Wednesday, November 30, 2016

மாயச்சிலை - முன்னோட்டம்





வரலாறு தெரிந்தால் தான் வரலாறு படைக்க முடியும் என்பது சான்றோர்கள் வாக்கு. உலக நாடுகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு வரலாறு உண்டு. மன்னர் செய்திகள் மட்டுமல்லாது மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வரலாற்றையும் அறிந்து கொள்வது மிக அவசியம். அதற்கு அவர்கள் பேசும் மொழிதான் ஆணிவேர். 

ஐரோப்பாவில் மிகப்பெரிய நாடு என்றாலும் மிகச் சிறிய நாடு என்றாலும் அனைத்தும் மொழியின் அடிப்படையிலேயே பிரிந்து கிடக்கின்றன. நம்மை 300 ஆண்டுகள் ஆண்ட ஐக்கிய முடியரசு (United Kingdom) என்ற கிரேட் பிரிட்டன் கூட இங்கிலாந்து, வட ஐயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் என்ற நான்கு உறுப்பு நாடுகளின் கூட்டமைப்பாகும். அந்த கூட்டமைப்பு ஆங்கிலம், ஐரிஷ், ஸ்காட்டிஷ், வேல்ஷ் என்ற நான்கு மொழி அடிப்படையிலான பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளது. அந்த ஒவ்வொரு உறுப்பு நாடும் எப்போது வேண்டுமானாலும் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்லலாம். அந்த அளவிற்கு ஐரோப்பாவில் ஒரு மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அங்கு முன்னர் யு.எஸ்.எஸ்.ஆர் என்ற சோவியத் ஒன்றியமும், யுகோஸ்லாவியாவும் சிதறுண்டது மொழி அடிப்படையிலேயே. எனவே மொழி என்பதுதான் ஒரு இனத்தின் முக்கிய அடையாளம். 

இலக்கியப் படைப்புகள், கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், புதைபொருட்கள், புராதன சின்னங்கள், நாணயங்கள், பழங்காலக் கட்டிடச் சிதைவுகள், சிற்பச்சின்னங்கள், சிலைகள் போன்றவைகள். ஒரு மொழியின் வரலாற்றுக்கு ஆதாரமாக இருக்கின்றன. இத்தகைய தமிழ் மொழியின் ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்டதே தமிழக வரலாறு. 

இத்தகைய ஒரு மொழியின் வரலற்றுக்கு ஆதாரமான சிலைகளைக் திருடுவது என்பது பொருளாதார குற்றம் மட்டுமல்ல நமது கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் ஆகும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் சிலை தடுப்பு மையங்கள் உள்ளன. 

தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மொத்தம் 25000 என மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் இதுவரை வெளியிடப்பட்டவை சிலவே. இன்னும் பல்லாயிரம் கல்வெடுகள் வெளிவராமல் கல்வெட்டுச் சாசன ஆய்வகத்திலேயே முடங்கிக் கிடக்கின்றன. அவையும் பதிப்பில் வருமாயின் தமிழ்மக்கள் வரலாறு மிகவும் விரிவாக எழுதப்படலாம் என்பதில் ஐயம் இல்லை.

கடவுள் இருக்கிறார் இல்லை என்பது தனி விவாதத்திற்குரிய பொருள். அதற்குள் நாம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நம்பிக்கை என்பது கடவுளாகட்டும் ஏதாவதொன்றாகட்டும் அது ஆதிமனிதனின் அடி நாதத்திலிருந்து காலங்காலமாகக் கடமைக்கப்பட்டு வந்திருக்கிறது. அது அந்தந்த காலத்தின் சூழ்நிலைக்கேற்ப மாறிவந்திருக்கிறது. மனித குலம் காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்த காலத்திலிருந்து இனத்தையும் குலத்தையும் காக்கும் மாண்பை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையையே கடைப்பிடித்து வர காரணியாக இருந்திருக்கிறது. அதுவே கலைகளாக பிற்காலத்தில் உருக்கொண்டடுள்ளது. 

