Wednesday, August 31, 2011

அணுசக்தி பிறந்த கதை-2


அணுவின் அமைப்பு: உலகின் சின்னஞ் சிறிய பொருள் அணு என்று நாம் கூறினாலும் அந்த அணு மூன்று உட்பொருள்களால் ஆனது என்றால் ஆச்சர்யமாய் இருக்கிறதல்லவா? புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலெக்ட்ரான் என்ற மூன்று மூலக்கூறுகளைத்தான் அணுவைக் கட்டமைக்கும் உட்பிரிவு அணுத் துகள்கள்  (Sub atomic particle)  என்று நாம் அழைகிறோம்.



இந்த மும்மூர்த்திகளில் புரோட்டான், நியூட்ரான் இரண்டும் கூட்டணியாக இணைந்து பின்னிப் பிணைந்து  எலெக்ரான்களிலிருந்து வெகுதூரம் விலகி அணுவின் மையத்தில் அணுவின் உட்கரு (Nucleus) என்ற பெயரில் குடிகொண்டுள்ளது. எலெக்ட்ரான் எனப்படும் இந்த மின்னனு உட்கருவை அசுர வேகம், மின்னல் வேகம் என்ற வார்த்தைகளில் அடங்காத பத்துலட்சத்தில் ஒரு பங்கு வினாடியில் ஒரு சுற்று என்ற அதிசயிக்கத்தக்க வேகத்தில் சுற்றி வருகின்றன.




எலெக்ட்ரான்களின் இந்த சுழற்சி வேகம்தான் அணுவுக்கு முட்டை ஓடு போன்ற ஒரு வெளிப்புறத் தோற்றத்தை அளிக்கின்றது. இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம் 6 கி.மீ அகலம் என்று கற்பனை செய்து கொண்டால் அதன் மையத்தில் ஒரு டென்னிஸ் பந்தின் அளவுதான் ஹைட்ரஜன் அணுவின் உட்கரு இருக்கும். இந்த  உட்கருவிலிருந்து 3 கி.மீ அப்பால் சுற்றி வரும் எலெட்ரான்கள்தான் அணுவுக்கு ஒரு திடத்தோற்றத்தைத் தருகின்றது. எலெக்ட்ரான்களுக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட தூரம் எதுமேயற்ற ஒரு வெற்றிடம்! ஆனால் எலெக்ட்ரான்களின் சுழற்சியினால் உருவாகும் இந்த மாயச் சுவரைக் கடந்து இந்த சூன்யத்துற்குள் எதுவுமே நுழைந்து விட முடியாது. எப்படி ஒரு மின் விசிறி சுழலும் போது ஒரு பென்சிலை இறக்கைகளின் சுழற்சியில் நுழைத்தால் உட்செல்ல முடியாதோ அப்படித்தான் அணுவுக்குள்ளும் எந்த ஒரு சக்தியும் நுழைய முடியாது.

அணுவின் இந்த அமைப்பை சூரிய குடும்பத்தோடும் ஒப்பிடுவதுண்டு. அணுவின் உட்கருவை சூரியன் என்று வைத்துக் கொண்டால் எலெக்ரான்கள் தான் கிரகங்கள் ஆகும். ஆனால் கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட பாதையில் சுற்றிவருவது போல் அணுவின் உட்கருவை எலெக்ட்ரான்கள் சுற்றுவதில்லை. அப்பாதையைக் கண்காணிப்பது என்பதும் அவ்வளவு சுலபமில்லை. மேலும் அணுவின் உட்கருவில் புரோட்டான்களும் நியூட்ரான்களும் ஒரே இடத்தில் நிலை கொள்ளாமல் இடம் மாறி மாறி நகர்ந்து கொண்டே இருக்கும்.

ஒரு அணு நிறையின் (Mass) பெரும் பங்கு அதன் உட்கரு எனலாம். ஏனெனில் எலெக்ரான்கள் வெகு இலகுவான நிறையுடையது. ஒரு புரோட்டான் 1836 எலெக்ரான்களின் நிறை கொண்டது. ஒரு நியூட்ரான் 1839 எலெக்ரான்களின் நிறை கொண்டது என்றால் ஒரு எலெக்ரானின் நிறையை நாம் ஒருவாறு யூகிக்கலாம். ஒவ்வொரு புரோட்டானும் ஒரு யூனிட் நேர் மின் சக்தியைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு எலெக்ட்ரானும் ஒரு யூனிட் எதிர்மின் சக்தியைக்கொண்டிருக்கும். நியூட்ரான்கள் மின்னோட்டம் எதுவுமே இல்லாத சமநிலை யுடையவை ஒரு அணுவில் புரொட்டான்களின் எண்ணிக்கையும்  எலெக்ட்ரான்களின் எண்ணிக்கையும் பெரும்பாலும் சமஅளவில் இருப்பதால் அணுக்களும் சமநிலை மின்னோட்டம் (Electrically Neutral) உள்ளவை எனலாம்.




ஒரு அணுவுடன் ஒப்பிடும்போது ஒரு புரொட்டானும் நியூட்ரானும் லட்சத்தில் ஒரு பங்கு சிறியவைகள். இந்த புரொட்டானும் நியூட்ரானும் கூட மேலும் சின்னஞ் சிறிய குவார்க்ஸ் எனப்படும் நுண்துகள்களால் ஆனவை.

ஆனால் எலெக்ட்ரான்கள் அப்படி அல்ல. இவைகள் எந்த ஒரு நுண்துகள் களாலும் ஆனவை அல்ல. எலெக்ரான்களின் நிறையோ வெகு சொற்பமே என்றாலும் எலெக்ட்ரான்கள் எதிர்மின் சக்தி கொண்டவைகள் என்பதால் அது  உட்கருவால் ஈர்க்கப்படுகின்றது. எதிர் மின்னோட்டம் கொண்ட எலெக்ட்ரான் கள் உட்கருவிலிருந்து விலகிச் செல்லவே முயலும். முடிவில் அதனதன் ஈர்ப்பு சக்தியால் சூரியனை கிரகங்கள் சுற்றிவருவது போல் எல்லா எலெக்ட்ரான்களும் உட்கருவைச் சுற்றி வலம் வருகின்றன.  இதில் அதிக எதிர்மின் சக்தி கொண்ட எலெக்ட்ரான்கள் உட்கருவிலிருந்து நம் யுரேனஸ் கிரகத்தைப்போல் வெகுதூரம் விலகியும் குறைந்த சக்தி கொண்ட எலெக்ட்ரான்கள் உட்கருவின் அருகில் புதன் கிரகத்தைப்போல் பல்வேறு அடுக்குகளில் (Shell) சுற்றி வருகின்றன.


