Sunday, April 26, 2009

தமிழ் ஈழமும் மதுரை மீட்ட சுந்தரபாண்டியனும் - III


ழத் தமிழர்கள் 1948க்கு முன்பு ஒன்றுபட்ட இந்தியா-இலங்கையை ஆண்ட ஆங்கிலேயர்களின் ஆட்சியையும் பார்த்திருக்கிறாகள். அதன் தாக்கம் 1970 வரை இரு நாடுகளிலும் நீடித்தது.

எங்கள் ஊர் வேம்பார் இலங்கைக் கடற்கரையிலிருந்து 20 கல் தொலைவில் உள்ள ஒரு இந்தியக் கடற்கரைக் கிராமம். கொழும்புத் தேங்காய் எண்ணையும், சிலோன் சாக்லெட்டுகளும் எங்கள் ஊரில் அப்போது சர்வ சாதாரணம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன வர்த்தகசபை ஒலிபரப்புதான் நான் இளமைக் காலத்தில் கேட்ட ரேடியோ நிகழ்ச்சிகள். அது பட்டியலிடும் செட்டியார் தெரு கொழும்பில் உள்ள அத்தனை வர்த்தக நிறுவனங்களும் இன்றும் என்மனதில் நிழலாடுகின்றது. ஆண்டு தோறும் இலங்கையிலிருந்து சொந்த பந்தங்களுடன் வந்து எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவையும் மாதாகோவில் திருவிழாவையும் போட்டி போட்டு நடத்தி அமர்களப்படுத்தும் பாங்கு தனி அழகு. "என்ன அண்ணே என்று இன்று ஆளே காணோம்" என்றால், "சிலோன் போய் வந்தேன்" என்பார்கள் சாதாரணமாக.

1956ல் அப்போதைய பிரதமர் S.W.R.D பண்டார நாயகா, சிங்களம் தான் இலங்கைத்தீவின் ஆட்சி மொழி என்று சட்டம் இயற்றி இந்த தொப்புள் கொடி உறவுக்கு சவுக்கடி கொடுத்தார். அதற்கடுத்த சாஸ்திரி-சிரிமாவோ பண்டார நாயகா ஒப்பந்தமும், கச்சத் தீவை தாரை வார்த்ததும், இந்திய இலங்கை நலன்களுக்காக தமிழர் நலன்களைப் பலிகொடுத்த நிகழ்வுகள். எங்கோ லண்டனிலிருந்து நம்மை ஆண்டவர்களுக்குத் தெரிந்த இந்த உறவின் இனிமையும் இதமும் டெல்லியில் இருப்பவர்களுக்கும் கொழும்பில் இருப்பவர் களுக்கும் தெரியாமல் போய்விட்டது.


1948 முதல் 1983 வரை ஒன்றுபட்ட இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள், செட்டியார் தெருவிலிருந்த தங்கநகை மாளிகைகளும் பிற வர்த்தக நிறுவனங்களும், கொழும்பு நகரில் இருந்து வேறு நாடுகளுக்கு வெளியேறிச் சென்ற காட்சியைத்தான் காண முடிந்தது. ரேடியோ நிலையங்கள் பள்ளி கல்லூரி மற்றும் பிற இடங்களிகளிலும் பணிபுரிந்த அத்தனை அறிவுலக பெருமக்களும் புலம் பெயர வேண்டிய கட்டயத்துக்குத் தள்ளப்பட்டார்கள். தமிழர்கள் வரலாற்றில் மிகவும் கசப்பான அனுபவங்கள் இவை!


அடுத்து 1983-லிருந்து இன்றுவரை தமிழ் ஈழ விடுதலைக்காக அவர்கள் போராடிப் பார்த்தாகிவிட்டது. இன்னும் ஒரு விடிவெள்ளி அவர்கள் கண்களுக்குப் புலப்படவில்லை.


தமிழ் ஈழம் கோரிக்கையில் எத்னையோ நியாயமான அம்சங்கள் உள்ளன. தமிழ் ஈழத்திலுள்ள நிலப்பரப்பைவிட, ஜனத் தொகையை விட, எத்தனையோ சின்னஞ்சிறு நாடுகள் எல்லாம் சுதந்திரம் பெற்று தனி நாடுகளாகத் திகழ்கின்றன. ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்வைக் கொடுக்கக் கூடிய அரசியல் தீர்வு இதுவாகத்தான் இருக்க முடியும். ஈழ சுதந்திரப் போராட்டத்திற்கு உலகிலுள்ள 10 கோடி தமிழர்களின் தார்மீக ஆதரவு இருக்கிறது. உயிருக்காகப் புலம் பெயர்ந்தவர்கள் கூட போராட்டம், பொருளுதவி என அத்தனையும் தியாகம் செய்கிறார்கள். ஆனாலும் தமிழ் ஈழம் எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது. தமிழ் ஈழம் அமைவதில் ஏன் இந்த இடர்பாடுகள்? முட்டுக் கட்டைகள்?


