்த ராமகிருஷ்ணன், அமெரிக்க குடியுரிமை பெற்றவர். பள்ளிப்படிப்பை சிதம்பரத்திலும், பி.யூ.சி படிப்பை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், குஜராத் மாநிலம் பரோடா நகரில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலையில் பட்டப்படிப்பையும், முடித்தபின், அமெரிக்காவில் ஓஹியோ பல்கலையில் ஆராய்சிப்படிப்பை (Ph.D) முடித்து விட்டு கலிபோர்னியா பல்கலையில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.


ரிபோசோம்கள் என்பது என்ன?


நமது உடலில் உள்ள திசுக்கள் யாவும் ஆயிரக்கணக்கா உயிரணுக்களால் (Cell) ஆனது. ஒவ்வொரு உயிரணுவிலும் சைட்டோபிளாசம் என்ற திரவம் பிளாஸ்மா என்ற மென்திரையால் பொதியப்பட்டுள்ளது.


சைட்டோபிளாசம் என்ற திரவத்தில் செல்லின் உட்கரு, ரிபோசோம், கால்கேபாடி, எண்டோ பிளாஸ்மிக் ரெட்டிகுலம் (EPR), சென்ட்ரியோல், அமினோ அமிலம், மைட்டோகான்றியா போன்ற ஏராளமான சமாச்சாரங்கள் மிதக்கின்றன.



செல்லின் உட்கருவில் மரபியல் தொடர்பான DNA, RNA என்ற நியூக்ளிக் அமிலங்களும், DNA யில் குரோமசோம் தொகுப்பும், அதில் மரபணுக்கள் வரிசையும் (Gene) உள்ளன. ஒரு செல்லானது பிரிந்து இரண்டாகும் போதும் (Cell Division), பிளவிப்பெருக்கத்தின் போதும் உதவும் அமைப்பு செண்ட்ரியோல் ஆகும். அமினோ அமிலங்கள்தான் புரதம் உருவாக்கத்தில் அடிப்படை அலகாகச் செயல்படுகின்றன. நம் உணவு செறித்தபின் அமினோ அமிலம், கொழுப்பு, சர்க்கரை என அவைகள் தன்மயமாதல் மூலம் மாற்றப்பட்டு உயிர் அணுக்களுக்கு இரத்தத்தின் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இவைகள் மைட்டோகான்றியா என்ற தொழிலகத்தில் ATP என்ற சக்தியாக மாற்றப்படுகின்றன. இப்படியாக செல்லில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் என சில குறிப்பிட்ட பணிகள் உண்டு.


EPR ல் சக்தியாக மாற்றப்பட்ட கொழுப்பும், ரிபோசோம்கள் உருவாக்கிய புரதமும் பிறசெல்களுக்கு கால்கேபாடி என்ற துறைமுகம் மூலம் ஏற்றுமதியாகின்றன.



ரிபோசோம்களை செல்லில் புரதம் தயாரிக்கும் தொழிற்சாலை எனலாம். 60% RNA, 40% புரதத்தால் ஆன இந்த நுண்மணி, EPRல் ஒட்டிக் கொண்டிருக்கும் ஓர் அமைப்பு. இந்த ரிபோசோம்கள் தயாரித்து வெளியிடும் புரதங்கள்தான் இந்த உலகில் உயிர் வாழும் அத்தனை உயிரினங்களின் உடலில் நடைபெறும் ரசாயண மாற்றங்களுக்கும் காரணம் எனலாம்.


ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ஹீமோகுளோபின், நோய் எதிர்ப்பு அணுக்கள் (ANTI-BODIES), கணையம் மற்றும் நாளமில்லா சுரபிகள் சுரக்கும் ஹார்மோன்கள், என்சைம்கள் போன்றவைகள் நம் உடலில் உள்ள ஆயிரக் கணக்கான புரதங்களில் சில. இவைகள் அனைத்துக்கும் தனித்தனியான பணிகள் இருக்கின்றன.


சரி. இதில் நம் விஞ்ஞானி ராமகிருஷ்ணன் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் என்ன?


நோய் எதிர்ப்பு மருந்துகள் பாக்டீரிய ரிபோசோம்களில் செயல்படும் விதம்


ரிபோசோமின் முப்பரிமான வரைபடம்

நம் உடலில் ஏற்படும் பெரும்பாலான நோய்களுக்கு பாக்டீரியா எனப்படும் நுண்ணுயிர்தான் காரணம் என்பது நாம் அறிந்ததே. இந்த பாக்டீரியா, ஒரு செல் உயிரி வகையைச் சேர்ந்தது. இவற்றில் உட்கரு கிடையாது. ஆனால் ரிபோசோம்கள் உள்ளன. இந்த ரிபோசோம்களில் நோய் எதிர்ப்பு மருந்துகள் செயல்படும் விதம் குறித்து இராமகிருஷ்ணன் ஆராய்ந்தார். இதன் பயனாக அந்த குறிப்பிட்ட பாக்டீரியாவில் உள்ள ரிபோசோம்களை முடக்கக் கூடிய மருந்துகளை நம்மால் உற்பத்தி செய்ய முடியும் என்றும் அவர் கணடறிந்தார். இதன் மூலம் அந்த பாக்ட்டீரியாவினால் ஏற்படும் நோய்களை நாம்மால் கட்டுப்படுத்தி விடமுடியும் என்பது அவரது ஆராய்ச்சியின் சாரம். இதற்கு ரிபோசோம்களின் கட்டமைப்பு, மற்றும் செயல்பாடுகள் பற்றி நாம் துல்லியமாக அறிந்து கொள்வது மிகவும் அவசியம். ரிபோசோம்கள் நம் உரோமத்தின் குறுக்குவெட்டில் 2000ல் ஒரு பங்கு பருமன் அளவே உடையது.