இயல்பு நிலையில் எந்த பாதிப்புக்கும் ஆட்படாமல் உள்ள அணு ஒரு பெட்டிக்குள் கிடக்கும் பட்டாசைப் போல் அடங்கிக் கிடக்கும் (Inert Stage). பட்டாசின் திரியில் ஒரு நெருப்புப் பொறி பட்டவுடன் அது வெடித்துச் சிதறு வது போல் அணுக்களும் ஏதாவது ஒரு வகையில் பாதிப்புக்கு உள்ளாகும் போது அவைகளும் வெடித்துப் பிளவுறும். இந்த அணுப்பிளவின் போது வெளிப்படும் அபரிமித சக்தியைத்தான் அணுசக்தி என்கிறோம். கண்களால் பார்க்கக் கூடிய திரியை நம்மால் எளிதில் பற்ற வைக்க முடியும். ஆனால் கண்களுக்கே புலப்படாத அணுக்களை எப்படிப் பற்ற வைத்துப் பாதிப்புக்கு உள்ளாக்குவது? ஆனாலும் கண்களுக்கே புலப்படாத இந்த அணுக்களையும் பிளந்து அதன் உள்ளே புகுந்து சாதித்துவிட்டான் மனிதன்!

இங்குதான் மனிதனின் மூளை எத்தகைய அபார சக்தி வாய்ந்தது என்பதை  நம்மால் உணர்ந்து கொள்ளமுடிகிறது.
       
          சந்திப்பு மீண்டும் தொடரும்

Tuesday, August 30, 2011

தீர்ப்புகள் திருத்தப்படவேண்டும்

தேரா மன்னா! செப்புவது உடையேன்;

எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,

புல் உறு புன்கண்தீர்த்தோன்; அன்றியும்,

வாயில் கடைமணி நடு நா நடுங்க,

ஆவின் கடை மணிஉகு நீர் நெஞ்சு சுட, தான் தன்

அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும் பெயர் புகார் என் பதியே;'

என்று கண்ணகி நீதிக்காக பாண்டிய மன்னனிடம் நின்ற காட்சிதான் இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் எந்த வழக்கிற்குமில்லாத வகையில் அதி முக்கியம் வாய்ந்த வழக்காக பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்குத் தண்டனை வழக்குக் கட்சிகள் நம் கண் முன்னே விரிந்து நிற்கிறது!

கோவலன் கொலையுண்ட நாளைப் போல் தமிழர் வரலாற்றில் ஒரு கறை படிந்த நாளாக மாற இருந்த செப்டம்பர் 9 தற்காலிகமாக வேறு ஒரு நாளுக்குத் தள்ளிப் போயிருக்கிறது.

ஆராயாமல் சொன்ன ஒரு தவறான தீர்ப்பிற்காக பாண்டிய மன்னன் யானே கள்வன்என்று தன் உயிரையே போக்கி பரிகாரம் கண்டான் அன்று!

தன் தேர்க் காலில் ஒரு பசுவின் கன்றைக் கொன்ற பாதகத்திற்கு தன் ஒரே மகனை மகன் என்றும் பாராமல் அதே தேர்க்காலில் அவனைப் பலிகொடுத்து தன் அரண்மனை ஆராய்ச்சி மணியை அடித்த ஒரு பசுவிற்கே நீதி வழங்கி நீதியை நிலைநாட்டினான் மாமன்னன் மனுநீதிச் சோழன்.

இந்த மண்ணுக்கே உரிய அந்தப் பெருமையை நிலைநாட்ட இன்று ஒட்டு மொத்த தமிழகமும் திரண்டு நீதிகாகப் போராடியிப்பது பெருமைக்குறிய விஷயம்.

மாமன்னன் மனுநீதிச் சோழன் சிலையைத் தாங்கி நிற்கும் சென்னை உயர்நீதி மன்றமோ ஓரளவு நீதியை நிலைநாட்டி தன் பெருமையை உயர்த்திக் கொண்டுள்ளது.

தேரா மன்னா! (ஆராயாமல் தீர்ப்பளித்த மன்னனே!) என்று எடுத்த எடுப்பிலேயே மன்னன் என்றும் பாராமல் பாண்டியனை நோக்கி கண்ணகி தன் சுட்டு விரலை நீட்டினாள் என்றால் தன் கணவன் கள்வன் அல்ல என்ற நீதியை நிலை நாட்டவேண்டும் என்ற வெறி அவளுள் எவ்வளவு கனன்று கிளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்?

அந்த வெறியை இன்று ஒட்டு மொத்த தமிழகத்தின் சுட்டு விரல்களும் புதுடில்லியை நோக்கி நீண்டதைக் கண்கூடாகக் காண முடிந்து.

தமிழர் பிரதிநிதிகளால் முன்மொழியபட்டு இன்று புதுடில்லியில் ஜனாதிபதி மாளிகையை அலங்கரிக்கும் மான்புமிகு குடியரசுத் தலைவி அவர்கள் பதவியேற்றவுடன் சென்னைக்கு வந்து தமிழர்களுக்கு ந்ன்றி சொன்னது உண்மையெனில் தாங்கள் வழங்கிய தீர்ப்பை திருத்தி எழுதுவார்கள் என நம்பலாம். நம்புவோம். இதன் முதல்படியாக மான்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அம்மூவர் தண்டனையையும் ஆயுள் தண்டணையாக மாற்றக்கோரி இன்று ஏகமனதாகத் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறை வேற்றியிருப்பது ஒட்டு மொத்த தமிழர்களின் உள்ளங்களையும் பிரதிபலிப்பதாக உள்ளது. ஆனல் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் அவர்களோ இத்தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறியிருந்தாலும் இதில் அவ்வளவாக நாம் கவலைப்பட ஒன்றுமில்லை.

ஏனெனில் இதே போன்றதொரு சூழல் கேராளாவில் 1957ல் கம்னியுஸ்ட் கட்சி தோழர் சி.கே பாலன் அவர்கள் மரண தண்டனை வழக்கிலும் நிலவியது. ஈ.எம் எஸ் நம்பியூதிரிபாடு அவர்கள் அமைச்சரவையில் உள்துறை மந்திரியாயிருந்த கே.வி கிருஷ்ணய்யர் அப்போது மத்திய உள்துரை அமைசராயிருந்த கோவிந்த வல்லப பந்த் அவர்களோடு போராடி சி.கே பாலனை தூக்கு மரத்தின் நிழலிருந்து மீட்டார் என்பது வரலாறு. இந்த பாலன் முன்பே மாநில ஆளுநருக்கு வேண்டுகோள் விண்ணப்பம் அனுப்பியிருந்தார். அது மறுக்கப்பட்டது. பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். அதுவும் மறுக்கப்பட்டது.

