Sunday, May 17, 2009

தமிழ் ஈழம் என்ற மான்குட்டியும் சீனா என்ற மலைப்பாம்பும்

லங்கிய அரசியல் குட்டையில் எப்படி மீன் பிடிப்பது என ஒரு மாத காலத்திற்கும் மேலாக இந்தியத் திரு நாட்டில் நிகழ்ந்து வந்த போராட்டம் இன்று ஒரு முடிவுக்கு வந்து, அரசியல் களம் தெளிவடைந்து விட்டது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் களம், இலங்கைப் பிரச்சினையும் சேர்ந்துக் கொண்டு பல அரசியல் கட்சிகளையும் பல வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கச் செய்திருந்தது. இலங்கைத் தமிழர்கள், அங்கு தங்கள் வருங்கால சந்ததியினருக்கு ஒரு அமைதியான சூழல் மலர, இன்றுள்ள அரசியல் சூழ் நிலைக்குத் தகுந்தாற்போல் தங்கள் எதிர்கால உத்திகளை திட்டங்களையும் வகுத்து வெற்றிக்கு வழி செய்து கொள்வார்களாக!

காயம்பட்ட கைக்குழந்தையின் கதறல் குரல் போல் மரண ஓலம் ஈழத்தின் திக்கெட்டும் எதிரொலிக்கின்றது! ராஜீவ் மரண தினம் மே 21க்கு முன்பாக, இந்தியாவில் அடுத்த அரசு பதவி ஏற்பதற்கு முன்பாக, யுத்தம் முடிந்து விட்டது என்று சொல்லியே, எவ்வளவு தமிழர்களை கொன்று குவிக்க முடியுமோ அவ்வளவு பேரை கொன்று குவித்திட இலக்கு நிர்ணயித்து செயல் படுவது போல் செயலாற்றுகிறது சிங்கள அரசு.

தேர்தல் கால வாக்குறுதியாக, எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்பாதாக இல்லாமல், இந்திய ராணுவத்தை அனுப்பியாவது ‘தனித் தமிழ் ஈழம்’ மலரச் செய்வோம் என்று ராஜிவ் காந்தி கொலை வழக்கு என்ற அஸ்திரத்தால் கட்டுண்டு கிடக்கும் தமிழகத் தலைவர்கள் பேசக்கூடிய உட்சபட்ச எல்லையின் வரம்பு இதுதான். அத்தகைய வக்குறுதிகளைப் பற்றிக் கவனத்திற் கொள்ள இப்போது ஏதும் இல்லை என்றாலும், பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் சென்னையில் 09-05-09'ல் அளித்த பேட்டியில், ஐக்கிய இலங்கையில் ராஜிவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வும், அவர்கள் வாழ்வுரிமைகளை மீட்டுத்தரவும் பாடுபடுவோம் என்று அவர் சொன்னதும், யாரிடம் அதிகாரத்தை பகிந்து கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு அது பற்றி ஈழத் தமிழர்களிடம் பேச்சு நடத்துவோம் என்ற அவர் பதிலும் கவனத்திற்கு உரியவை. இந்திய ராணுவத்தை அடுத்த நாட்டிற்கு அனுப்புவது என்பதும் சாத்தியமான ஒன்று அல்ல என்பதும் இந்தியாவின் அடுத்த பிரதமரின் நிலைப்பாடு.

‘தனி ஈழம்’ என்ற ஆர்வலர்களுக்கு இந்தியாவின் இந்த நிலைப்பாடு ஒரு பக்கமிருக்க, இலங்கை அரசின் நிலைப்பாட்டை மாற்றொரு கோணத்தில் இருந்தும் ஆராய வேண்டிய கட்டாயத்தற்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கையின் பாதுகாவலனாக தற்போது பொறுப்பேற்றிருக்கும் நாடான சீனா பற்றிய செய்திகள்தான் அவை. சில ஆண்டுகளுக்கு முன், பீகிங் நகர் தியாமன் சதுக்கத்தில் திரண்டு, ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுத்த தன் நாட்டு மக்களையே இரணுவத்தை ஏவி கொன்று குவித்த நாடு சீனா. இதுதான் சீனா என்ற நாட்டின் உண்மையான எதேச்சாதிகார முகத்தோற்றம்.

