Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Friday, January 22, 2010

மனிதாபிமானம் – சிறுகதை

manithapi

ம்மே குத்துக்கல்லாட்டம் உக்காந்து கிடக்காம ஆக வேண்டியதைப் பாருங்க. ரோசாமணியைப் பெண் பார்க்க வாராக. இன்னும் மணி நேரம் கூட இல்லை”.

“எலே என் செல்ல ராசா, நெசம்மாவா சொல்றே?”  

நெசம்மாத்தான் பாட்டி. எங்க சின்ன முதலாளிதான் வெவரம் சொன்னாரு. மாப்பிள்ளைக்கு ரோசாமணியை விட பெரிய படிப்பாம். சென்னையில் ஒரு பெரிய மருந்துக் கம்பெனியில் வேலையாம்.  நல்ல சம்பளம். கவுரவமான குடும்பம்னு சொன்னாரு”. 

“தங்கச்சிக்கு சீர் செனத்தியெல்லாம் பேசியாச்சா ஆறுமுகம்”. தாயின் குரலில் கவலை. 

“நம்ம குடும்பத்தை பத்தி முதலாளி வெவரமா சொல்லிட்டாராம். அவங்களுக்கு படிச்ச பொண்ணா குடும்ப லட்சணமா இருந்தாப் போதுமாம். நம்மால முடிஞ்சத செய்யச் சொல்லிட்டாக. சம்மதிச்சுப்புட்டுத்தான் வாராக”  

“ராசா என் வயித்துல பால வார்த்த. அந்த நீலியம்மன் இன்னைக்காவது கண்ணைத் திறந்தாளே! அப்படியே உனக்கும் ஒன்னப் பார்த்துட்டா ஒரு செலவா போகும்”.

“பாட்டி நீ வாய மூடி சும்மா இருக்க மாட்டே? கல்யாணாச் செலவு அவங்கது. நீ ஓசில ஒல வைக்கப் பார்க்கியா? போங்க. போயி முதல்ல ஆக வேண்டியதைப் பாருங்க”.  

”சரி ஆறுமுகம்! ரோசாமணிக்கு சேதி சொல்லியாச்சா?”

“மதியமே அவ ஸ்கூலுக்குப் போயி சேதிய சொல்லிட்டேன். வந்திருவா”.

நம் நாட்டின் பட்ஜெட் பற்றிக் கவலைப்படாத குடும்பங்களில் ஆறுமுகசாமி குடும்பமும் ஒன்று. இரண்டு பேர் உழைத்தும் பற்றாக்குறை நிலவரம்!

மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை அதுவும் நல்ல நிலையில் இருந்த குடும்பம்தான். அவன் தந்தைக்கு இதய நோய் என்ற வடிவில் துரதிருஷ்டம் அக்குடும்பத்தை தொற்றிக் கொள்ள, அது அக்குடும்பத்தின் சொத்துக்களையும் விழுங்கி, ரோசாமணிக்கு என்று இருந்த சேமிப்பையும் சேர்த்து ஏப்பம் விட்டு விட்டது.

ரோசாமணி ஒரு பட்டதாரி ஆசிரியை. படிப்பைப் பொறுத்த வரை அவள்தான் அந்த ஊருக்கு கின்னஸ் ரேகார்டு. பெயருக்கு ஏற்றாற்போல் அவள் உணமையிலேயே  அழகு ரோசாதான்.  அக்கிராமத்து சொந்தங்களில் ரோசாமணியை மணந்து கொள்ள பலருக்கு கொள்ளைப் பிரியம். அடைந்தால் ரோசாமணிதான் என்று சிலர் வரிந்துகட்டிக் கொண்டிருக்க, அவள் தந்தையோ படிப்பை அளவு கோலாக வைத்து, வெளியில் மாப்பிள்ளை பேசி முடித்து விட்டார். அவள் பருவம் இசைத்த ராகத்திற்கு மயங்க்கிக் கிடந்த சொந்தங்கள் அதிர்ந்து போனார்கள். ஏமாற்றம் பொறாமையாய் வளர்ந்து குரோதத்தில் முடிந்தது. 

ரோசாமணி குடும்பதின் நிலை தலைகீழானதும் அவள் தந்தை பேசி முடித்திருந்த மாப்பிள்ளை வீட்டார் நழுவிக் கொண்டனர். திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கையில் மருத்துவமனையில் இருந்த அவருக்கு விவரம் எப்படியோ கசிந்து விட, செயற்கை சுவசத்தில் ஒட்டிக்கொண்டிருந்த அவர் உயிர் அதிர்ச்சியில் விடை பெற்றுக்கொண்டது.

அவள் தந்தையின் மறைவுக்குப் பிறகும் எத்தனையோ சம்மந்தங்கள் வரத்தான் செய்தன .சிலர் கொண்டு வந்த வரதட்சணை அளவு கோல் ரோசாமணியின் குடும்ப சக்திக்கு எட்டவில்லை. வரதட்சணையை வற்புறுத்தாதவர்களிடம் அவள் சொந்தங்கள் இல்லாதையும், பொல்லாததையும் சொல்லி கலைத்து விடுவதில் குறியாயிருந்தனர்.

எப்படியோ ரோசாமணியின் தந்தையிடமே “ஆண்பிள்ளையிருக்க பெண்ணைப் படிக்க வைப்பானேன்” என்று சவடால் விட்டவர்களுக்கு அக்குடும்பம் மூன்றாண்டு காலம் தீனி போட வேண்டியதாயிற்று. இத்தனை காலம் மௌனத்தில் ஊர்ந்த அவ்வீட்டின் வாயிலை இப்போதுதான் இன்ப கணங்கள் எட்டிப் பார்க்கின்றன. வீடு தடபுடல் ஆக்கிக் கொண்டிருந்தது.  