இதே கிருஷ்ணய்யர் பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தார். அவரிடம் உள்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் என்ற முறையில் இந்த வழக்கு வர அவர் ஆளுநரின் பார்வைக்கு அனுப்பின்னார். பாலனின் மரண தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று எழுதி அனுப்பினார். இதற்கிடையில் தில்லியிலிருந்து கடிதம் வந்தது. பாலனின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் முன்பே நிராகரித்து விட்டதால் ஆளுநர் இதனை மறுபரிசீலனை செய்ய முடியாது. அவருக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று! ஆனாலும் போராட்த்தில் இறுதியில் வென்றது கிருஷ்ணய்யர்தான். அதே போல் நமது முதல்வர்கள் அவர்களும் சாதிப்பார்கள் என உறுதியாக நம்பலாம்.

ஆயிரம் குற்றவாளிகள் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் வழியாக தப்பி விடலாம். ஆனால் ஒரே ஒரு நிரபராதி சட்டத்தினால் தவறாக தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பது தான் நீதியின் தாரக மந்திரம் என்றால் என்னை நிபந்தனையின்றி விடுவியுங்கள் என்று வாதிட்டவர் கே.வி பாலன் அவர்கள். அதன் எதிரொலிதான் வழக்கிலிருந்து விடுதலையாக பிற்காலத்தில் அவருக்கு உதவியது. அவரும் விடுதலையாகி தூக்கு மரத்தின் நிழல்என்ற தன் சுயசரிதத்தை நுலாக எழுதி பல காலம் வாழ்ந்தார்.

குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும்

கடை மணியின் குரல் காண்பெண்-காண் எல்லா!

திசை இரு-நான்கும் அதிர்ந்திடும்,

கதிரை இருள் விழுங்கக் காண்பெண்-காண் எல்லா!

விடும் கொடிவில் இர; வெம்பகல் வீழும்

கடுங் கதிர் மீன்; இவை காண்பெண்-காண் எல்லா!

என்ற கண்ணகியின் சாபத்திற்கு மதுரை இலக்கானாது போல் தமிழர்களின் சாபத்திற்கு ஆட்பட புதுடில்லி விரும்பாது என நம்புவோம். தூக்குக் கயிற்ரை முத்தமிட இருந்த மூவரையும் சி.கே பாலனை விடுதலை செய்தது போல் விடுதலை செய்யும் என்ற நம் நம்பபிக்கை வீண் போகாது!

Friday, August 26, 2011

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் – நிலவரை ரகசியம்

மெகனாஸ் கோல்டு, மாண்டி கிரிஸ்டோ கோமான், புதையல் தீவு (Treasure Island) போன்ற மேலைநாட்டுக் கதைகள் அக்காலத்து கடல் மாலுமிகளின் பயண அனுபவங்களிலிருந்து பிறந்தவைகள். அவைகள் பெரும்பாலும் கட்டுக்கதைகள் என்றே நம்பப்படுகிறது. ஏனென்றால் கதைகளில் சொல்லப்படும் அளவிற்கு ஒரே இடத்தில் பொற்குவியல்கள் இருப்பதாக கற்பனையில்தான் வர்ணிக்க முடியும்.

தங்கத்தாலான மகா விஷ்னு சிலை
 
கிருஷ்ணர் சிலை
திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்த பத்மநாபசுவாமி கோயில் இன்று உலகத்தின் கவனத்தையே தன் பக்கம் ஈர்த்துள்ளது. இக்கோயில் பாதள அறைகளில் கண்டுபிடிக்கபட்ட அரிய பொற்குவியல் பற்றிய சமீபகாலச் செய்திகள் மேற்சொன்ன கதைகளில் உண்மை இருக்குமோவென நினைக்கச் செய்கிறது. கோயில் பாதாள அறைகளில் இருப்பது தங்கச் சுரங்கமா? தங்க ஆபரணச் சுரங்கமா? பொன்மலையா? என்று மலைக்க வைக்கிறது. வார்த்தைகளில் அடக்க முடியாத அளவிற்கு நம்மைப் பிரமிப்பின் உச்சத்தில் கொண்டு நிறுத்தியுள்ளது. இந்த செல்வக் குவியல்களை மேற்சொன்ன கதைகளோடு ஒப்பிடவே முடியாது . ஏனெனில் அவைகளை மிக மிகச் சாதாரணமாக்கி விட்டார் பத்மநாபசுவாமிகள். 

 


மேலும் அக்கதைகள் பெரும்பாலும் இந்தியாவை மையபடுத்தித் தான் இருக்கும் எனவும் நம்ப இடம் இருக்கிறது.
கஜினிமுகமது குஜராத் சோமநாதபுரம் ஆலயத்தை 17 முறை படையெடுத்து வந்து சூறையாடிச் சென்றுள்ளார். அங்குள்ள விக்கிரகங்களை குதிரைகள் மீதும் யானைகள் மீதும் ஏற்ற முடியாமல் கோயில் முற்றங்களில் போட்டு உடைத்து துண்டு துண்டுகளக்கி ஏற்றியுள்ளனர். தங்கத்தாலான கருவறை மூலவர் விக்கிரகத்தை உடைக்க மாதக் கணக்கில் ஆனதாம். இதையெல்லாம் உணர்ந்துதான் பத்மநாபசுவாமிகள் திருவுருவச் சிலையை திருவாங்கூர் சமஸ்தான மன்னர்கள் தங்கத்தால் உருவாக்கினாலும் மூலவர் மேனியைக் கருங்கல் திருப்பணி செய்து மறைத்துள்ளனர்.
கஜினிமுகமதுவுக்குப் பின்னால் வந்த அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி மாலிக்காபூர் தங்க வேட்டைக்காக ராமேஸ்வரம் வரை வந்தவர் கலிங்கத்துப் பரணியில் ஜெயங்கொண்டார் வர்ணிப்பது போல் 
‘எழுந்தது சேனை யெழலு மிரிந்தது பாரின் முதுகு
விழுந்தன கானு மலையும் வெறுந்தரை யான திசைகள்.
அதிர்ந்தன நாலு திசைகள் அடங்கின ஏழு கடல்கள்
பிதிர்ந்தன மூரி மலைகள் பிறந்தது தூளி படலம்.