திபெத், சூடான், மியான்மர் (பர்மா) போன்ற, சீனா காலடி வைத்த நாடுகளில் எல்லாம் அந்த மலைப்பாம்பின் கோர நாக்குகளால், கொடூரம் நாளுக்கு நாள் தலைவிரித்து ஆடுகிறதே தவிர, அங்கெல்லாம் பிரச்சினைகள் முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை. ஆமை புகுந்த வீடு் உருப்படாது என்பார்கள். சீனா காலடிவைத்த நாடும் அப்படித்தான்.

உலகின் உயர்ந்த பீடபூமி திபெத்தில், சுயசார்பாய் யாருக்கும் எந்த ஒரு தீங்கும் நினையாதவர்களாய் தலாய்லாமா, பஞ்சன்லாமா, என மடாதிபதி களும், சாதுக்களுமாய் பரிபாலனம் செய்து வந்த நாட்டை, தன் படை பலத்தால் கைப்பற்றி, திபெத்தியர்களுக்குச் சிறிதும் பரிச்சயமில்லாத கம்யூனிசத்தை அங்கு புகுத்தி, அவர்கள் விளைநிலங்களை அபகரித்து, திபத்தியர்களை உலகெங்கும் சிதறி ஓடச் செய்த பெருமை சீனாவையே சாரும்.

மனித உரிமைகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் உலக நாடுகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி, தெற்கு சூடனில் உள்ள ஆப்ரிக நீக்ரோ இனத்தவர்களை அழிக்க, அரபு முஸ்லிம்கள் நிறைந்த வடக்கு சூடானுக்கு கொலை வெறி ஆயுதங்களை இன்று வரை கொடுத்து வரும் நாடு சீனா!

சீனா உதவியுடன் மியான்மரின் இராணுவ ஆட்சி செய்துவரும் அட்டுழியங்கள், வார்த்தைகளால் எழுதக் கூடியது ஒன்று அல்ல. மக்களால் தெர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவி ஆங் சூயியை வீட்டு சிறையில் அடைத்துவிட்டு, உடம்பு சுகவீனமுற்று இருக்கும் அவருக்கு மருத்துவ உதவி கூட அளிக்க மறுத்து, இராணுவ பலத்தின் மூலம் அவரை வதைத்து வரும் நாடு மியான்மர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

தன் சீடன் வடகொரியாவுக்கு உதவி செய்வதன் மூலம் கொரிய தீபகற்பத்திற்கு மட்டுமல்லாமல்
உலகுக்கே அச்சுறுத்தலாகத் திகழும் நாடு சீனா.

இதெல்லாம் எதற்கு? ஆசியாவில் தான் ஒரு வல்லரசாககக் கருதப்படவேண்டும் என்ற தனது மேலாதிக்கத்தை உலக நாடுகளிடம் தம்பட்டம் அடித்து அதை நிலைநாட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான்.

ஆனால் சிங்கப்பூர் தலைவர் லீ குவான் ஒரு முறை கருத்துக் கூறும் போது 'ஆசிய நாடுகள்’ என்ற விமானத்தின் இறக்கைகள் இந்தியாவும், சீனாவும் என்றார். அதன் பொருள் சீனாவுக்கு ஈடாக ஆசிய மண்டலத்தில் இந்தி்யாவால் தான் ஈடு கொடுக்க முடியும் என்பது. சீனாவுக்கு இது பொறுக்குமா? இந்தியாவையும் தன் பிடிக்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காக ‘முத்துமாலை’ திட்டம் என்று ஒன்றை மத்திய கிழக்கில் இருந்து ஆரம்பித்து தென் சீனக் கடல் வரை எல்லா நாடுகளுடனும் நட்பு கொண்டு, உதவி
செய்து அதன் மூலம் அங்கெல்லாம் தன் ராணுவ தளத்தை, கடற்படை தளத்தை அமைப்பதுதான் அதன் நோக்கம். இந்த திட்டம் மூலம் இந்தியாவை மற்ற நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தி அதன் கழுத்தை இறுகச் செய்ய வேண்டும் என்பது சீனாவின் நீண்டகாலத் திட்டம்.

இதுதான் இன்றைய சீனா என்ற நட்பு நாட்டின் நேசமனப்பான்மை. நாம் இவர்களிடம் மனித நேயத்தை எதிர்பார்க்க முடியுமா?