கி.பி 2001 ஆம் ஆண்டு வரை விஞ்ஞானிகளால் ரிபோசோம்களின் உட்கட்டு அமைப்பை அறிந்தது கொள்ள முடிந்த போதிலும், அதில் பொதிந்துள்ள சிக்கலான நியூக்ளிக் அமிலங்களின் அமைப்பு பற்றியோ, அதில் உள்ள ஏராளமான RNA–புரதத் தொகுப்பு பற்றிய உண்மைகளையோ அதன் உள்ளே புகுந்து ஆராயக்கூடிய சாத்தியம் மனிதனுக்கு அந்த கால கட்டம் வரை அறவே இல்லை.


(Ribosomes contain more than 50 Proteins and thousands of RNA)

ரிபோசோம்கள் பற்றி அணுவியல் ரீதியிலான ஒரு முப்பரிமான வரைபடத்தை (Atomic level image) நம்மால் உருவாக்க முடிந்தால்தான் மேற்சொன்ன அதன் செயல்பாடுகள் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடியும். இது நம் கற்பனைக் கெட்டாத ஒரு சங்கதி என்ற ஒரு நிலையில்தான் நம் ராமகிருஷ்ணன் சக விஞ்ஞானிகளோடு இணைந்து இந்த அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்காக அவர் கைக்கொண்ட தொழில் நுட்ப யுக்தி எக்ஸ்ரே கிரிஸ்டலோ கிராபி என்பதாகும். இந்த முறையில் ரிபோசோம் உட்கூறுகளின் மூலக்கூறான நுண்ணணுக்களை செல்களிலிருந்து வெளியே பிரித்தெடுத்து, அதைச் சுத்தப்படுத்தி படிகமாக மாற்றிய பின் அவற்றை ஊடுகதிர் (x-ray) மூலமாக ஆராய்ச்சி செய்தார்.


இதற்காக ரிபோசோம்களில் உள்ள ஆயிரக்கணக்கான நுண்ணணுக்களின் மூலக்கூறுகள் பற்றி ராமகிருஷ்ணன் ஆராய்ந்து ஒரு முப்பரிமான வரைபடத்தை உருவாக்கி, ரிபோசோமில் நோய் எதிர்ப்பு மருந்துகள் செயல்படும் விதங்கள் பற்றியும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் முடிவு, மனிதனால் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்கு இனி நம்மால் புதுப் புது மருந்துகளை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை மனிதகுலத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.


இயற்கை இதுகாறும் இரகசியம் என்று போற்றிக் காப்பற்றி வந்த பல உண்மைகளை இந்த ஆராய்ச்சி உடைத்து அம்பலப்படுத்தி இருக்கிறது.


பல ஆண்டுகளுக்கு முன் DNA வைக் கண்டுபிடித்த பிரான்சிஸ் கிரீக் மற்றும் ஜேம்ஸ் வாட்சன் போன்றோருக்கே புரியாத புதிராயிருந்த இந்த பிரம்ம சூத்திரம், இன்று ராமகிருஷ்ணனின் உழைப்பால் வெளிச்சதிற்கு வந்திருக்கிறது.


ரிபோசோம் செயல்படும் விதம்:

நாம் கட்டுகின்ற வீடு எப்படி இருக்க வேண்டும், எது எது எங்கு அமைய வேண்டும் என்று தீர்மானித்து ஒரு நிழல் உரு வரைபடம் (Blue Print) தயாரிக்கிறோம். அதேபோன்று உருவாகப் போகும் ஒரு புதிய செல்லிற்கு ஒரு புரோட்டின் அமைப்பு எப்படி எதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் நிபுணர் DNA ஆவார். செல்லின் உட்கருவில் நிறை வேற்றப்பட்ட இந்த தீர்மானம், நகல் வடிவில் தூதர் RNA (Messenger RNA) மூலமாக ரிபோசோம் களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சைட்டோபிளாசத்திலிருந்து அமினோ அமிலம் ரிபோசோம்களுக்கு Transfer RNA மூலம் கொண்டு வரப்படுகிறது. DNA கட்டளையை நிறைவேற்றும் விதமாக அதன் சங்கேத மொழிப்படியே அமினோ அமிலங்களை செங்கற்களைப் போல் அடுக்கி, ரிபோசோம் புதிய புரதங்களை உருவாக்குகின்றது. DNA உத்தரவின்படி அச்சுப்பிசகாமல் காலம் காலமாக நிகழ்ந்து வரும் ரிபோசோம்களின் இந்த தவறில்லாத செயல்பாடு நமக்கு இது வரை ஒரு புரியாத புதிராகவே இருந்து வந்தது. இன்று இது எப்படி நிகழ்கிறது என்ற மர்ம முடிச்சும் அவிழ்க்கப்பட்டுள்ளது.


Protein synthesis is at the ribosome interacted by mRNA momentarily Bonding with t RNA


Information providers: The Times of India, The New Indian Express, BBC Science news, The world Book Encyclopedia, http//micro.magnet.Fsu.edu.