தமிழர்கள்  தங்கள்  கடவழித்தொடர்பால் உலக நாகரிக சமூகத்துடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். அனைத்து நாகரிகங்களின் சங்கமமாக கலைகளுக்காகவே கோயில்களைத் தமிழன் கட்டினான். எகிப்து பிரமிட் நம் கோயில் கோபுரங்களில் பிரதிபலிப்பது இதற்கு ஒரு சிறந்த உதாரணம். கோயில்களும், ஏடுகளும், கல்வெட்டுகளும் மட்டும் இல்லாது போயிருந்தால் வழக்கொழிந்த எகிப்து, கிரேக்க, ரோமானிய, இன்கா, மாயா நாகரிகங்களுடன் தமிழினமும் சேர்ந்திருக்கும். எனவே நம் இனத்தை பேணிக் கட்டிக்காக்க நம் மூதாதையர்கள் வகுத்துக் கொடுத்த வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது அவசியம். 

சோழர்கள் கடல் கடந்தும் தமிழர் நாகரிகத்தைப் பரப்பினார்கள் என்றால் நம் அனைத்து சமூகங்களும் ’அரசன்’ என்ற ஒருவனுக்காக ஒன்றுபட்டு தங்கள் இன்னுயிரைத் துச்சமாக மதித்து ஒற்றுமையாக உழைத்தார்கள். சோழப்பேரரசு மேற்கே பழந்தீவு பன்னீராயிரம் (இப்போதைய மாலத்தீவுகள்) முதல் கிழக்கே கடாரம் வரை (மலேயா, இந்தோனேசியா) பரந்து விரிந்ததற்கு மூல காரணம் நமது ஒற்றுமை..

நாலு வகுப்பும்இங் கொன்றே – இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்,
வேலை தவறிச் சிதைந்தே – செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி 

என்று முரசு கொட்டுகிறான் பாரதி. இது மானிட சாதியில் தமிழருக்குத்தான் பெரிதும் பொருந்தும். .’நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே’ என்பதை நாம் இனியாகிலும் மனதில் கொள்ள வேண்டிய நேரமிது. 

நமது பண்பாட்டு அடையாளங்களான ஐம்பொன் சிலைகளைக் கடத்துவது என்பது நமது கலாச்சாரத்தின் ஆணிவேருக்கு வென்னீர் ஊற்றுவதற்குச் சமம். அதுபற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாவலின் முக்கிய நோக்கம். ஏற்கனவே கடத்தப்பட்ட சிலைகலை மீட்பதில் ‘India Pride Project’ போன்ற இணைய அமைப்புகள் நமது சிலைகளை மீட்பதில் ஆர்வங் கொண்டு வெற்றி பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம். 

ஆலமரத்தை ஏன் கும்பிடுகிறோம்? வேர்கள் பட்டுப்போனாலும் விழுதுகள் மரத்தை காக்கும் மாண்பு அதற்கு உண்டு என்பதால்தான். அது வயதான பறவைகளின் சரணாலயமும் கூட.

கல்வெட்டுத் தகவல்கள் ஏட்டளவிலும், தொல்லியலாளர்கள் அளவிலும் கல்விச்சாலைகள் மட்டத்திலும் இருந்த செய்திகளை தனது சரித்திர நாவல்கள் மூலம் பொதுமக்களைச் சென்றடையச் செய்தவர்   அமரர் கல்கி. அவரது ’பொன்னியின் செல்வன்’ எத்தனையோ சரித்திரக் கதாசிரியர்களுக்கு உந்துசக்தியாகக் திகழ்ந்துள்ளது. எனது இக்கதையும் அந்த ஆலமரத்தின் நூற்றுக்கணக்கான விழுதுகளின் ஒரு சிறு துளிரே. அந்த சரித்திர நாவலைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் இந்தக் கதைக்கான கரு என்னுள் உருக்கொண்டு வளர்ந்து, இன்று இந்த நாவலாக மலர்ந்துள்ளது. அதைப்பற்றி இங்கேயே விவரித்துவிட்டால் நாவலைப் படிப்பதில் சுவரஸ்யம் இராது. படித்து முடித்ததும் நேயர்களே அறிந்துகொள்வார்கள். சரித்திரத் தகவல்களை மக்களிடம் பகிர்ந்துகொள்ளும் எனது இந்த சிறிய முயற்சியை நேயர்கள் வரவேற்பார்கள் என பெரிதும் நம்புகிறேன். நன்றி.


Sunday, July 17, 2016

பூ உலகின் நண்பன் சீரொளி!

ஒரு குண்டூசியின் தலையில் இருநூறு துளைகள் போட வேண்டுமா? அல்லது ஒரு மீட்டர் விட்டமுள்ள நீண்ட இரும்பு உருளையை சம அளவில் 1/1000 மி.மி சுத்தமாக அறுத்துத் துண்டு போட வேண்டுமா? மிகத்துல்லியமான அளவில் பிசிறில்லாமல் அவற்றை என்னால் செய்து முடிக்க முடியும்!


மற்ற உலோகங்களை அறுக்க இயற்கையில் கிடைக்கும் மிகக் கடினமான பொருள் வைரம். ஆனால் வைரத்திலேயே துளை போட வேண்டுமா? அதுவும் என்னால்தான் செய்ய முடியும்!

மிக நுட்பமான கண் அறுவைச் சிகிச்சையா? கூப்பிடு அவனை என்று என்னைத்தான் டாக்டர்கள் உதவிக்கு அழைப்பார்கள்!


யுத்தகளமா? கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வழி நடத்தி, மிகத் துல்லியமாக இலக்கைத் தாக்கச் செய்ய என்னால் மட்டுமே முடியும்!


ஒலிம்பிக் போன்ற விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப, இறுதி விழாக்களின் போது வார்ணஜால வித்தைகள் மூலம் காண்போரைக் களிப்படைய வைக்கும் காண் ஒளிக்காட்சிகளை உருவாக்குவதும் ஐயா நானேதான்!


பெரு வணிக நிறுவனங்களில் (Departmental Stores) கணிணி விலைப்பட்டியல் (Billing) தயாரிப்பில்  பொருளின் மீது இருக்கும் பட்டைக் குறியீடு (Bar coding) விலையை வாசித்து அச்சிட்டுக் கொடுப்பதும் அடியேன்தான்!


நவீன முறை படத்தயாரிப்பில் ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, சேகரிப்பு, சிடி, டிஸ்க், போன்றவற்றின் பதிவு மற்றும் தேவைப்படும் போது அவற்றை வாசிக்க என அனைத்து வழிகளிலுமே எனது பயன்பாடு மிக மிக முக்கியமானது.


பதிப்பகத்துறையில் அச்சு முறையைத் தூக்கி எரிந்துவிட்டு, கணிப்பொறி மூலம் டைப்பிங், பிரிண்டிங், என அனைத்து வகை வேலைகளிலும் முக்கியப் பங்கு வகிப்பதும் நானேதான்!.


இப்படி மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரிய பெரிய தொழிற்சாலைகள் முதல் சிறிய தொழிற் கூடங்கள், கட்டுமானம், அணுசக்தி, வானியல் ஆய்வு, மருத்துவம் பொறியியல், பொழுதுபோக்கு, விளையாட்டு (Laser Tag) என அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்துள்ளேன் நான்.


1960-ல் உலகிற்கு என்னை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது எனது தந்தையான அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி ’தியடோர் ஹாரோல்டு டெட் மைமன்’  (Theodore Harold Ted Maiman) என்பவர் ஆவார். சிவப்பு இரத்தினக்கல் படிகத்தைக் கொண்டு கதிர்வீச்சின் தூண்டு உமிழ்வு மூலம் செறிவூட்டப்பட்ட ஒளிக்கற்றையான என்னை முதன் முதலில் ஒரு கருவியில் உருவாக்கி அதை வெற்றிகரமாக அவர் இயக்கிக் காட்டினார்! அந்நிகழ்வுதான் ஒரு குழந்தையாக உலகிற்கு நான் அறிமுகமான நாள்!


நான் முன்று முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளேன்.


1. மின்சாரம் அல்லது ஒளி போன்ற ஒரு சக்தியளிக்கும் கலன். (Energy Source).
2. ஒரு செயற்கருவி. (An Active Medium). இக்கருவியில் உள்ள அணுக்கள் முதல் கருவி அளிக்கும் சக்தியை உறிஞ்சுக்கொள்ளூம்.
3. ஒரு ஆப்டிக்கல் உள்ளீடு. (An optical cavity) இவ்வமைப்பு, உள்ளீட்டினுள்ளே என்னைக் கட்டமைத்து, வெளியே சுற்றிலும் மூடியிருக்கும். (A structure enclosing the active medium)  


இப்போது 1. திட (Solid state), 2. திரவ (Liquid), 3 அறைக் கடத்தி (Semiconductor) 4. வளி (Gas), மற்றும் வேதியல் (Dye) எனப் பலவகைகளிலும் என்னை உருவாக்குகிறார்கள்.  

இன்னுமா என்னைத் தெரியவில்லை? புரிகிறது. என்னைத் தெரிந்து கொண்டீர்கள்.

-- L A S E R --

ஆனால் என்னைத் தமிழில் எவ்வாறு அழைக்கிறார்கள்? யோசியுங்களேன்!

'சீரொளி'! 





     





புதிர்: 


யிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்ட ஒருவன் கண் பட்டு உடைந்ததாம் மண்டபம் அது என்ன? 

தேன் கூடு! 

Sunday, June 26, 2016

மெர்குரிப் பெண்ணே…(குறுங்கதை)

ன்று காலை மணி 8 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது...


ரகு முதல் வகுப்புப் படிக்கும் தன் மகள் மாலாவுக்கு காலில் சாக்ஸை அணிவித்தபடி பள்ளிக்கு அவசரப்படுத்திக் கொண்டிருந்தான் “சீக்கிரமா எந்திரின்னா கேக்கறியா?”


”படிச்சவன் பாட்டக்கெடுத்தான் எழுதினவன் ஏட்டக் கெடுத்தான்”. அந்தக்காலத்துப் பாட்டிமார் வெற்றிலை உரலை இடித்தவாறே ’சொலவடைகளை’ அள்ளிவிடுவார்கள். இடம், பொருள் பார்த்து ஏவப்படும் இந்த வாய்வழிச் சொல்லாடலுக்கு சக்தி மிக அதிகம்! 

இந்தக் காலத்து அம்மாயிப் பாட்டிக்கு இடிக்க உரல் ஒன்று தான் இல்லை. ஆனால் ஏவிவிடும் ’சொலவடைகள்’ நாட்டு வெடிதான்!  டிவியை விட்டால் வேறு பொழுது போக்கே இல்லாத அம்மாயிப்பாட்டி டிவியில் ஜோசியம் பார்த்துக் கொண்டே  இப்போது இடித்துக் காட்டியது தன் மகன் ரகுவை!


”ஏட்டுச் சுறக்கா எங்காவது கறிக்கு உதவுமா?” அடுத்த அணுகுண்டு பாட்டி வாயிலிருந்து  வெளிவந்தது.


”ஏம்மா இப்படி காலங்காத்தால உயிர வாங்கறே!” வெடித்தான் ரகு


”ஆமாடா நான் எது சொன்னாலும் உனக்கு வேப்பங்காயாத்தான் இருக்கும். உனக்குத் தெரியாதா? எதிர்த்த வீட்டு விமலாவ? அவ அப்பன் ஊர்ல இல்லாத படிப்பெல்லாம் படிக்கவச்சான். கடைசில அவ ஒரு மளிக கடைக்காரனுக்கு வாழ்க்கைப்பட்டா. இப்ப அவ கடையே கதின்னு கெடக்கா! இந்த பச்ச மண்ண காலங்காத்தாலே இப்படி இம்சப் படுத்தறயே? இவ என்னத்த நாளைக்கு சாதிக்கப் போறா?”


”அப்பா சொத்து பத்தெல்லாம் வித்துத்தான் என்னைப் படிக்க வச்சார். அந்த படிப்பு தான் இப்ப நமக்கு சோறு போடுது? படிப்பைக் குறை சொல்லாதம்மா?”


”நான் சொன்னது பொட்டப் பிள்ளைங்களப் பத்தி மட்டுந்தான்.. மாடில இருந்தாளே அர்ச்சனா, நல்லாத்தான் படிச்சா! நல்ல வேலைக்கும் போனா. கல்யாணத்துக்கப்புறம் அவ புருஷன் வீட்ல வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லிட்டங்க. கடைசியில் என்னாச்சு! எல்லாம் விழலுக்கு இரைத்த நீராத்தான் போச்சு.


”நீ கிணத்துத் தவளை மாதிரி இங்க சுத்தி நடக்கிறது தான் உலகம்னு  பேசாதம்மா”.


”பொம்பளப் புள்ளக்கி நாலு எழுத்து எழுதப்படிக்கத் தெரிந்தா போதாதா?. நான் பள்ளிக்கூடத்துப் பக்கம் மழைக்குக்கூட ஒதுங்கினதில்ல. இப்ப எனக்கு என்ன குறைச்சல்? உன் பெண்டாட்டி வர்ஷாவும்தான் கல்யாணத்துக்கப்புறம் காச கரியாக்கி கம்யூட்டார் அது இதுன்னு…”


”நீ கடைசில சுத்தி சுத்தி எங்க வருவேன்னு எனக்குத் தெரியும்மா. ஔவைப் பாட்டியும் அந்தக் காலத்துல ஒன்ன மாதிரி ஒரு பொம்பளை தான். அவங்க யாரையும் படிக்க வேண்டாம்ணு சொல்லல. அவங்க சொன்ன ஆத்திசூடிதான் இன்னிக்கு அரிச்சுவடியா அத்தனை பசங்களும் பள்ளிக் கூடத்துல படிக்கிறங்க. அடபோம்மா. உன் வார்த்தைகள் எந்தக் காலத்திலும் அம்பலம் ஏறப்போறதில்லே.”


”சரிடா. உன் வழிக்கே வர்றேன். உன் பொண்ணு மாலாவைப் படிக்கவை. வேண்டாங்கல. உன் பொண்டாட்டிக்கு ஏழு கழுத வயதாகிறது. அவளுக்கு அவ அப்பன் வீட்ல இல்லாத படிப்பு இப்ப என்ன வேண்டிக்கிடக்கு? புள்ளய கவனிக்காம பொண்டாட்டிய சுத்தவிட்டுட்டு பொட்டப்புள்ள கால காலைல புடிச்சிட்டிருக்காம்பாரு வெட்டிப்பய!”


"அம்மா! சும்மா கத்தாதே! வர்ஷா காதுல விழுந்துடப் போகுது? அவ படிச்சது ஐஏஎஸ் னு ஒரு பெரிய படிப்பு..  தமிழ்நாட்டிலேயே முதல் ரேங்ல பாஸ் பண்ணீட்டா. இப்பத்தான் ரிசல்ட் வந்திருக்கு. கல்விக்கு வாழ்கையையே  மாற்றும் வல்லமை உண்டு புரிஞ்சுக்கோ!  நாளைக்கு இந்த ஜில்லாவுக்கு கலெக்டரா வந்து உன் வாயத்தான் முதல்ல தைக்கப்போறா பாரு!"


”அப்போதுதான் வெளியிலிருந்து வந்த வர்ஷா அத்தே! வீட்ட பாத்துக்கோங்க. நான் மாலாவ ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடறேன்.” என்றவாறே ஸ்கூட்டரைக் கிளப்பினாள் வருங்கால கலெக்டர் வர்ஷா.


”அம்மாயிப் பாட்டி வாயடைத்துப் போனாள். சொலவடை சொன்ன வாய் சொல்லத்துப் போய் மூடிக்கொண்டது .”  

------



மெர்க்குரிக் கிரகம் 450”சி வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு வெகு அருகில் முதல் சுற்று வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. பெண்கள் வீட்டிலேயும் வெளியிலேயும் அம்மாயிப் பாட்டி மாதிரி அத்தனை பேரோட இடியையும் தாங்கிச் சகித்துக் கொண்டுதான் வாழ்க்கையில் முன்னேற வேண்டியுள்ளது.  வீட்டில் பெரியவங்க இச்செயல்களைப் பாராட்டா விட்டாலும் பேசாமலாவது இருக்கலாம்!