பதில் ஒன்றே ஒன்றுதான். நியாயமான அம்சங்களை மட்டுமே பார்த்த அவர்கள், தமிழ் ஈழம் அமைவதில் உள்ள சாதக / பாதகமான அம்சங்களை சுந்தரபாண்டியனைப் போல் அலசி ஆராய்ந்தார்களா என்றால், இல்லை என்பதுதான் பதில்.


சில நேரம் சில உண்மைகள் கசப்பாகத்தான் இருக்கும். ஆனாலும் அதையும் தெரிந்து, ஜீரணித்துக் கொண்டால்தான் நம் மனது நடுநிலையோடு ஒரு தீர்மானத்திற்கு வரமுடியும்.

அமெரிக்கா கண்டத்திலே உள்ள கியூபா என்ற சின்னஞ்சிறு தீவின் விடுதலைப் போரைப் பற்றித் தெரிந்து கொண்டால் இலங்கையில் இன்று நடக்கும் நிகழ்வுகள் நமக்குச் சில உண்மை களைப் புரியவைக்கும். ஏனென்றால் அதன் மறுஒளிபரப்பு காட்சிகள்தான் இன்று இலங்கை தீவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.


உலகின் சர்க்கரைக் கிண்ணம் கியூபா 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே ஸ்பெயின் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறப் போராடி வந்தது. அதோடு கறுப்பர்களின் அடிமைத்தன விடுதலையும் சேர்ந்து கொண்டது. 1886ல் கியூபாவில் அடிமைத்தனத்தை ஒழிப்பதாக ஸ்பெயின் அறிவித்தது. ஆனாலும் போராட்டம் நிற்காமல் அது விடுதலைப் போராக உருவெடுத்து வலுப்பெற்றது. இப்போது இந்தியா இலங்கையில் நடப்பதை வேடிக்கை பார்ப்பது போலத்தான், அமெரிக்கா தன் பக்கத்து நாடு கியூபா போராட்டத்தை, வேடிக்கை பார்த்தது. ஸ்பெயின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட மறுத்து மௌனம் சாதித்து வந்தது. 1897-1898 காலகட்டத்தில் கியூபாவினர் ஆயிரக்கணகில் கொல்லப்பட்டும், ஆயிரக்கணக்காணோர் அகதிகளாகப் புலம்பெயர்ந்த அவலமும் அடுக்கடுக்காய் அறங்கேற, அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கன்லே, ஒன்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள், அல்லது கியூபாவை விட்டு வெளியேறுங்கள் என்று ஸ்பெயினை எச்சரித்தார். ஆனால் பலன் இல்லாமல் விடுதலை யுத்தம் தீவிரமடைந்தது. அமெரிக்கா தன் நாட்டுப் பிரஜைகளை அழைத்துக் கொள்ள MAINE என்ற யுத்தக் கப்பலை கியூபாவிற்கு அனுப்பியது. அது ஹாவனா துறைமுகத்தில் வந்து நின்ற போது மர்மமான முறையில் வெடித்து சிதறியது. ஸ்பெயின் நாட்டின் மீது குற்றம் சுமத்திய அமெரிக்கா போரில் தலையிட்டு கியூபாவிற்கு பாரிஸ் உடன்படிக்கையின் படி விடுதலை வாங்கிக் கொடுத்தது.


அமெரிக்கா கியூபாவில் இராணுவ ஆட்சியை அமல் படுத்தியது. அதற்கும் எதிர்ப்பு கிளம்பவே 1902ல் தேர்தல் நடந்தது. அதிபர் ஆனவர்கள் அமெரிக்கர்களுக்கு நன்றிக் கடனாக மேலும் பல சர்க்கரை ஆலைகளையும், பால் பண்ணைகளையும், எண்ணைக் கிணறுகளையும் அமைக்க அனுமதி வழங்கினார் அதிபர் பாடிஸ்டா.