இந்த மேலாதிக்க மனப்பான்மையுள்ள சீனாவின் நட்பு வலையில் கடைசியாக விழுந்திருக்கும் நாடுதான் இலங்கை! தற்சமையம் சீனா இலங்கைக்கு தமிழ் இன ஒழிப்புக்குத் தேவையான பொருளாதார, ஆயுத உதவியுடன், ஐக்கிய நாடுகள் சபையிலும் ராஜரீக உதவிகளை இலங்கைக்கு செய்து வருகிறது. இதற்கு கைமாறாக ஹம்பன்தொடா (Hambantota) என்ற துறைமுகத்தை சீனாவிற்கு இலங்கை அரசு தாரை வார்த்திருக்கிறது. இத்துறைமுகத்தை கோடிக் கணக்கான டாலர்கள் செலவு செய்து சீனா நவீனப்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில் இத்துறைமுகம் இந்துமாகடலில் வலம் வரும் சீனக் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் மையம் என்ற பெயரில் ஆதன் கடற்படை தளமாகத் திகழப்போகிறது! பிறகு ஏன் சீனா தமிழர்களைப் பற்றிக் கவலைப் படப் போகிறது்? தமிழர்கள் விவகாரத்தில் மேலை நாடுகளின் வேண்டுகோள்களை இலங்கை அரசு உதாசீனப் படுத்துவதற்கு காரணம் சீனாவுடன் மலர்ந்திருக்கும் இந்தப் புது உறவுதான்.

ஆக சீனா என்ற நச்சரவம் (Dragon) கடைசியாக இலங்கையிலும் தன் கொடிய நாக்கை நீட்டி தமிழ் ஈழம் என்ற மான் குட்டியை விழுங்கத் தொடங்கி விட்டது. இனி திபெத், சூடான், மியான்மர் (பர்மா) போன்ற நாடுகளுக்கு ஏற்பட்ட கதிதான் இலங்கைக்கும் ஏற்படப் போகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்று அல்ல. ஆனால் அந்த விஷப்பாம்பிடமிருந்து விடுபட்டு தமிழ் ஈழம் தன்னை எப்படிக் காத்துக் கொள்ளப்போகிறது என்பதுதான் முக்கியம்!

தமிழ் ஈழம்! பயணம் நெடியது மட்டும் அல்ல கொடியதும் கூட என்று இப்போது சூழ்நிலை மாறி வருகிறது. மாறிவிட்ட இன்றைய அரசியல் சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் ஈழத் தமிழர்கள் தங்கள் வியூகங்களை மாற்றியமைக்க வேண்டும். இந்தியாவுக்கும் சீனாவுக்குமான இந்தப் பனிப்போரை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இந்தியாவின் நற்பைப் பெற முயலவேண்டும்.

இது மட்டும் சாத்தியமானால் ஐக்கிய இலங்கை என்ற பேச்சை முடிவுக்கு கொண்டு வருவது வெகு சுலபம். இலங்கைத் தீவைப் பிரித்து அதன் மத்தியில் ஒரு சர்வதேசக் கோடு விழந்து விட்டால், ஈழத் தமிழர்கள் இப்போதைக்கு தங்களைக் காத்துக் கொள்ள இதுபோதும்! நாளை நடக்கப் போவது யாருக்குத் தெரியும்?

இந்திய வைஸ்ராய் கர்சான் பிரபு பிரித்தாலும் சூழ்ச்சிக்கு வித்தாக அப்போதைய வங்காளம் என்ற மாகாணத்தில் இந்து, முஸ்லிம்களைப் பிரிக்க 1905ல் வங்களத்தின் மையத்தில் ஒரு கோடு போட்டார். அது மேற்கு வங்காளம், கிழக்கு வங்களம் என்று ஆகி, 1911ல் மீண்டும் ஒன்றாகி, பிறகு பிரிந்து, பிரிவினைக்குப்பின் கிழக்குப் பாகிஸ்தானாக மாறி, இன்று இந்திராகாந்தி புண்ணியத்தில் வங்காள தேசம் என்ற சுதந்திர நாடாகத் திகழ்கிறது. அதுபோல் அடுத்து வீசப்போகிற அரசியல் காற்றில் தமிழ் ஈழம் தனிநாடாக மலரலாம். அல்லது தமிழ்நாடுடன் சேர்ந்து ஒரெ நாடாகவும் மலரலாம். யாருக்குத் தெரியும்? நாம் நகார்த்தும் காய் மட்டும் சரியான திசையில் இருக்கவேண்டும்.

இதைத்தான் ஏற்கனவே ‘தமிழ் ஈழமும் மதுரை மீட்ட சுந்தர பாண்டியனும்’ என்ற எனது கட்டுரைகளில் சொல்லியிருக்கிறேன்.

இப்போது ஈழத்தமிழர்கள் செய்ய வேண்டியது, கர்சான் பிரபு வங்காளத்தில் போட்டது போல் இலங்கை தீவின் மையத்தில் ஒரு சர்வதேசக் கோடு வர வழி வகுக்க வேண்டும்.! இதற்காக இந்தியாவின் உடனடி ஆதரவைப் பெற ஈழத் தமிழகள் இந்தியாவின் 29வது மாகாணமாக மாறலாம். இது இந்தியாவை மனதில் வைத்து செய்ய வேண்டிய அவசியல்லை. தமிழர் தந்தை செல்வா அவர்கள் சொன்னது போல் உங்களுக்கு 20 கடல் மைல் கூப்பிடு தொலைவில் இந்தியத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதற்காகச் செய்யுங்கள்.

இனம் இனத்தோடு தான் சேரவேண்டும் என்று மலேசியாவின் சராவாக், சுபா மாகண மக்கள் போர்னியோத் தீவைப் பிரிக்க முடிவு எடுத்தததைப் போல் நீங்களும் இந்தியவின் 29வது மாகாணம் தமிழ் ஈழம் என்று முடிவு எடுங்கள். முதலில் தாமிழர்கள் நாம் ஒன்று சேருவோம். பிறகு வானம் நம் வசப்படும்!

இதுவரை பட்டது போதும். இனியாகிலும் துன்பம் வரும் முன் காப்போம் என்று துணிந்து செயல்பட்டால் தான் ஈழத் தமிழர்கள் சீனாவிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முடியும். இல்லையெனில் காலங் காலத்திற்கும் இனிமேலும் இரத்த சகதியில் புரள வேண்டியதுதான்.

ஈழத் தமிழர்களிடையே இந்தியவின் 29வது மாகாணமாக திகழ கோரிக்கை வலுக்கும்போது, இம்முடிவை இந்தியா எதிர்க்க எந்த நியாயமுமில்லை. இப்போதைய சூழ்நிலையில் சீனாவின் அரசியல் தந்திரத்தை முறியடிக்க இது இந்தியாவிற்கு மிகபெரிய வரப்பிராசாதமாக அமையும். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளும் ஐ.நா மூலம் இலங்கையில் வாக்கெடுப்புக்கு துணை செய்யும் சூழல் உருவானால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை! வாய்ப்பை பயன் படுத்திக் கொள்வதுதான் புத்தி சாலித்தனம்!

ஈழத் தமிழர்கள் படுகொலையில் இந்தியாவிற்கும் பங்கில்லையா? அப்படியிருக்கும் போது அந்த நாட்டோடு எப்படி சேர்வது என்ற கேள்வி அனைத்து தமிழர்கள் மனதையும் உறுத்தும் ஒரு அம்சம்தான். இப்போதைக்கு இதை நினைவு கூறத் தேவையில்லை. உலக வரைபடத்தில் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும்! அதற்காக நாம் எந்த தியாகத்திற்கும் தயாராவோம். நடந்ததை மறப்போம். நடப்பதை நினைப்போம்.

இப்போதைக்கு இந்திய அச்சுறுத்தலை விட சீனாவின் அச்சுறுத்தல் மிகப் பயங்கரமானாது. எலிக்குப் பயந்து ஓடி சிங்கத்திடம் அகப்பட்ட கதை போல் ஆகிவிடும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இன்று இருப்பவர்கள் என்றும் இருப்பார்கள் என்று நினைக்கத்தேவை இல்லை.
தமிழர்களுக்கு ஆதரவானவர்களும் ஒருநாள் புது டில்லியில் அமரலாம். அதுவரை காத்திருப்போம்.