அந்தத் தனியார் பள்ளியில் பணி முடிந்து ரோசாமணி வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அவள் பயணம் செய்த பேருந்து, ரயில்வே கேட்ட் திறப்பதற்காக காத்திருக்க, தாமிரபரணிக் கரையின் துடிப்பை அவள் கண்கள் அளந்துகொண்டிருந்தன. 

செந்நெல் வயலில் தென்றால் தவழ, இளம் பயிர்களில் அலைகள் தோன்ற அந்த இதமான காட்சி மனதைக் கொள்ளை கொண்டது.   

ரயிவே கேட் திறந்தது, இறக்கைகள் முளைத்து விட்டது போல் வாகனங்கள் பறந்தன. என்னதான் இயற்கைக் காட்சிகளும், தோழிகளின் பேச்சுகளும் அவள் மனதை அமைதிப் படுத்த முயன்றாலும், ஊர் நெருங்க நெருங்க அலைபாயும் அவள் மனதில் இன்னும் ஆறதா ரணம் சிந்தும் நிகழ்வுகள் பீரிட்டுக் கிளம்பின. 

“புதுக்குளம் இறங்குங்க.” கண்டக்டர் குரலில் உயிர் பெற்றாள். 

“ரோசாமணி என்ன கனவா? தூக்கத்தில் திருநெல்வேலி போயிடாதே...” சிரிப்பும் கும்மாளமுமாய் தோழிகள் இறங்க.... கனத்த மானதுடன் ரோசாமணி இறங்க்க்கினாள்.

நெடுஞ்சாலையிலிருந்து எதிரில் பிரியும் புதுக்குளம் விலக்கு கிளைச் சாலைக்கு வந்தனர்.

“ரோசாமணி விட்டுக்குப் போய்விட்டு கால்மணி நேரத்தில் உன் வீட்டுக்கு வந்து விடுவோம். அதுக்குள்ள மாப்பிள்ளையை அனுப்பிவிடமாட்டியே?”

“சீ போடி...”

“அட வெட்கத்தைப் பாரேன். எதற்கும் கொஞ்சம் மிச்சமிருக்கட்டும், மாப்பிள்ளைக்கு.

“ஏய் நீ சும்மாவே இருக்க மாட்டியா” அவள் பதில் சொன்னதும் தோழிகள் பிரியும் நேரம், அந்த சம்பவம் நடந்தே விட்டது. புளியமரத்தடியில் நின்று கொண்டிருந்த அவன் அவர்களை நோக்கி வந்தான். 

“அந்தப் பைத்தியம் வற்றான். எதுவும் வாங்கம போக்கமாட்டான். பர்ஸுகளைத் துளாவினார். ஆனால் அவனோ     

“ரோசாமணி நான் பழசெல்லாம் மன்னிச்சிடறேன். என்னைக் கட்டிக்கோயேன்.  இன்னிக்கு சினிமாக்கு போகலாம் வர்றியா?”

என்னடா சொன்னே...” ஓங்கிய அவள் கையைப் பிடித்து முத்தமிட முயன்றான். வெடுக்கெனப் பிடிங்கிக் கொண்டாள். 

“நீ என்ன அடிக்க வந்தே... உன் வண்டவாளத்தை ஊருக்குள்ளே போயி சொல்லிடு வேன். ஆமா...” அவள் பதிலுக்கு அவன் காத்திருக்கவில்லை.  பக்கத்திலிருந்த வாழைத் தோப்புக்குள் புகுந்து மறந்தான்.

ரோசாமணி வீடு களைகட்டியிருந்தது. உள்ளே அவளுக்கு அலங்காரம். அவமானத்தால் குன்றிப்போயிருந்த அவள் மனம் அடிக்கடி முகத்துக்கு வந்தது. என்னதான் மேக்-ஆஃப் போட்டாலும் முகம் வெளிறிக் கிடந்தது. அவளைக் கூடத்துக்கு அழைத்து வந்தனர்.

கூடத்தில் மாப்பிள்ளை விட்டார் உள்ளூர் வாசிகளுடன் கலகலப்பாய் வார்த்தையாடிக் கொண்டிருந்தனர். அங்கு ரோசாமணி வந்ததுதான் தாமதம். நிலைமை தலைகீழாகி விட்டது. கலகலப்பு எங்கோ ஓடி ஓழிந்து கொண்டது.

“ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவு. உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும். நல்லா யிருக்குடா கதை.  தேடிப் பிடிச்சிருக்க பாரு பொண்ண. மேயப்போறா மாட்டுக்கு கொம்புல புல்லுக் கட்டு கேட்குதாம். இன்னும் ஏண்டா இடிச்ச புளி மாதிரி உட்காந்திருக்கே...” ஏழுந்தாள்.

“அம்மா நீங்க என்ன சொல்றீங்க.” பதைபதைத்தான் ஆறுமுகம்.

“ம்... என்னை ஏன்யா கேட்கறே... அந்தக் கன்றவிய என் வயலா வேறே சொல்லனு மாக்கும்...” இந்தாதானே இருக்கா ஒன் தங்கச்சி... கேளேன் நடு ரோட்ல நடந்த கூத்த... நாங்க சீர்வரிசைதான் கட்டு செட்டா வேண்டாம்னு சொன்னொம். ஆனா மனம் ரோஷம் வேண்டாம்னு சொல்லல... உள்ளுர்ல வெல போகாத மாடு வெளியூர்லயா போகும்னு சொல்வாங்க. சும்மாவா சொன்னாங்க. ஏண்டா அருண் இன்னுமா உட்கார்ந்திருக்கே.”

உலகின் அத்தனை இடிகளும் அவன் தலையில் இறங்கியது போலானான் ஆறுமுகம். அவன் முதலாளியைப் பார்த்தான். “ஐயா நிங்களாவது ஒரு வார்த்த சொல்லுங்க... போக வேண்டாம்னு...” கூடத்தில் ஒரே கூச்சல்.

ரோசாமணியின் மனமோ குமுறிக் கொந்தளித்தது. உள்ளங்கைக்குள் முகத்தைப் புதைத்து மனதை அடக்கி விடப் பார்த்தாள். அவள் பொன்னுடல்தான் குலுங்கியது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவியாய்த் தவித்தாள். மலைப் பிரதேசங் களைத் தேடி மனதை அமைதிப்படுத்த முயன்றாள். அவைகள் எரிமலைகளாயின. துருவங்களின் பனிப்பொழிவை நாடிப் பார்த்தாள். அவைகள் சுட்டெரித்தன. வெண்ணிலாவில் அடைக்கலம் வேண்டிப் பார்த்தாள் அது பேச மறுத்து ஒளிந்து கொண்டது.

ஏ! மனிதாபிமானமே! உன் விலைதான் என்ன?  அவள் துன்பத்தின் கூர்முனை அதை யும் சீண்டிப் பார்த்தது... ம்.. தெரியும். என் உயிர்தானே. கொடுத்து விடுகிறேன் இனியும் என் அப்பாவி அண்ணன் வாழ்விற்கு ஒரு வினாடி கூட தடையாய் இருக்க மாட்டேன். பொங்கி ஓடும் தாமிரபரணியே! பொறு ஒரு நிமிடம்! இதோ வந்து விடுகிறேன். என் தந்தையிடம் என்னையும் சேர்ப்பித்துவிடு... எழுந்தாள்.

அருண்குமாரும் எழுந்தான். 

“அம்மெ நீ செத்த வய முடி சும்மா இருக்கியா” அவன் கணீர் குரல் சூழ்நிலையை அமைத்திக்குக் கொண்டு வந்தது. அவன் பார்வை ஆறுமுகசாமியின் குடும்பத்தார் மீது விழுந்தது. வாள் வீச்சென அந்த அமைதியைக் கூறுபோட்டன அவன் வாத்தைகள். “நீங்க எதையும் மனசில வைத்துக் கொள்ள வேண்டாம். எங்கம்மா பேசியதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் இங்கு வரும் முன் புதுக்குளம் விலக்கில் இளநீர் சாப்பிட காரை நிறுத்தியிருந்தோம். ஒரு பஸ்ஸிலிருந்து நான்கைந்து பெண்கள் இறங்கி வந்தனர். அவர்களில் ஒருத்தியை ஒரு பைத்தியம் வம்புக்கிழுத்தான். அவள் மீது எந்தத் தவறும் இல்லை. நான் காரை விட்டு இறங்கி அவனைப் பிடிக்க நினைத்தேன். அதற்குள் அவன் ஓடிவிட்டான். உண்மை பேசுபவன் ஓடுவானா? உங்க முதலாளி வார்த்தைய நம்பித்தான் நான் இவ்வளவு தூரம் வந்ததே. அந்தப் பெண்தான் உன் தங்கை என்று எனக்கு அப்போது தெரியாது. உன் குடும்பத்துக்கு ஏற்படும் இன்னல்களை உன் முதலாளி சொன்ன போது அது இத்தனை தீவிரமாயிருக்கும் என்று நான் கனவிலும் கருதவில்லை. நல்லது நடக்க நாலுபேர் என்றால் அதைக் கெடுக்க பத்து பேர் இருப்பார்கள் போலும்.  எனக்கு உன் தங்கையை ரொம்ப பிடிச்சிருக்கு.”

மனிதாபிமானத்தை நேரில் பார்க்க ரோசாமணி தலையை நிமிர்த்தினாள். விழிநீர் மறைவில் அவனைப் பார்த்தாள். தன்னைச் சூழ்நிதிருப்பது வெறும் மூடுபனிதானா? விலகினால் தெரியுமா நட்சத்திரம்?

அவன் வார்த்தைகளில் நிலைமை இயல்புக்கு வர, அருண்குமார் பார்வை தாயிடம் திரும்பியது. “உங்களுக்கு வரவர என்ன பேசரதுனே தெரியலை. ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு ஒரு பெண்ணே எதிரியா? என்னமா இது. கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். மறந்து விட்டீர்களா? இத்னை பெரிய மனிதர்கள் இங்கே கூடியிருக்க, ஒரு பைத்தியம் ஏதோ உளறியதுதான் உனக்கு பெரிசா போச்சா? சென்ற வாரம் என்னை ஒரு பெண் நிராகரித்தாள். நீ என்னமாய்ப் புலம்பினே. அப்படித்தானே இவர்களும் துடித்திருப்பார்கள்... ஆமா ஆறுமுகம். அவன் பார்வை திரும்பியது.

“எனக்கு பிறவியிலேயே கால் சிறிது ஊனம். என் மனோபலத்தாலும் சிகிச்சையாலும் அது சரியாகி விட்டது. காலைக் காட்டினான். ஆனாலும் எனக்கு நிலைத்துவிட்ட பழைய பெயரை மாற்ற முடியவில்லை. இதையே காரணம் காட்டி எனக்கு பலர் பெண் கொடுக்க மறுத்து விட்டனர். நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. நாளை உன் தங்கை என்னைத் தவறாக நினைக்கக் கூடாது பார். இப்பக் கேள், அவள் சம்மதத்தை. அவளுக்குப் பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசலாம்”.

ரோசாமணியின் உள்ளம் அவள் வாய்க்கு வரத் துடித்தது. ஆனால் வார்த்தைகள் ஒத்துழைக்கவில்லை. கதிரவனின் ஆளுகைக்குக் கிழ் அவன்தான் மனிதனாகத் தெரிந்தான். பெருமிதத்தில் விளங்கிய அவள் மனதை முகம் பிரதிபலித்தது.

நான்கு கண்களின் ஊடுருவலில் இரு உள்ளங்கள் சங்கமித்தன. அங்கு சுறக்கும் இன்பத் தேனுக்கு ஈடிணை இல்லைதானே!

“ரோசாமணி”... குரல் வந்த திக்கில் அனைவர் பார்வையும் திரும்ப “இன்று மெயில் வந்தது தாமதம் என்றாலும் உனக்கு சரியான நேரத்தில்தான் வந்திருக்கு இந்தக் கடிதம்.

நிகழ்ச்சிக்கு வரும் போது நேரில் கொடுக்கலாம் என்றுதான் எடுத்து வந்தேன்.  இது ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து வந்தாலும் என்னைப் பொறுத்த வரை இது உன் தந்தை உனக்கு அனுப்பியிருக்கும் சீதனம்தான் வாழ்த்துக்கள்!

கற்ற கல்வி காலத்துக்கும் உதவும் என்றார் போஸ்ட்மாஸ்டர். அதை ஆமோதிப்பது போல் வெளியே வானம் தூறிக்கொண்டிருந்தது.

FULL VERSION - FREE DOWNLOAD

Sunday, June 28, 2009

அலைகள் பலவிதம்

பொழுது புலர்ந்திருக்க, போர்டிகோவில் நின்றிருந்த ஹோண்டா சிட்டியில் அவசர அவசரமாய்த் தன் உடமைகளைத் திணித்துக் கொண்டிருந்தாள் அருணா.

அருணா ஒரு நவீனயுக யுவதி. சென்னையில் அவள் வங்கிக்கான ஐந்து நாள் பயிற்சி முடிந்து இன்று
மதுரை திரும்புகிறாள்.

“ரகு அண்ணா! 7.50க்கு ரயில். சீக்கிரமாத்தான் கிளம்பேன்.”

“வந்துட்டேன் அருணா.”

“இல்லே நீ வேணும்னா தூங்கு. நான் காரை ஸ்டேஷனில் விட்டு விட்டுப் போறேன். ஸ்பேர் சாவிய மறக்காம எடுத்துட்டுவா?”

“எல்லாவற்றிலும் உனக்கு அவசரம்தான். வண்டிக்கு மட்டும் ஸ்பேர் சாவி ஞாபகம் வருதா? அம்மா, அப்பா குறை தெரியாம உன்னை வளர்த்து விட்டேன். நாலு பேரைப் போல நீயும் இருக்கணும். என்னை அனுபவம் போதாதவன்னு பிறர் சொல்லும்படி வைத்து விடாதே அருணா.”

“ஆரம்பிச்சாச்சா? நான் மதுரை போன மாதரித்தான்.” அவள் பார்வை அவனை அடக்கியது.

“சரி சரி உன்னால என் வாயைத்தான் மூட முடியும் அருணா.”

“ஊர் வாய மூடனும்னா இப்பச் சொல்லு ரகு. உன் டேஸ்டுக்கு ஏற்றால் போல் அழகா அம்சமா ஒருத்திய…”

“நோ நோ அருணா! உன் வாழ்க்கை பிரச்சினை முதலில் முடியட்டும்.”

“நீ மூளையோடுதான் பேசறியா ரகு?” இல்ல குளிச்சிட்டு வரும்போது அதையும் வெளுத்துக் காயப்போட்டுட்டு வந்துட்டாயா? நீ பேசாம மதுரைக்கே வந்துரு. உன் டேஸ்டுக்கு தகுந்த மாதிரி சமைச்சாவது போடுறேன்.”

“நீ சென்னைக்கு மாறி வரணும். நாம ரெண்டு பேர் கல்யாணமும் ஒரே முகூர்த்தத்தில் நடக்கணும். அது தான் என்னோட ஆசை அருணா.”

“என் நிலைதான் உனக்குப் புரியலை. என் அவசரமுமா தெரியாது? சீக்கிரமா வண்டில ஏறிக்க.”

ரகு ஏறியதுதான் தாமதம். அருணா வண்டிய விருட்டெனக் கிளப்பினாள்.

எழும்பூர் ரயில் நிலைய வளாகம் உட்சபட்ச பரபரப்பில் திணறிக் கொண்டிருந்தது. வாகனங்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தன. ரயில் நிலையத்தின் எதிரே நின்று விட்ட பஸ்ஸிலிருந்து குதித்த நிஷாந்த், நிலையத்தை நோக்கி ஓட, எதிர்பட்ட ஆட்டோவில் இடித்தான். ஆட்டோ டிரைவரிடம் ‘சாவு கிராக்கி’ பட்டம் பெற்றுக் கொண்டு அடுத்த வழித் தடுப்பில் ஏறி நிலையத்தை பார்த்தபடி கார் பாதையில் இறங்க, வேகமாக வந்த ஹோண்டா சிட்டி, அவனை முத்தமிட்டு நின்றது. அவன் ஆட்டோ டிரைவரிடம் வாங்கியிருந்த பட்டத்தை கார் டிரைவருக்கு கொடுத்துவிட கோபத்தில் திரும்பினான். கண்ணாடி வழியே ஸ்டியரிங் வீலுக்குப் பின்னாலிருந்த அருணாவின் தோற்றம் அவன் கண்களைப் பரவசப் படுத்தியிருக்க வேண்டும்! மௌனித்தான்.

“சாரி” என்ற அவள் வார்த்தகளைத் தொடர்ந்து அவள் இதழ்கள் உதிர்த்த புன்னகை ஜீரோ டிகிரிக்கு அவனை குளிர்விக்க, நிஷாந்த் உரைந்து போனான்.

மணி 7.47. ‘பயணிகள் கவனத்திற்கு. 6127 குருவாயூர் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் ஐந்தாவது பிளாட்பாரத்திலிருந்து புறப்படும்’ என்ற அறிவிப்பைக் கேட்ட நிஷாந்த், மின்னல் வேகத்தில் ஓடி மின்அணு எந்திரத்தில் முன் பதிவை உறுதிப் படுத்தி விட்டு, எஸ்கலேட்டரை நோக்கிப் பாய்ந்தான். ஐந்தாவது பிளாட்பாரத்தில் நின்றிருந்த ரயிலில் S-6 பெட்டிக்கு அவன் தாவவும், ரயில் நகரவும் சரியாய் இருந்தது. இருக்கை எண் 48. அது பக்க இருக்கைகளில் ஒன்று. மேல் பெர்த்தில் சூட்கேசை வைத்தவன் கீழே குனிய ‘வாவ்’ அவன் மனம் கூவியே விட்டது! காரில் வந்து அவனை இடித்த அதே பெண்! அருணாவின் பார்வையை ரகுவிடமிருந்து பறித்துக் கொண்ட ரயில் வேகமெடுத்ததும், உள்ளே திரும்பியவள் பார்வை நிஷாந்த் மீது விழ, லேசாய்ப் புன்னகைத்தாள். காதல் பூக்கள் உதிர்வதாக உணர்ந்தான்! நளினமான சிவந்த தளிர் விரல்கள்! உடல் முழுதும் சுடிதார்ப் பூக்கள்!

“காயம் எதுவும் இல்லையே! ரயிலைப் பிடிக்க வேண்டிய அவசரம். அதான் காரை கொஞ்சம் வேகமாய் ஓட்டி வந்தேன்.”

இந்த விரல்கள் ஒத்தடம் கொடுக்குமானால் அவனுக்கு காயம் பட்டிருந்தால் தேவலாம் போலிருந்தது. சுதாரித்துக் கொண்டவன் “எனக்கும் அதே பிரச்சினைதான். எல்லாம் அப்பவே மறந்து விட்டென், உங்கள் முகம் தவிர.”

“என் முகம் என்ன அவ்வளவு அசிங்கமா?” சிரித்தாள்

“சீ சீ என்னங்க நீங்க. 1000 வாட்ஸ் பளிச் உங்க முகத்தில்!”

“என் அண்ணன் காருக்கு ஏதும் ஆகியிருக்குமோ வென முறைத்தான். நீங்க வேறு கோபத்தில் திரும்பினீர்களா... உங்களுக்கு அடிபட்டிருக்குமோவென பயந்து போனேன்.”

ஆளை பார்க்கா விட்டாலும், உடன் வந்தது அண்ணன் என்பதில் அவனுக்கு அலாதி திருப்தி. அவள் மணமானவளோ? அறிந்து கொள்ள அவனுள் ஒரு துடிப்பு. அவள் கழுத்தைத் துப்பட்டா மறைத்திருந்தது.

“உள்ளே வரும்போது நான் ஒரு ஆட்டோவை இடித்து விட்டேன். அவன் என்னை அசிங்கமா திட்டிவிட்டான்.”

“ஓகோ அதை என் மீது திருப்பி விடத்தான் முறைத்தீர்களாக்கும்?” அதே டிரேட் மார்க் புன்னகை! “பிறகு ஏன் என்னைத் திட்டாமல் நிறுத்திக் கொண்டீர்கள்?”

“எல்லாம் உங்கள் புன்னகையின் மகிமை தான். முதலில் அதை காப்பீடு செய்து விடுங்கள்.”

“நல்லாவே பேசறீங்க” வார்த்தையை அவள் முடித்த போது TTR வந்து அவள் டிக்கெட்டை சரி பார்த்தவர், நிஷாந்திடம் திரும்பினார். அவனுள் ஒரு பளிச்! TTR அவன் பெயரை தேடிய போது, சார்ட்டில் அவன் கண்கள் மேய, இருக்கை எண் 47 Ms. அருணா 23 என்றிருந்தது. Miss என்று எதிர் பார்த்தவனுக்கு ஏமாற்றம்! அடுத்த ஏமாற்றம் அவளுக்கு 18 வயது இருக்கலாம் என்ற அவன் எதிர்பார்ப்புக்கு மாறாக அவள் இளமைக்குள் மேலும் 5 ஆண்டுகள் ஒளிந்திருந்தது!

சென்னைப் புறநகரின் காலை நேரத் துடிப்புகள் அருணாவின் கண்களில் படமாயின.

அவளிடமிருந்த தமிழ் நாளிதழை வாங்கிக் கொண்ட நிஷாந்த் பக்கங்களைப் புரட்டினான்.

காலமான கைம்பெண் சொத்துக்காக நடந்த வழக்கில் கணவன் வீட்டுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!’ என்ற செய்தி அவன் கவனத்தைக் கவர்ந்தது.

திருமணமாகி மூன்றே மாதங்களில் கணவனை இழந்த பெண்ணை, அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று கூறி கணவன் வீட்டார் விரட்டி விட்டனர். அவள் தந்தை அவளை மேலும் படிக்க வைத்து, ஒரு வேலையில் சேர்த்து விட்டார். வாரிசு இல்லாமல் மரணமடைந்த அவள் பணத்துக்கும், சொத்துக்கும் யார் வாரிசு என்பதில் அவள் தந்தைக்கும், கணவர் வீட்டாருக்கும் நடந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியிருந்தது. செய்தியைப் படித்து முடித்ததும்...

“மேடம் படித்தீர்களா இந்த செய்தியை. அருணா பதில் சொல்லும்முன் பாதையைத் தாண்டி அமர்ந்திருந்த பெரியவர் பதில் சொன்னார். “நானும் அந்த செய்தியைப் படித்தேன் தம்பி. ஒரு சிற்பியின் கண் கொண்டு, மனிதனின் யதார்த்த வாழ்வை ஒவ்வொறு கோணத்திலும் நுட்பமாக ஆராய்ந்து எழுத்துக்களாக நமக்குச் செதுக்கித் தந்தவர் லியோ டால்ஸ்டாய். அப்படி ஒரு யதார்த்தமான தீர்ப்பை நாம் கோர்ட் மூலம் எதிர்பார்க்க முடியாதுதான். நீதிமன்றத்தின் கண்களுக்கு சட்டம் மட்டுமே தெரியும். மனச்சாட்சி எப்படித் தெரியும் தம்பி?.

“எப்படி சொல்றீங்க?” ஒரு பெண்ணுக்கு மணமான பின் புகுந்த வீடுதானே எல்லாம்.

“நீங்க சொல்றது வாஸ்தவம் தான் தம்பி. ஆனா அதிர்ஷ்டம் இல்லை என்று விரட்டி விடப்பட்டவள் சொத்துக்கு, புகுந்தவீடு எப்படி உரிமை கோரலாம்?”

“சார்! நீங்க சொல்வதுதான் சரி. பெண்களின் வாழ்க்கை ஒரு ஓடம் போன்றது. அதன் பயணத்துக்கு அன்பு என்ற துடுப்பு அவசியம் தேவை. இவங்க பிறந்த வீட்டின் அன்பில் பயணம் செய்தவர்கள். அதன் பலனை பெற்றவர்கள் அனுபவிப்பதுதான் நியாயம். ஆனால் படகையே கவிழ்த்து விட்ட புகுந்த வீட்டார், பலனைத் தட்டிப் பறித்திருக்கின்றனர். அதற்கு நீதிமன்றமும் துணை போயிருக்கிறது. இது அநியாயம் சார்.” என்றாள் அருணா.

“உண்மைதான்!” அனைவரும் அருணாவை அமோதித்தனர்.

“இப்படி பேசுகிறாள்! ஒரு வேளை இவளும் மணமானவளோ?” துப்பட்டா விலகி யிருந்த இடைவெளியில் அவள் கழுத்தைப் பார்த்தான். ஒரே ஒரு செயின் மட்டும் மின்னியது. சே!..சே!

விழுப்புரம் இரயில் நிலையம். டீ காபி.... டீ காபி...

“இரண்டு காபி” என்றாள்.

அவன் பணம் கொடுக்க பர்ஸை எடுத்தான்.

“இல்ல...நான் தானே வாங்கினேன். நீங்க காபி நல்லா இருக்கா பாருங்க.”

“நீங்க வாங்கிக் கொடுத்தால் ருசிக்கு கேட்கவா வேண்டும்?”

அப்போது ஊட்டிய இட்லியை அம்மாவிடம் வாங்கிக் கொண்ட சிறுமி பிரீத்தி இருக்கைகளுக்கு இடையில் பின்னாலேயே நடந்து வந்து அருணாவை நெருங்கி விட்டாள். புறப்படும் போது ரயில் குலுங்க, சிறுமி லேசாகத் தடுமாற...

“பிரீத்தி ஒழுங்கா பார்த்து நட. கீழே விழுந்தா அம்மாவிடம் சொல்லாதே.”

“சரி அப்பாவிடம் சொல்லிக்கறேன்” என்று பிரீத்தி சொன்னதும் அனைவரும் சிரித்து விட்டனர். விழ இருந்த சிறுமியை அருணா பிடித்துக் கொண்டாள்.

“உனக்கு அப்பான்னா ரொம்ப இஷ்டமா?”

“ஆமா என்றவள் எனக்கு அம்மாவையும் பிடிக்குமே.” என்றபடி அருணாவையும் நிஷந்தையும் மாறி மாறிப் பார்த்தவள் “உங்க பாப்பா வரலையா” என்றதும் அவர்கள் இருவருமே சிரித்து விட்டனர்.

“யேய் வாயாடி இங்க வா. அவங்க அம்மா அப்பா இல்லை.” என்று அம்மா சொன்னதும் அவர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்த படியே சென்றாள் சிறுமி.

நிஷாந்த் பேப்பரை மறுபடி புரட்டினான். மணமகன் தேவை பகுதியில் ஒரு செய்தி பேனாவால் கட்டமிடப்பட்டிருந்தது.

வங்கிப் பணி 23/152 செ.மீ. பி.காம் சிவந்த நிறம். பொருத்தமான மணமகன் தேவை.
அந்தச் செய்தியை அவன் மனம் அசை போட்டது. எதேச்சையாய் அவள் பார்வை நிஷாந்த் மீது விழ, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களைப் பிடித்துக் கொண்டதும்,

“உங்களுக்கு பேங்கில் தானே வேலை.”

“ஆமா உங்களுக்கு எப்படித் தெரியும்? எங்க பிராஞ்சுக்கு வந்திருக்கீங்களா?” என்று அவள் கேட்க, சிரித்துக் கொண்டான்.

“முதல்ல உங்க சிரிப்பைத்தான் இன்ஷுர் செய்ய வேண்டும்.” என்றதும் அண்டார்டிகாவின் ஐஸ் முழுக்க அவன் தலைக்கு மேல் வந்தது போல் உணர்ந்தான்.

“இன்று காலை நம் கண்கள் ஒரு சவாலை ஏற்றுக் கொண்டுதான் சந்தித்திருக்க வேண்டும். நம் சந்திப்பிற்கு நிச்சயம் ஒரு அர்த்தமிருக்க வேண்டும். நீங்க என்ன நினைக்கிறீர்கள்?” நிஷாந்த் கேள்வியில் ஆர்வம் தொற்றிக்கொள்ள...

“நான் நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.”

பகல் மணி 1.00 திருச்சியில் சாப்பாடு முடிந்ததும் அசதியில் நிஷாந்த் மேல் பெர்த்துக்குத் தாவிப் படுத்துக் கொண்டான்.

ரயில் அந்த வளைவில் திரும்புகிறதா அல்லது உலகம் சுழல்கிறதா? அவன் மெய்மறந்தான்! அவன் கனவில் தேவதையாக வலம் வந்தாள் அருணா! அவளிடம் அவன் மனம் திறந்தான் நிஷாந்த்! அவள் பதிலுக்காக அவன் ஏங்கித் தவிக்க...

“மிஸ்டர் நிஷாந்த்” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தவன், மிரள மிரள விழித்தான்! அவன் பெயரை யார் கூப்பிட்டது?

“என்ன அப்படிப் பாக்கறீங்க! தூக்கத்த டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? மதுரை வரப் போகுது” என்றவுடன் கீழே குதித்தான்.

வெளியே அவன் பார்வை தாவியது. ரயில் சோழவந்தான் நிலையத்தில் சிக்னலுக்கு நின்றிருந்தது. அவன் பார்வை மீண்டு அவளிடம் சென்றது.

“நிஷாந்துனு கூப்பிட்டது நீங்களா?”

“ஆமா ஏன்? உங்களால் என் உத்தியோகத்தைத் தெரிஞ்சுக்க முடியும் போது, உங்க பேரை என்னால் யூகிக்க முடியாதா?”

பெயரை யூகிக்க ... இல்லை என்னைத் தெரிந்தவங்களாத்தான் இருக்கணும்...அவன் மூளையின் நினைவாற்றல் தொகுப்பிலிருந்து அவனுக்குத் தெரிந்தவர்கள் பட்டியல் அணிவகுத்தன! ஞாபகப்படுத்திப் பார்த்தான். ம்..கூம். ரயில் கிளம்பியது.

அருணா அந்த தினசரியை பெரியவரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு “நன்றி” என்றாள்.

“அது உங்க பேப்பர் இல்லையா?”

“இல்ல ஏன்?”

அசடு வழிந்தான்.

“உங்க பேர் எனக்கு எப்படித் தெரியும் என்று குழம்பியிருக்கிறீர்கள். சரிதானே?”

அவன் பார்வை ஆமா என்றது.

“என் அண்ணன் ரகுதான் சொன்னான். அவன் உங்க கிளாஸ்மேட்டாம்?”

“ஓ நீங்க ரகுவோட சிஸ்டரா? அப்ப நாம நெருங்கி வந்துவிட்டோம்!”

“என்னது”

“ரகு உங்கள பத்தி நிறைய சொல்லியிருக்கான். நாம தான் சந்திச்சதில்லையே!”

“இன்று காலையில் நானும் அண்ணனும் தான் காரில் வந்தோம். உங்களைக் கூப்பிட்டார். நீங்க ஸ்டேஷன் ஒலிபெருக்கி அறிவிப்பைக் கேட்டதும், நிற்காமல் ஓடி விட்டீர்கள்.”

“ஆமா எனக்கு மதுரையில் அவசரமான வேலை. டிக்கட் வேறு கன்பர்ம் ஆகலயா. அதான். இப்ப ரகு என்ன செய்கிறான்? பார்த்து நாளாச்சு.”

“ஒரு தனியார் கம்பெனில எக்ஸிகியூட்டிவா இருக்கான். ரகு விஷயமா நீங்க எனக்கு ஒரு உதவி செய்யனும். நான் உங்களுக்கு காபி வாங்கிக் கொடுத்ததிலும் கொஞ்சம் சுயநலம் உண்டு.”

“இந்த பயணத்தில் உங்களை நான் முழுசா நம்பிவிட்டேன். நீங்கதான் என்னை நம்பவில்லை போல் தெரிகிறது. நான் என்ன செய்யனும் சொல்லுங்க..”

“ரகு கல்யாணம் பண்ணிக்காம அடம் பண்றான். என் சூழ்நிலையைப் புரிஞ்சுக்காம பிடிவாதமா இருக்கான். அவனைக் கல்யாணத்திற்குச் சம்மதிக்க வைக்கணும்” அவள் ரகுவின் விசிட்டிங் கார்டை நீட்டினாள். ரயில் நின்றது.

மதுரை சந்திப்பு. ரயில் நிலைய கடிகாரம் மணி மாலை 4.25 என்றது.

“என்னிடம் ஒரு சூட் கேஸ் கொடுங்க”.

“தேங்க்ஸ் நிஷாந்த். நான் கேட்டுக் கொண்ட விஷயத்தில் எனக்கு உதவுங்கள். உங்கள் உதவியை என்றும் நான் மறக்க மாட்டேன். லக்கேஜ நான் மேனேஜ் பண்ணிகறேன்”. அவள் சூட்கேசை கையிலும் பையை தோளிலும் மாட்டிக் கொண்டு இறங்க ஆயாத்தமானாள்.

“கண்டிப்பாய் செய்யறேன் அருணா!” பிளாட்பாரத்தில் நடந்தவள் நின்றாள்.

“உங்க பேர்தானே? நான் ரிசர்வேசன் சார்ட்டில் பார்த்தேன்.” சிரித்தவன், ஆமா ரகு ஏன் இந்த விஷயத்துல பிடிவாதம் பண்றான்?”

“நான் மறுமணம் செய்து கொள்ள வேண்டுமாம்.”

உயரழுத்த மின்சாரம் அவன் இதயத்தைத் தாக்கியது போலானான் நிஷாந்த். அவன் கால்களுக்கு கீழே பூமி நழுவுவது போலிருந்தது.

“அதோ வர்றாங்களே... அவங்கதான் என் ஓராண்டுகால மணவாழ்க்கையில் மலந்த புது உறவுகள். அவங்க என் மாமியார். உடன் வருவது என் கணவரின் தங்கை. அவள் கையிலிருப்பது அப்பா முகத்தையே பார்த்தறியாத என் ஆறுமாதக் குழந்தை. மனோஜ். இவர்களுக்கு இன்று நான் தான் ஆதரவு. எனக்கு கிடைத்திருக்கும் வேலை மும்பைக் கலவரத்தில் உயிரிழந்த என் கணவருக்குப் பதிலாக எனக்குக் கிடைத்தது.”

மும்பைக் கலவரத்திலா?

“ஆமாம் நிஷாந்த். மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் 26-11-08 அன்று தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் பலியான 50 பேரில் என் கணவரும் ஒருவர். வங்கியின் தலைமை அலுவலத்திற்கு வேலை விஷயமாக சென்றிருந் தார். அன்று ஊர் திரும்ப இருந்தார். எமன் உருவில் வந்த தீவிரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் என் வாழ்வைப் பறித்து விட்டனர்!”

நிஷாந்த் சிலையாகி விட்டிருந்தான். இவள் வாழ்வு மொட்டிலேயே கருகக் காரணம் தீவிரவாதமா? இதற்கு முடிவுதான் எப்போது? அவன் உள்ளம் கனத்தது.

“நீங்க சொல்லுங்க நிஷாந்த். இவங்கள நான் உதறி விட்டு வந்துடனுமாம். ரகு சொல்றான். என் கணவர் படிப்புக்காக அத்தனையும் இழந்து விட்டு இவங்க நிர்கதியாயிருக்காங்க. என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்கள். அவள் கண்களில் நீர்
கசிந்தது.

நிஷாந்த் இன்னும் அவனுள் ஊடுருவிய அதிர்ச்சி அலைகளில் இருந்து மீளவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் அருணா. அவன் மனதுக்குள் கேட்டுக் கொண்டான்.

“கவிதா! மனோ அழாமல் இருந்தானா” அவள் பார்வை தன் மகன் மீது தாவியது.

“அண்ணி! மனோ சமத்தா இருந்தான்” குழந்தை அருணாவிடம் தாவியது.

“என் செல்லம்...” அருணா முத்த மழை பொழிந்தாள்.

“அத்தை! இவங்க ரகு அண்ணன் நண்பர். இன்று தற்செயலா ரயிலில் சந்திச்சேன். ரகு அண்ணனுக்கு நல்ல புத்திமதி சொல்லிக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைப்பதாக உறுதி சொல்லியிருக்காங்க.”

“என்னமோ அருணா! நல்லது நடந்தா சரிதான். உன் எதிர் காலத்தை உத்தேசித்து உன் அண்ணன் சொல்வதிலும் தவறு இல்லை.”

“அத்தை நீங்க கொஞ்சம் சும்மா இருக்கிறீங்களா? நிஷாந்த் நாங்க கிளம்பறோம். ரகு விஷயம் மறக்க மாட்டிங்களே?”

“நிச்சயமா. இன்றே அவனிடம் தொலைபேசியில் பேசறேன்.” கூடவே நடந்து நிலையத்துக்கு வெளியே மேற்கு வெளிவீதிக்கு வந்தான். அவர்கள் ஒரு ஆட்டோவில் ஏறியதும் நன்றியுடன் கையசைத்தனர்.

ஆட்டோ டவுன் ஹால் ரோட்டில் மறையும் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான். அருணா ஒரு அல்ட்ரா மாடர்ன்தான். ஆனால் கடமையையும் கண்ணாகக் கருதுகிறாள். சொத்து சுகம் மட்டுமே உலகமில்லை. நாம் வாழ்கிற வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கவேண்டும் என நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அவளை நினைத்துப் பெருமைப்பட்டான்.

கடலில் எத்தனையோ அலைகள் தோன்றினாலும் அத்தனையுமா கரை சேர்கின்றன? அவன் மனதில் எழும்பிய அலைகளும் இப்போது ஓய்ந்து அமைதியடைந்தன.

-முற்றும்-


(இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)