என எதிர்பட்ட நாடு நகரங்கலையெல்லாம் துவம்சம் செய்து விட்டுத் திரும்பினார்.
டெல்லி சுல்த்தான்களுக்குப் பின்னால் வந்த மொகலாயர்கள் போரிட்ட நாடுகள் மற்றும் சிற்றரசர்களிடமிருந்து செல்வங்களைக் கவர்ந்தாலும் நம் நாட்டிலேயே கோட்டை கொத்தளங்கள், தாஜ்மகால் போன்றவற்றைக் கட்டினர்.
ஆரம்பதில் சொன்ன ஆங்கிலக் கதைகளின் கர்த்தாக்களான ஐரோப்பியர்களோ ரிஷிமூலம் நதிமூலம் அறிந்து கடைசியாக இந்தியாவிற்கு வந்தவர்கள் இங்கே உள்ள மதிப்பு மிக்க செல்வங்கள் அனைத்தையும் அள்ளிக் கொண்டு சென்றனர். வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையைச் சுற்றியுள்ள காடுகளில் நூற்றாண்டுகள் பல கண்ட வைரம் பாய்ந்த மரங்களையெல்லாம் வெட்டி எடுத்த போது நம்மவர்கள் அவர்கள் மரங்களை வெட்டப் பயன்படுத்திய கருவிகளைக் கண்டு மெய்மறந்து நின்றனர்! விளைவு அடுத்த இரு நூறு ஆண்டுகளில் நமது அடிமைச் சருக்கம் ஆரம்பமாகி அது 1947 ஆகஸ்டு 15 வரை நீடித்தது.
லண்டனில் திப்புசுல்தான் வைரவாள், தங்க சிம்மாசனம் போன்ற அரிய வகைக் கலைச் செல்வங்கள் கோடிக்கணக்கான ரூபாய் வரை ஏலம் போனது. இன்னும் போகிறது. பிரிட்டிஷ் அரசியின் கிரீடத்தை அலங்கரிக்கும் கோகினூர் வைரம் போன்று மேலை நாடுகளின் அருங்காட்சியகங்கள் பலவற்றை அலங்கரிக்கும் அத்தனை பொக்கிஷங்களும் நம்மவர்களை வஞ்சித்து, ஏமாற்றி, ஈட்டி முனையில் கவர்ந்து செல்லப்பட்டவைகளே! 
சரித்திரம் கடந்து வந்த பாதையில் இத்தனை இடையூறுகளையும் தாண்டி இந்தப் பொக்கிஷங்களையெல்லாம் இன்று வரை பாதுகாத்து வந்த திருவாங்கூர் ராஜ வம்சத்தின் பெருமையை எவ்வளவு பாராடினாலும் தகும். இதன் மூலம் அவர்கள் புகழ் உயர்ந்து கொண்டிருப்பதில் வியப்பில்லை.. 
18 அடி நீளத்தில் அனந்த சயனம் கொண்டுள்ள மூலவர் பதம்நாப சுவாமியை கோவில் கர்ப்பகிரகத்திலுள்ள 3 வாயில்கள் வழியே பகுதி பகுதியாகத்தான் பார்க்க முடியும். 100 அடி உயரத்தில் அகண்ட 7 நிலைகளாக காட்சிதரும் கோவில் ராஜகோபுரம் திருவாங்கூர் சமஸ்தான ஆதித்தவர்ம மகாராஜாவால் கி.பி 1566ல் அடிக்கல் நாட்டப்பட்டு மார்தண்டவர்ம ம்காராஜவால் 260 ஆண்டுகளுக்குமுன் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 
கிழக்குக் கோட்டை வாயிலுக்கு உட்புறமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவள்ளுர் வீரராகவர், திருவெட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில்களில் இருப்பது போல் முலவர் இங்கும் ஐந்து தலை அனந்தத்தின் (நாகம்) மீது சயனம் கொண்ட நிலையில் காட்சிதருகிறார். கேரள பாணி திராவிடக் கலையழகுடன். மிளிரும் இத்திருத்தலம் இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு திருத்தலங்களில் ஒன்று. இங்குள்ள சுவர் ஓவியங்களும், கற்சிற்பங்களும் உலகப்பிரசித்தி பெற்றவை. 


 



தங்க, வைர, வைடூரியத்தால் இழைக்கப்பட்ட நகைகள், பானைகள், குடங்கள் அபூர்வ தங்க நாணயங்கள், தங்க கட்டிகள் பூஜைப் பொருட்கள், நவரத்தினக் கற்கள், தங்கத்தாலான ஒரு அடி உயரமுள்ள மஹா விஷ்னு சிலை (உற்சவரின் நகல்), 30 கிலோ எடையில் தங்க அங்கி, 5 கிலோ எடையில் கிருஷ்ணர் சிலை மற்றும் கலைப்பொருட்கள் என பட்டியல் நீளும் அளவிற்கு பொற்குவியலோ குவியல்! 
பொன்னாபரணங்கள், ஆரங்கள், மாலைகள் போன்றவற்றின் பல பெயர்கள் இன்று வழக்கொழிந்து விட்டன. உலகில் எந்த இடத்திலும் இவ்வளவு தங்க ஆபரணப்புதையல் இருப்பதாகத் செய்தி இல்லை.
நாடு சுதந்திரத்திரம் அடைந்த சமயம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்படாமல் சிதறிக் கிடந்த 600 சுதேச சமஸ்தானங்களை இந்திய யூனியனுடன் ஒருங்கிணைத்த இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய்படேல் அப்போது திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராயிருந்த சித்திரைத் திருநாள் பலராமவர்மரிடம் எவ்வளவு மானியம் வேண்டும் என்று கேட்டபோது, மன்னர் எங்களுக்கு மானியம் எதுவும் வேண்டாம். பத்மநாபசுவாமி கோவிலை மட்டும் எங்கள் கட்டுப்பாட்டில் விட்டு விடுங்கள் போதும் என்று கேட்டுக் கொண்டாராம். நேர்மை மிக்க மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க சர்தார் வல்லபாய்படேல் அளித்த உறுதி மொழியின்படி மன்னர் குடும்பத்தின் ஆதிக்கத்தில் இன்று வரை இத்திருக்கோயில் உள்ளது.
திருவாங்கூர் மன்னர்களின் அன்பளிப்புகள், தங்கள் தவறுகளுக்கு பிராயச் சித்தமாக செலுத்திய பொற்காசுகள், பிறநாட்டு மன்னர்களின் பரிசுப் பொருட்கள், பிற நாடுகள் மீது படையெடுத்தபோது கவர்ந்த பொக்கிஷங்கள், பொருட்கள் போன்றவற்றிற்கு பிரயசித்தமாக கோவிலுக்குக் கொடுத்த காணிக்கைகள், மன்னர்கள், ஆங்கில அதிகாரிகள், பிரபுக்கள் போன்றோர் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறிய போது துலாபாரம் மூலம் செலுத்திய காணிக்கைகள், பக்தர்களின் காணிக்கைகள் என பல நூறு ஆண்டுகளாக சேர்ந்த பொக்கிஷங்கள் அனைத்தும் கோவில் நிலவரைகளில் பாதுகாத்து வைக்கப்பட்டன. இதிலிருந்து ஒரு பொற்காசு கூட அரசாங்க கஜானாவிற்கு சென்றதில்லை!
வழக்கறிஞர் சுந்தரராஜன் என்பவர் தொடுத்த வழக்கில் நிலவறையின் ஆறு அறைகளிலுள்ள உள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்து கணக்கெடுக்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்திரவின்படி ஏழு பேர் கொண்ட ஒரு குழு தற்போது நகைகளை மதிப்பீடு செய்து வருகிறது. A, B, C, D, E, F என்று பெயரிடப்பட்ட ஆறு அறைகளில் B தவிர மற்ற 5 அறைகளும் திறக்கப்பட்டு விட்டன. 150 வருடக்களாக திறக்கப்படாத A, B அறைகளில் எஞ்சியுள்ள B அறையைத் திறக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுதான் கோவிலின் பொற்களஞ்சியம் என்கிறார்கள்.
இந்நிலையில் மன்னர் குடும்பத்தினர் பழங்கால சம்பிரதாயப்படி தேவ பிரசன்னம் பார்த்து B அறையைத் திறந்தால் இயற்கை சீற்றமும் நாட்டுக்கே பெருங்கேடுகளும் விளையும் என்றும் அதைத் திறப்பவர்கள் குடும்பம் அழியும் என எச்சரித்துள்ளனர். இந்த வழக்கைத் தொடுத்த வழக்கறிஞர் சுந்தரராஜன் சமீபத்தில்தான் அகால மரணமடைந்தார்.
எந்த ஒரு காரியம் செய்வதென்றாலும் அதைத் தொடங்குவதற்கு முன் இறைவனின் அனுமதியைக் கேட்கும் வகையில் தேவவாக்கு பெற்ற பின்பே அக்காரியத்தை தொடங்க வேண்டும் என்பது மன்னர் குடும்பத்துச் சம்பிரதாயம். வெற்றிலை, சோழி, கண்ணாடி போன்றவற்றைப் பயன்படுத்தி தேவ பிரசன்னம் பார்க்கும் ஜோதிட நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. நடவடிக்கை களின் போது தெரிந்த சகுணங்களை முன்வைத்து புராதன விதிகளின் படி ஜோதிடக் கணிப்பு நடத்தப்பட்டது. ஆரூடத்தில் பொக்கிஷத்தின் மதிப்பீடுகளை வெளிடக் கூடாது என்றும் கோவிலுக்குத் தொடர்பில்லாத தேவைகளுக்கு பொக்கிஷத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பதும் தேவ பிரசன்னம் மூலம் தெரியவந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதன் உட்பொருள் நகைகள் பற்றிய முழு விவரமும் வெளி உலகுக்கு பகிரங்கப் படுத்தினால் அதன்பின் அவைகளைப் பாதுகாப்பது பெரும் பிரச்சினை என்பது மன்னர் குடும்பத்தின் கவலை. கோவிலுக்கு என்னதான் கட்டுக் காவல்கள் போட்டலும் அத்தனையும் தகர்த்து ஜேம்ஸ்பாண்ட் பாணியில் உள்ளே சென்று விடுபவர்களும் இருக்கிறார்கள். போலிகளை வைத்துவிட்டு அசலை எடுத்துச் சென்று விடும் செல்வாக்கு பெற்றவர்களும், சாமர்த்திய சாலிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்போதே கோவில் பொற்காசுகளை விற்றதில் முறைகேடுகள், இந்நாள் முன்னாள், கோவில் நிர்வாகிகள், ஊழியர்கள் போன்றோர் நிலவரையிலிருந்து தங்கத்தைக் கடத்துவதாகவும், ஏற்கனவே கடத்தியிருப்பதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் மன்னர் குடும்பத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோவில் சொத்துக்களை புகைப்படம் எடுக்கவும் வீடியோ பதிவு செய்யவும் அனுமதிக்கக் கூடாது எனவும், கோவில் ஆசார வரை முறைகளில் 6வது அறை முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், எனவே அதைத் திறக்கக் கூடாது என்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். மதிப்பீட்டுக் குழுவினரும் கோர்ட்டின் வழிகாட்டுதலுக்காக காத்திருக்கிறர்கள்.
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் அவர்களோ பொற்குவியலை மன்னர் குடும்பத்தினர் எடுத்துச் செல்வதற்காகத்தான் இப்படி புரளியைக் கிளப்புகிறார்கள் என்றும் தேவ பிரசன்னத்தில் உண்மை இல்லை என்றும் மறுத்துள்ளார். ஏற்கனவே கோவிலுக்கு நாள்தோறும் தரிசனத்திற்குச் செல்லும் மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மர், ஒருநாள் பாயாச பிரச்சாதம் எடுத்துச் செல்லும் பத்திரத்தில் தங்க நகைகள் இருந்ததைப் பார்த்துவிட்ட பூசாரியை அவர் வெந்நீர் ஊற்றி கொல்ல முயன்றதாக புகார் வந்திருப்பதாகவும் முன்னாள் முதல்வர் கூறியுள்ளார்.
எல்லாம் அறிந்த பத்மநாபசுவாமிகள் தான் நமக்கு உச்ச நீதிமன்றத்தின் மூலம் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும்.

Friday, August 19, 2011

அணுசக்தி பிறந்த கதை-1

ப்ரல் 1986ல் ரஷ்யாவில் செர்னோபில் அணு உலை, மார்ச் 2011ல் ஜப்பான் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலை, என அணு உலைகளில் ஏற்படும் தொடர் விபத்துகளால் கதிகலங்கிப் போயுள்ளது கூடங்குளம் கிராமம். தாங்கள் எந்நேரமும் ஊரைக் காலி செய்ய நேருமோவென்ற அச்சம் மக்களை வாட்டி வதைக்கின்றது. ரஷ்ய உதவியுட்ன் அங்கு நிறுவப்பட்டு வரும் அணுமின் நிலையத்தின் முதல் பிரிவில் உற்பத்தி தொடங்க இருக்கின்றது. இரண்டாவது உலைக்கான பணிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. அணு உலைகளின் பாதுகாப்பு குறித்துக் கவலை கொண்டுள்ள மக்கள் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் வாழ்விடங்கள் பறிபோய் விடுமோ என்ற பதைபதைப்பில் பீதியின் காரணமாக கூடங்குளம் சுற்று வட்டார கிராம மக்கள் கடந்த 10 தினங்களாக உண்ணாவிரதம், சாலைமறியல் என பல்வேறு போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக தற்காலிகமாகப் போரட்டத்தை நிறுத்தியுள்ளனர்.



செர்னோபில் சிதைவுகள்


எனவே அணுசக்தி, அணு உலை, அணு குண்டு சமாச்சாரங்களைப் பற்றிய சில அடிப்படை தகவல்களை நாம் தெரிந்து கொள்வது நமக்கு அவைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் பிறருடன் இத்தகவல்களைப் பகிர்ந்து கொள்வது நம்மை நாமே அவசர காலங்களில் பாதுகாத்துக் கொள்ளவும் பிரச்சினகளை எதிர்கொள்ளவும் உதவும்.



சுனாமியின் போது ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலை, ஜப்பான்

.நாம் ஒரு கட்டிடத்தை எழுப்ப செங்கற்களைப் பயன்படுத்துவது போல் இப்பிரபஞ்சத்தின் எந்த ஒரு ஜீவராசியும் செல் என்ற அடிப்படை அலகைக் கொண்டே உருவாகின்றது. எந்த ஒரு ஜடப்பொருளும் ஒரு சின்னஞ் சிறு அணு என்கிற அலகை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்படுகின்றது. அணு ஒரு உரோமத்தின் பருமனில் 10 லட்சத்தில் ஒரு பங்கு அளவிற்கு மிக மிகச் சிறியதான துகள்! ஒரு சாதாரண நுண்ணோக்கி மூலம் ஒரு ஊசி முனைப் புள்ளியில் ஒரு கோடி அணுக்களை நாம் காணமுடியும்.

ஒரு அணுவின் கட்டமைப்பு



இரசாயணக் கோட்பாடுகளின்படி ஒவ்வொரு பொருளின் அணுவும் அதற்கென ஒரு தனித் தன்மை கொண்டவை. அப்படி ஒரே தன்மை கொண்ட பலகோடி அணுக்கள் சேர்ந்து உருவாகும் ஒரு இரசாயணப் பொருளை நாம் தனிமம் (element) என்கிறோம். உதாரணமாக ஹைட்ரஜன், ஆக்சிஜன், இரும்பு, ஈயம், செம்பு, துத்தநாகம் மற்றும் யுரேனியம் போன்றவைகள் தனிமங்கள் ஆகும்.

எனவே ஒவ்வொரு தனிமத்திற்கும் ஒரு அடிப்படைத் தன்மை கொண்ட அணுக்களே அதற்கான செங்கற்கள் எனலாம்! ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் சேரும்போது ஒரு புதிய கூட்டுப்பொருள் (compound) உருவாகிறது. உதாரணமாக நாம் அருந்தும் நீரைச் சொல்லலாம். ஹைட்ரஜன் அணுக்களும் ஆக்ஸிஜன் அணுக்களும் சேர்ந்து நீர் உருவாகின்றது.


நீரின் மூலக்கூறு ((H2O)

நீரை உருவாக்கப் பயன்படும் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் அணுக்களின் சேர்மம் ஒன்றுக்கு ஒன்று என்ற சரி விகிதத்தில் இல்லாமல் சற்று வித்தியாசமான தாயும், சிக்கல் நிறைந்த அம்சமாகவும் உள்ளன. அணு எடை வித்தியாசம் காரணமாய் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரே ஒரு ஆக்ஸிஜன் அணுவுடன் இணைந்து நீரை (H2O) உருவாக்குகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் சேர்வதால் உருவாகும் இந்த சேர்மத்தின் அடிப்படை அலகை நாம் நீரின் மூலக்கூறு (Molecule) என்கிறோம்.

ஒவ்வொரு தனிமங்களின் அணு எடையைப் பொறுத்தவரை அதிக வித்தியாசம் காணப்படும் அளவிற்கு அதன் பருமனைப் பொறுத்தவரை குறுக்களவில் அதிக வித்தியாசம் ஏதும் இல்லை. ஏறக் குறைய அணுக்கள் யாவுமே ஒரே குறுக்களவைக் கொண்டுள்ளன. உதாரணமாக இவ்வுலகில் அதிக அணு எடை கொண்ட தனிமமான யுரேனியத்தின் அணு எடையானது ஹைட்ரஜன் அணு எடையை விட 200 மடங்கு அதிகம்! ஆனால் யுரேனிய அணுவின் குறுக்களவோ ஹைட்ரஜன் அணுவின் குறுக்களவை விட 3 மடங்கே அதிகம்!



யுரேனிய அணுவின் அமைப்பு


ஹைட்ரஜன் அணுவின் அமைப்பு


கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதென்பார்கள். அணுதான் இப்பிரபஞ்சத்தின் மிக மிகச் சின்னஞ் சிறிய பொருள். ஆனால் அதன் சக்தியும் வீரியமும் மிக மிகப் பெரிய அளவிலானது. அணுவில் பொதிந்துள்ள ஆற்றலின் (energy) அளவோ அளவிட முடியாத அபரிமித சக்தியாகும்! குதிரையை வசப்படுத்த நாம் சேணம் பூட்டி அதைக் கட்டுப்படுத்துவது போல் அளப்பரிய அணுவின் ஆற்றலையும் கட்டுப்படுத்தி நம் தேவைக்குப் பயன்படுத்த நம் விஞ்ஞானிகள் வழிவகைகள் கண்டுள்ளனர்.

மீண்டும் அணுசக்தி பிறந்த கதை-2ல் சந்திப்போம்!



Sunday, August 7, 2011

சென்னை புதிய தலைமைச் செயலகம்



‘சென்னைக் கோட்டையில் புல் வெட்ட வேண்டும் என்றாலும், புதுடெல்லியில் இராணுவத்திடம் அனுமதி பெறவேண்டும்’ என்ற நம் அரசியல் தலைவர் களின் மனக்குறையே நாளடைவில் இந்த நிலைப்பாடை மாற்றியாக வேண்டும் என்ற குறிக்கோளில், தமிழகத்திற்கென்று ஒரு புதிய சட்டமன்றக் கட்டிடம் உருவாக்கும் லட்சியமாக மலர்ந்து மக்கள் மனதிலும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது. கோட்டையில் போதிய இடவசதியின்மை, மிகப் பழைமையான கட்டிடம், தமிழக அரசுக்குச் சொந்தமான இடத்தில் இல்லாது இராணுவத்திற்குச் சொந்தமான இடத்தில் இருப்பது போன்ற அசௌகரியங்கள் மேற்சொன்ன எண்ணத்திற்கு வலு சேர்த்து அதற்கான இடம் தேடலுக்கு வித்திட்டது


புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் புதிய சட்டசபைக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கென்று ஒரு இடம் தேடல் ஆரம்பமானது. அவர் காலத்தில் சென்னையில் பொருத்தமான ஒரு இடத்தை அடையாளம் காணமுடியாமல் அவர் தலைநகரையே திருச்சிக்கு மாற்றி விடலாமா என்ற அளவிற்கு விவாதம் வளர்ந்து அவரது அளப்பரிய ஆசை ‘எக்ஸ்பிரஸ் அவின்யூ’ போன்ற ஒரு தோற்றப் பொலிவில் சென்னையில் நமக்கு அமைய இருந்த திட்டம் கருக்கொள்ள முடியாமல் முடிவில் அத்திட்டமே கிடப்பில் போடப்பட்டது.


தனது அரசியல் ஆசான் எம்ஜிஆர் அவர்களின் எண்ணத்தை ஈடேற்று முகமாக புரட்சித்தலைவியின் கடந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், மீண்டும் புதிய சட்ட சபைக் கட்டிடம் கட்ட பொருத்தமான இடம் தேடல் சென்னை யில் தொடங்கியது. எண்ணிய எண்ணத்தை நிறைவேற்றுவதில் உறுதி கொண்ட அவர் பலவித இடையூறுகளைச் சந்திக்க நேர்ந்த போதும் சளைக்கவில்லை. ஆனாலும், கடைசியில் அரசியல் குறுக்கீடுகளுக்கு அடிபணிய வேண்டிய நிர்பந்தம் காரணமாக அவரது ஆசையும் நிராசையானது.

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகம், கர்நாடக மாநிலத்தின் விதான் சவுதாவை விஞ்சும் வகையில் அமையுமா? பிரேசில் பராளுமன்றத்தைப் போல் ஒரு அதிநவீன மாட மாளிகையாக மலருமா? என்ற மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பும் ஏக்கமும் கடைசியில் ஏமாற்றத்தில் முடிந்தன.

விதான் சௌதா



பிரேசில் பாரளுமன்றம் இரவில்


இறுதியில் சென்ற கலைஞர் ஆட்சிக்காலத்தில் சட்டசபைக் கட்டிடத்திற்கான ஏற்பாடுகள் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு அந்தக் கனவுகள் ஒருவழியாக நனவாகி, சட்டசபைக் கட்டிடமும் வேகமாக வளர்ந்து வந்த நிலையில், திட்டமிட்ட கட்டுமானப் பணிகள் முழுவதுமாக முடிக்கப்படாத நிலையில் சென்ற 2010ம் ஆண்டு மார்ச் 13ல் சட்டசபைக் கட்டிடம் மட்டும் நமது பிரதமர் அவர்களால் திறப்பு விழா நடத்தி முடிக்கப்பட்டது.

இருந்த போதும் கட்டிடத்தின் அமைப்பு, செலவினங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம் இப்படி அவசரகதியில் கட்டித் திறக்கப்ட பட வேண்டிய அவசியம் என்ன? என்பது போன்ற விமர்சனங்கள் அப்போதே பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதோடு இப்போது தேர்தல் முடிந்து புதிய ஆட்சி மலர்ந்த நிலையில் பழைய அரசியல் காரணங்களும் சேர்ந்து கொள்ள புதிய சட்டசபை கட்டிட விவகாரம் நீதி விசாரணைக்கு உள்ளாகி பிரச்சினை பூதாகாரமாகி விட்டது. இன்று தமிழகத்தில் அதிகமாய் அலசப்படும் பொருள்களில் ஒன்று ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மிகப் பிரமாண்டமாய்க் காட்சி தரும் புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தின் எதிர்காலம் பற்றியதேயாகும். அண்ணாசாலை முகப்பில் உள்ளசட்டசபைக்கான கட்டிடத்திற்கு சுமார் 1092 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் ஏறக்குறைய பாதித் தொகை செலவிடப்பட்டு விட்டது. மேற்கொண்டும் B பிளாக் எனப்படும் செயலகக் கட்டிடத்திற்காகவும்
அடுக்கு மாடி கார் பார்க் வசதிக்காகவும் மீதித் தொகை செலவிடப்பட உள்ளது. இதில் இந்த ஆண்டுக்காகற்கு 244 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வரும் நிலையில், புதிய அரசு அனைத்துப் பணிகளையும் நிறுத்தி விட்டு, நிர்வாக வசதிக்காக பழையபடி கோட்டை சட்டமன்றக் கட்டிடத்திலிருந்து செயல்படத் துவங்கியுள்ளது.

புதிய தலைமைச் செயலகக் கட்டுமானம் குறித்து எழுந்துள்ள புகார்கள் பற்றி விசாரிப்பதற்காக நீதிபதி தங்கராஜ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது

இந்நிலையில் இக்கட்டிடம் வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படுமா? வாஸ்து சாஸ்திரப்படி திருத்தி அமைக்கப்படுமா? அல்லது கட்டிடம் கிடப்பில் போடப்படுமா என்பதற்கெல்லாம் விடை, நீதியரசர் தங்கராஜ் அவர்கள் தனது விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்த பிறகுதான் முடிவாகும். அதுவரை புதிய சட்டசபை மீண்டும் கனவாகிப் போகுமோ என்ற எண்ணம் அனைவர் உள்ளங்களையும் பற்றி நிற்கிறது. இக்கட்டிடத்தின் எதிர்காலமும் கேள்விக்குறி என்றாகி நாமும் பழையபடி கனவுலகத்தில் சஞ்சரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளோம்.

புதிய சட்டசபைக் கட்டிடம் பலவிதமான விமர்சனங்களுக்கு ஆட்பட்டாலும் கூட கட்டிடத்திற்கு தேர்வான இடம் சாலப் பொருத்தம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மாநகரின் மையத்தில் சட்டசபைக்கான இடம் தேர்வாகி இருப்பதே அதற்கான முக்கியக் காரணம் எனலாம். பொதுவாக எல்லா நாடுகளிலும் அதிகார மையம் என்பது அந்நாட்டின் தலைநகரின் மையத்தில் இருப்பதே நடைமுறை.

அரசினர் தோட்டத்தில் சட்டசபைக் கட்டிடம் செயல்பட்டால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படும் என்பது கூட ஒருசிலரின் வாதமாக உள்ளது. சட்டசபைக் கட்டிடத்தை எங்கு கட்டினாலும் ஒரு சில ஆண்டுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஒரு மாநிலத்தின் அதிகார மையதைச் சுற்றித்தான் அனைத்து செயல்களும் எனும்போது போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. முயன்றால் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க எத்தனையோ வழிகள் தென்படாமலா போகும்?

எம்.ஜி.ஆரைப் போல் தலைநகரம் மாநிலத்தின் மையமான திருச்சியில் இருப்பதுதான் பொருத்தம் என்று கருதாமல், சென்னையின் மையத்தில்தான் சட்டசபைக் கட்டிடம் அமைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நம் புரட்சித் தலைவி அவர்கள். ஏற்கனவே சட்டசபைக்கு பொருத்தமான ஒரு இடத்தை சென்னையில்தான் அவர்கள் தேடினார்கள் என்பது கடந்த கால வரலாறு. எனவே ஓமந்தூரார் அரசினர் தோட்டம் புரட்சித்தலைவி அவர்கள் தேடலுக்கும் பொருத்தமான இடமாக அமைந்து விட்டது வரப்பிரசாதம் எனலாம். இப்பொழுது சட்டசபைக்கான இடத்தைப் பற்றிய விவாதம் தேவையற்ற ஒன்று என்ற நிலையில் கட்டிடத்தைப் பற்றி மட்டுமே பேசலாம்.

தமிழத்தின் முதல்வராக வாகை சூடிய புரட்சித்தலைவி அவர்கள் தமிழக மக்களின் எத்தனையோ ஆசைகளை நிறைவேற்ற சபதம் ஏற்றிருக்கிறார்கள். தலைநகரை புதுப்பொலிவில் காணவேண்டும் என்ற பேரவாவில் மாநகரின் அசுத்தக் கறைகளை கண்டறிய ஹெலிக்காப்டரில் வலம் வந்துள்ளர்கள்.

ஆனால் மாநகரின் மணிமகுடமாக திகழ வேண்டிய ஒரு புதிய சட்டசபைக் கட்டிடம் பற்றிய தமிழக மக்களின் மனக் குறையையும் நிச்சயம் நிவர்த்திக்க புரட்சித் தலைவி அவர்கள் தலைப்படுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து கொள்ள இடம் இல்லை.

அண்ணாசாலை முகப்பிலுள்ள இப்போதைய கட்டிடம் மட்டுமே அவர்கள் மனதிற்கு ஏற்புடையதாக இல்லை என்பது மட்டும் பட்டவர்த்தனம். எனவே இக்கட்டிடத்தை சென்னையில் சர்வதேச மாநாடுகள் நடத்தும் வகையில் அரங்கத்தை மாற்றியமைக்கலாம்.
முன்பு தென்னகத்தில் சார்க் மாநாடு நடத்த மத்திய அர்சு விரும்பியபோது தென்னகத்தின் பெரிய மாநகரமாம் சென்னை யில் பொருத்தமான ஒரு இடம் இல்லாததால் சார்க் மாநாடு பெங்களூரு விதான் சௌதாவில் நடந்ததை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அதோடு நூலகம், கலை அரங்கம், ஏற்கனவே இங்கு செயல்பட்ட அரசு இலாக்காக்களுக்காகவும் இக்கடிடத்தைப் பயன்படுத்தலாம்.

ராணிமேரிக் கல்லூரியில் கட்டுவதற்காக புரட்சித் தலைவி அவர்கள் எண்ணத்தில் முகிழ்த்த மாளிகையை, அரசினர் தோட்டத்தில் வாலாஜா சாலையை நோக்கிய வண்ணம் தரணி போற்றும் வகையில் ஒரு வரலாறுச் சின்னமாக புதிய சட்டசபைக் கட்டிடத்தை அவர்கள் எழுப்ப வேண்டும். எஞ்சிய பணிகளை நிறைவேற்ற ஒதுக்கப்பட்ட பணத்திலேயே இதைக் கட்டி முடிக்கலாம். இது பெருவாரியான மக்களால் மகத்தான வெற்றிக் கனியை புரட்சித் தலைவி அவர்களுக்கு அளித்து ஆட்சி பீடத்தில் அமர்த்திய தமிழக மக்களுக்கு நன்றி பாராட்டுவதாக அமையும். தமிழ் கூறும் நல்லுலகில் மாமன்னன் ராஜாராஜன் பெயர் நிலைத்து நிற்பது போல் புரட்சித்தலைவிஅவர்கள் பெயரும் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பதோடு வரலாற்றில் அவர்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

கட்டிடத்தை சங்கத் தமிழை நினைவுறுத்தும் வகையில் இரண்டு இதிகாசங்களைக் குறிக்க இரட்டைக் கோபுரமும், ஐம்பெருங் காப்பியங்களைக் குறிக்க ஐந்து நுழைவாயில்களையும் பத்துப் பாட்டைக் குறிக்க பத்து மாடிகளையும், இவ்வாறாக மற்ற இலக்கியங்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொள்ளலாம். தமிழன்னையை மகிழ்விக்கும் வகையில் தமிழ் அன்னை சிலையை நுழைவாயில் முகப்பில் அமைக்கலாம். தமிழர்களுகாக தமிழ் இலங்கியங்களின் நினைவாக கட்டப்படும் இச்சட்டசபைக் கட்டிடம் தமிழகத்தின் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதில் ஐயமில்லை.

இதன் மூலம் சென்னை மாநகரின் மத்தியில் மதிப்பு வாய்ந்த இடத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் பயன்படுவதோடு மக்கள் வரிப்பணமும் பாழாகாமல் தவிர்க்கப்ப்டும். இதன்மூலம் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்திலேயே அரசின் அனைத்து இலாகாக்களும் செயல்பட ஏதுவாகும்.

வாலாஜா சாலை முகப்பில் கட்டப்பட வேண்டிய கட்டிடத்திற்கான மாதிரி வரைபடங்கள் சில
:-