அன்னியர்களுக்கு கதவை திறந்து விட்டதையும், கியூபா வளங்கள் பறிபோவதையும், கியூபாவினர் பசியிலும் பஞ்சத்திலும் வாழ்வதையும் கண்டு பொறுக்க மாட்டாமல் பிடரல் காஸ்ட்ரோ என்ற வழக்ககறிஞர் தலைமையில் 1953ல் மீண்டும் போராட்டம் வெடித்தது. அது இம்முறை வர்க்க போராட்டமாக உருமாறியது. அதிபர் ஈவிரக்கமின்றி போராட்டத்தை அடக்கினார். காஸ்ட்ரோவும் 11 தளபதிகள் மட்டுமே தப்பி மலைக்காடுகளில் ஒளிந்து அங்கிருந்து கொரில்லா யுத்தத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தனர். இராணுவ மையங்கள், ரயில்வே டிராக்குகள், பாலங்கள் என தகர்க்கப்பட்டு போராட்டக்காரர்கள் கை ஓங்க, அமெரிக்கா அவர்களுக்கு மறைமுக உதவி அளித்தது. மக்களுக்கு அதிபர் மீது இருந்த நம்பிக்கை தகர்ந்தது. அதிபர் 1959ல் நாட்டைவிட்டு ஓடினார். காஸ்ட்ரோ அதிபர் ஆனார்.


ஆனால் வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கைவைத்து பரிசோதிக்க விரும்பிய வல்லரக்கன் கதைபோல், அமெரிக்க-கியூபா அரசியல் உறவு மாறியது. கியூபா அதிபர் காஸ்ட்ரோ அமெரிக்காவின் தலைவாசலிலேயே சோஷலிசக் கடையை விரித்தார். அமெரிக்கர்களின் சர்க்கரை ஆலைகள் மற்றும் அனைத்து தொழிலகங்களையும் கியூபா அரசுடமை ஆக்கியது. பதிலடியாக அமெரிக்கா ஐரோப்பாவில் இருந்து கியூபாவிற்கு வரும் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் தடுத்தது. பொருளாதார சீரழிவினால் நூற்றுக் கணக்கில் படகுகள் கொள்ளாத அளவிற்கு அகதிகள் ஆயிரக்கணக்கில் நாள் தோறும் அமெரிக்க கடற்கரையில் போய் இறங்கினர். எத்தனையோ படகுகள் நடுவழியில் மூழ்கின. மனிதகுல அவலத்தின் உச்சகட்டம் என்றால் அது இதுதான்.


அடுத்து கியூபா சோவியத் ரஷ்யாவின் உதவியை நாடியது. ரஷ்யா கியூபாவிற்குத் தேவையான அனைத்து பொருளாதார உதவிகளையும் செய்ததோடு தன் ஏவுகணைகளையும் கொண்டு கியூபாவில் நிறுத்தியது. அமெரிக்கா தன் கடற்படையை கொண்டு ரஷ்ய கப்பல்களைக் கியூபாவிற்குள் நுழைய விடாமல் மறித்தது. மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் நேரிட்டது. அப்போதைய அமெரிக்க ஜனதிபதி ஜான். F. கென்னடி தலையீட்டின் பேரில் கியூபாவைத் தாக்குவதில்லை என்ற உத்தரவாதத்தை அமெரிக்காவிடமிருந்து பெற்றுக் கொண்டு ரஷ்யா 1962ல் தன் ஏவுகணைகளை கியூபாவிலிருந்து விலக்கிக் கொண்டது.


பிடரல் காஸ்ட்ரோ இதோடு நிற்கவில்லை. அசோகர் புத்த மதத்தை எல்லா நாடுகளிலும் பரப்பியது போல் கொரில்லா யுத்தத்தை உலகின் பல நாடுகளுக்கும் பரவச் செய்தார். பொலிவியா, நிகாராகுவே அங்கோலா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் உள்ள தீவிரவாதிகளுக்கு தன் பிரதம சீடர் சேகுவேரா மூலம் கொரில்லா யுத்தம் நடத்த உதவினார். புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் இந்த சேகுவேரா தான் மானசீக குரு என்று சொல்வார்கள். அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியும் ஒரு சோஷலிசவாதி. எனவே புலிகளுக்கு ஆதரவு அளித்தார். புலிகளும் ஆரம்ப நாட்களில் பல வெற்றிகளைப் பெற்றனர். ஆனால் திம்பு மாநாடுக்குப் பின் எல்லாமே திசைமாறிச் சென்று விட்டன.


இந்தியாவின் ஆதரவை பெற்ற நிலையில் மட்டுமே தமிழ் ஈழத்தில் புலிகளால் வெற்றிக்கொடி நாட்ட முடிந்தது. அந்த ஆதரவு இப்போது கைமாறிச் சிங்களர்களுக்கு போய் விட்ட நிலையில் தான் இப்போது புலிகளுக்குப் பின்னடைவு.


இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் ஆதரவு இல்லாமல் அங்கு எதுவுமே சாத்தியமில்லை என்பது தான் அப்பட்டமான உண்மை. மீண்டும் இந்தியாவின் ஆதரவை ஈழத் தமிழர்கள் பெறுவது எப்படி? இதில் உள்ள பெரிய தடைக்கல் ராஜிவ் காந்தி கொலை வழக்கு. அதை எப்படி தங்கள் வழியிலிருந்து விலகச் செய்வது?


மேலும் தனித் தமிழ் ஈழம் என்பதை கியூபா அரசியல் பின்னனியில் இந்தியாவால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இன்றைய மாறுபட்ட பொருளாதார சூழ்நிலையில் இந்தியா போன்ற நாடுகளுக்கு அதன் கார்பரேட் கம்பெனிகளின் நலன்தான் முக்கியமே தவிர, ஈழத் தமிழனின் கூக்குரல் அல்ல என்ற அடிப்படை உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது அமெரிக்காவின் பக்கம் இந்தியா சார்ந்திருக்கும் நிலையில் கியூபா விவகாரத்தினால் அமெரிக்காவிற்கு நேர்ந்தது போன்ற அவமானங்களை இந்தியா ஒருபோதும் விரும்பாது. அமெரிக்காவும் அதை உபதேசிக்காது.


இரண்டாவது தனித் தமிழ் ஈழம் உருவாக்கிக் கொடுப்பது இந்தியாவில் தனி நாடு கேட்டுப் போராடும் பல தீவிரவாதிகளுக்கும் வலு சேர்க்கும் அம்சம் ஆகும். பின்னாளில் தமிழ் நாட்டிலும் அத்தகைய கோரிக்கை ஏற்பட்டு தமிழ் ஈழம் அதற்கு உதவ நேர்ந்தால் இந்தியாவிற்கு அதைவிட தலைவலி என்ன இருக்க முடியும்?


அடுத்து வடக்கே தாலிபான்கள் அச்சுறுத்தல் வலுத்துவரும் நிலையில் தெற்கே ஒரு பிரச்சினையை இந்தியா விலை கொடுத்து வாங்க நினைக்குமா?


எல்லாவற்றிலும் முக்கியமாக இந்திராகாந்திக்குப் பிறகு வலுவான தலைமையோ தலைவரோ இந்தியாவில் கிடையாது. கூட்டு மந்திரிசபையின் எல்லை ஒரு வரையறைக்கு உட்பட்டது. அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தின் போது நடந்த அரசியல் கூத்துகளை உலகம் அறியும்.


இங்கே தமிழக அரசியல் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஆஸ்திரியா நாட்டில் வால்டர்ஷ்லாக் என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் 1889ல் பிறந்த அடால்ப் ஹிட்லருக்குத் தாய் மொழி ஜெர்மன். முதல் உலகப்போருக்குப் பின் ஜெர்மனிக்கு நேர்ந்த அவல நிலையைக் கண்டு அவன் நிலை குலைந்தான். துடி துடித்தான். அவனுள் முகிழ்த்த ஜெர்மானிய தேசியவாதம் போன்று, வாக்கு வங்கி அரசியல் நடத்தும் தமிழகத் தலைவர் களுக்கு ஒரு போதும் உதிக்க முடியாது. இவர்கள் துடித்து எழுந்தாலும் இவர்கள் குரலின் தொனியை (Decibel) அளவிடுவது புதுடில்லியே! அது எதிரொலிக்கும் எல்லை தமிழகக் கடற்கரை வரை மட்டுமே. அதற்காக அவர்களைக் குறை சொல்ல முடியாது.


பிறகு ஈழத் தமிழர்கள், மீண்டும் இந்தியாவின் நட்பைப்பெற என்ன தான் வழி?


சுந்தரபாண்டியன் புலவராக மாறுவேடம் பூண்டு சோழர்களை எதிர்த்து நாட்டு மக்களிடம் எழுச்சி மிக்க வீர உரையாற்றி அவர்களிடம் உணர்ச்சித் தீயைப்பற்ற வைத்தான். அவன் அழைப்பிற்கு அணிவகுக்கும் படை தயாரானது.


சோழர்களை எதிர்த்து கங்கைகொண்ட சோழபுரத்தைக் கைப்பற்றி ராஜராஜனை திருமுனைப்பாடியில் சிறை வைத்தான். வடக்கே தன் எதிரிகளிடம் கவனம் செலுத்தியிருந்த சோழ குலக் காப்பான் வீரநரசிம்மன் பார்வை பிறகு தெற்கே சுந்தரபாண்டியன் மீது திரும்பியது. காஞ்சியிலும், கண்ணனூரில் இருந்த தனது லட்சக்கணக்கான படை வீரர்களை மதுரை நோக்கி அணிவகுக்க தளபதிகளுக்கு உத்தரவிட்டான் வீரநரசிம்மன்.


சுந்தரபாண்டியனிடம் மீதம் இருந்தது ஒரு சிறுபடை மட்டுமே! ஆனாலும் அவன் சற்றும் கலங்கவில்லை. இரு நாட்டுப் படைகளும் காவேரிக்கரையில் மகேந்திரமங்கலம் என்னும் இடத்தில் சந்தித்தன. கடைசியில் வீரநரசிம்மனைச் சமாளிக்க சுந்தரபாண்டியன் எடுத்த ஆயுதம் தான் நட்புறவு. அது வீரநரசிம்மன் மகள் பாமினி மூலம் மண உறவாகியது. ஈழத் தமிழர்களும் இந்தியாவுடன் மலேசியாவின் சராவாக், சபா மாகாணங்கள் போன்று நிரந்தர நட்பு கொண்டு விட்டால் பிரிட்டிஷ் இந்தியா - இலங்கையின் தொப்புள்கொடி உறவு மீண்டும் மலர்ந்து மணம் வீசும் தானே!


ஈழத் தமிழர்களே, ஒருமித்து குரல் கொடுங்கள்! இந்தியாவின் 29 வது மாகாணமாக தமிழ் ஈழ மந்திரி சபையின் முதல் தீர்மானம் ‘புலிகளுக்குப் பொது மன்னிப்பு என்ற ஒருவரியின் மூலம் பிரபாகரன் கூட இந்தியாவின் இராணுவ அமைச்சர் ஆக முடியும்! ஈழத் தமிழர்களே நன்கு யோசியுங்கள்! தமிழர்கள் நாம் வாழ்ந்தாலும் ஒன்றாக வாழ்வோம்! வீழ்ந்தாலும் ஒன்றாக வீழ்வோம்!


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூட நேற்று (ஏப்ரல் 25, 2009) திருவாய் மலர்ந்து எச்சரித்து விட்டார், இலங்கை பிளவுபடுவதைத் தடுக்க முடியாது என்று. பிறகென்ன வெற்றிச் சங்கெடுத்து ஊதுங்கள் பலமாக! திக்கெட்டும் கேட்கட்டும்!


இந்தக் குரல் காற்றில் கலந்தாலே போதும்! ஈழத் தமிழர்கள் இதில் வெற்றி பெறுவது ஒருபுறம் இருக்கட்டும். இந்தியா காஷ்மீருக்காக கோடிக்கணகான ரூபாயை அங்கு கொட்டி, பல ஆயிரம் வீரர்களை ஆண்டுதோறும் பலிகொடுத்து பாகிஸ்தான் பக்கம் காஷ்மீர் சாய்ந்து விடாமல் பார்த்துக் கொள்கிறது. அதே போல் இலங்கை அதிபரும் தமிழர்களை சமாதானம் செய்யும் அளவுக்கு நாளை தள்ளப்படுவார் என்பது மட்டும் நிச்சயம். இந்த மட்டுமாவது ஈழத் தமிழர்களுக்கு இது உடனடி வெற்றி தானே!


'அரசியல் பிழைத் தோற்கு அறம் கூற்றாவதும்...' என்ற இளங்கோ அடிகளின் பதில்தான் அதிபர் மகிந்த ராஜபக்சே அவர்களுக்கு. இரண்டாம் உலகப் போரையே வென்ற வின்சன்ட் சர்ச்சிலுக்கு அடுத்த தேர்தலில் பிரிட்டிஷ் மக்கள் கொடுத்த தீர்ப்பை அதிபரும் மறக்க வேண்டாம்!


ஈழத் தமிழர்களே எண்ணித் துணிக!


'சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்'

விரைவில் !

No comments: