Tuesday, October 4, 2011

அணு சக்தி பிறந்த கதை-6


வெகு காலமாய் இல்லாத வழக்கமாய் அஜந்தாவில் கலைவிழா நடந்தது. அது அரை குறையாக முடிவுற்று ஒரு மாதத்திற்குமேல் ஆயிற்று.

அந்த ஒரு மாதமும் வடக்கேயிருந்து வாதாபியை நோக்கி விரைந்து வந்த சளுக்க சைனியத்துக்கும் தெற்கேயிருந்து படையெடுத்து வந்த பல்லவச் சைனியத்துக்கும் ஒரு பெரிய போட்டிப் பந்தயம் நடந்து கொண்டிருந்தது.  

வாதாபியை முதலில் யார் அடைவது என்கின்ற அந்த விரைவுப் பந்தயத்தில் பல்லவ சைனியமே வெற்றியடைந்தது. என்பது சிவகாமியின் சபதத்தில் வாதாபிப் பெரும் போரைப் பற்றி அமரர் கல்கியின் வர்ணனையாகும்.

இதே போன்றதொரு பெரும் போட்டி கி.பி 1940களில் ஜெர்மனிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அணுசக்தியை முதலில் பெறுவது யார் என்கின்ற விரைவுப் பந்தையம் நடந்தது. நியாயமாகப் பார்த்தால் இறுதியில் அப்போட்டியில் வென்றது ஜெர்மனிதான் என்ற போதிலும் வெற்றிக் கோப்பையைச் தட்டிச் சென்றது என்னவோ அமெரிக்கா!  இது எப்படி சாத்தியமாகும்?

நாம் ஏற்கனவே பார்த்ததுபோல் எப்பேர்ப்பட்ட வீரனுக்கும் ஒரு பலவீனம் இருக்கத்தான் செய்யும் என்பதற்கிணங்க அபிமன்யூவுக்கு ஒர் சையத்தரதன் வாய்த்ததுபோல் அடால்ஃப் ஹிட்லருக்கு எமனாய் முளைத்தவ்ர்கள் யூத விஞ்ஞானிகளாவர்.

ஹிட்லரின் யூத வெறுப்புக் கொள்கைக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. இது பற்றிய ஒரு கேள்விக்கு அவரது பதில் “Who cares if anybody kills any number of bugs”  என்பதாகும். மூட்டைப் பூச்சிகளை விட கேவலமாக யூதர்களை மதித்த அவரது ஆணவப் போக்குதான் இறுதியில் மரணம் என்னும் படுகுழியில் அவரை வீழ்த்தியது.

உலகமே இரண்டாம் உலகப்போர் மேகங்களால் சூழப்பட்ட இருண்ட ஒரு காலகட்டம் அது. ஹிட்லரின் படைகள் ஐரோப்பா கண்டம் முழுவதும் அக்கிரமித்திருந்த அந்த நேரத்தில் அணு ஆயுதப் போட்டி ஒரு முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

ஜெர்மனியின் யூத வெறுப்புக் கொள்கையால் ஜெர்மனியிலும், ஜெர்மனி யினால் ஆக்கிரமிக்கப்பட்ட மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வெளியேறிய யூத விஞ்ஞானிகள் உயிருக்குப் பயந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தனர். அவர்களில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், லியோ சிஸ்லர்டு, ஒட்டோவான், நீல்ஸ் பேகர், ஓப்பன் ஹீமர், என்ரிகோ ஃபெர்மி போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவார்கள். 

நாம் ஏற்கனவே அணுவின் அமைப்பிலுள்ள பல பலவீனமான அம்சங்களைப் பற்றிப் பார்த்திருக்கிறோம். அணு, அதன் உட்துகளான எலெக்ட்ரான், மற்றும் அணு உட்கருத் துகள்களான புரொட்டான், நியூட்ரான் போன்றவற்றின் பலவீனத்தைப் பயன்படுத்தி எப்படி விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்தனர் என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக காலக் குறியீட்டுடன் கூடிய அப்போட்டியின் நிகழ்வை முதலில் பார்ப்போம்.

1938-டிசம்பர்
அமெரிக்க விஞ்ஞானிகள் ஓட்டாவான் மற்றும் ஃப்ரிட்ஜ் ஸ்ட்ராஸ்மேன் குழுவினர் முதன் முதலில் ஒரு நியூட்ரான் அணுத்துகளை ரேடியோ ஆக்டிவ் யுரேனிய அணு உட்கருவுடன்  மோதச் செய்வதன் மூலம் அந்த அணுவைப் பிளக்க முடியும் எனக் கண்டறிந்தனர். இதன் மூலம் வெளிப்படும் அபரிமித ஆற்றல் மிக்க அந்த சக்தியை அணுசக்தி என்றனர்.

1939 ஆகஸ்டு 2
சக விஞ்ஞானி லியோ சிஸ்லர்டு ஆலோசனையின்படி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்டிற்கு அமெரிக்கா அணுசக்தி சோதனையில் ஈடுபட வேண்டிய அவசியத்தையும், ஜெர்மனி எந்த நேரத்திலும் அணுஆயுத சோதனையில் வெற்றிபெரும் நிலையில் இருப்பதையும் அதனால் எந்த விதத்திலும் அமெரிக்கா அணுஆயுத சோதனையில் ஜெர்மனிக்குப் பின்தங்கி விடக்கூடாது என்பதற்கான கரணங்களையும் விளக்கி கடிதம் எழுதினார்.

இதன் பயனாக பள்ளி, கல்லூரி ஆராய்சிக் கூடங்களில் இருந்த அணு ஆராய்ச்சி முயற்சிகள் அமெரிக்க அரசாங்கத்தின் பண உதவியுடன் பல்வேறு அதி நவீன பரிசோதனைக் கூடங்களுக்கு மாறின.

1941 பிப்ரவரி:
அமெரிக்க வேதியல் நிபுணர் கிளன் சீபர்க் செறிவூட்டப்பட்ட யுரேனிய அணுக்களைப் போன்றே புளுடோனியமும் எளிதில் பிளவுறும் கதிவீச்சுத் தன்மையுடைய வெடிபொருள் எனக் கண்டறிந்தார். இதன் மூலம் புளூடோனியமும் அணு ஆயுத தயாரிப்புக்கு மூலப் பொருளானது.

1941 டிசம்பர் 7
ஹவாய் தீவின் பேர்ல் ஹார்பர் துறைமுகத்திலிருந்த அமெரிக்காவின் பசிபிக் கடற்படைப் பிரிவின் நிலைகளை ஜப்பான் தாக்கி எண்ணற்ற போர்க் கப்பல்களை மூழ்கடித்தது. இதன் மூலம் அமெரிக்காவும் இரண்டாம் உலகப்போரில் குதிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவானது.

                         பேர்ல் ஹார்பர் தாக்குதல்

   




1942 ஜூலை
அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி எட்வர்டு டெல்லர் அணுகுண்டைவிட அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வடிவமைத்தார்.

1942 செப்டம்பர்
அமெரிக்கா அணுகுண்டு தயாரிப்புக்கென மன்ஹாட்டன் திட்டம் என்றதொரு இரகசிய திட்டத்தை உருவாக்கி அதன் செயல் தலைவராக இராணுவத் தளபதி லெஸ்லீ குரூவ்ஸ் என்பவரை நியமித்தது. அவர் திட்டத்திற்கான விஞ்ஞான ஆலோசகராக  டாக்டர் J. ராபர்ட் ஓபன்ஹீமரை நியமனம் செய்தார்.

                        
1942 டிசம்பர் 2
விஞ்ஞானி என்ரிகோ பெர்மி தலைமையிலான குழு சிக்காகோ பல்கலைக்கழகத்தில் 1942 டிசம்பரில் அணுவைப் பிளக்கும் சாதனம் சைக்ளோட்ரான், மூலம் உலகின் முதல் அணுவெடி சோதனையை நிகழ்த்தி அதன் தொடர் விளைவை (Chain Reaction) கட்டுப்படுத்தும் அமைப்புகளையும் உருவாக்கி  சரித்திர சாதனை படைத்தனர்.

1944 டிசம்பர்
மன்ஹாட்டன் திட்டத்தின் ஒரு பகுதியாக வாஷிங்டன் ஹான்ஃபோர்டு தொழிற்சாலையில் அதிகளவிலான புளூடோனிய உற்பத்தி தொடங்கியது. டென்னசி மாகாணத்தில் ஓக் ரிட்ஜ் என்ற இடத்தில் U235 வகை யுரேனியம் செறிவூட்டும் ஆலை ஒன்று நிறுவப்பட்டு அங்கும் உற்பத்தி தொடங்கியது. 

1945 ஜூலை 16
முதல் அணுவெடி சோதனை நிகழ்ந்த அடுத்த மூன்றே ஆண்டுகளில் அந்த சாதனையை பரீச்சார்த்தமாக சோதிக்க அந்த முதல் அணு வெடி சோதனைக்கு
                             டிரைனிடி அணு வெடி சோதனை                    

டிரைனிட்டி எனப் பெயரிட்டு அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள அல்மோகார்டோ பாலவனத்தில் 1945 ஜூலை 16ல் அச்சோதனையை நிகழ்த்தினர்.

1945 ஆகஸ்டு 6
அதே ஆண்டில் பி-29 ரக எனோலா கே என்ற போர்விமானம் 15 கிலோடன் யுரேனிய அணுகுண்டை சுமந்து சென்று ஜப்பான் ஹிரோசீமா நகர் மீது வீசியது. குண்டு வீச்சுக்கு உடனடியாக 68,000ம் பேரும் அடுத்த சில ஆண்டுகளில் அதன் தொடர் நிகழ்வாக 70,000ம் பேரும் பலியானார்கள். கதிர் வீச்சில் உடல் ஊனமுற்றவர்கள் எண்ணிக்கை பல லட்சத்தைத் தாண்டும். இன்றும் அதன் தாக்கம் ஒரு தொடர்கதைதான் என்பதிலிருது கதிர்வீச்சின் கொடூரத்தை யூகித்துக் கொள்ளலாம்.

1945 ஆகஸ்ட் 9
ஃபேட் மேன் என்ற விமானத்திலிருந்து 21 கிலோடன் புளூட்டோனிய வகை குண்டு ஜப்பான் நாகசாகி நகர் மீது வீசப்பட்டது. 38,000 பேர் உடனடியாகவும் தொடர்ந்த ஆண்டுகளில் 35,000 பேரும் பலியானர்கள். மறுநாள் ஜப்பான் அமெரிக்காவிடம் சரணாகதி அடைய, மனித குலத்தை பெரு நாசத்திற் குள்ளாக்கிய இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவுக்கு  வந்தது.

1952 நவம்பர் 1
பசிபிக் கடலில் உள்ள மார்ஷல் தீவில் மைக் என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக உலகின் முதல் ஹைட்ரஜன் குண்டை பரீட்சார்த்தமாக வெடித்து சாதனை படைத்தது.


                     
                               ஹைட்ரஜன் அணுவெடி சோதனை

இத்னைத் தொடர்ந்து 1952ல் ஆஸ்திரேலிய பாலைவனத்தில் பிரிட்டனும், 1955ல் கஜகஸ்தானில் சோவியத் யூனியனும் அணுவெடி சோதனைகளை நிகழ்த்தி அணு ஆயுதப் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

அணுப் பிளவின் தொடர் விளைவு (Chain Reaction) என்றால் என்ன?

அடுத்த கட்டுரையில் பார்ப்போம்...











No comments: