Sunday, November 9, 2008

ஈரோடு தமிழன்பன் - 'இங்கேயும் ஒரு சொர்க்கம்' வெளியீட்டு விழா தலைமையுரை

இங்கேயும் ஒரு சொர்க்கம் - நூல் வெளியீட்டு விழாவில்

கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையுரை :-

தாலாட்டுப் பாடலாக நமது தாய்மார்கள் பாடக்கூடிய பாடல் "பத்துக்கடல் தாண்டி பறித்து வந்த தாமரையே" என்பது. இந்நூலாசிரியர் அறிவியல்நம்பி பத்துவருடங்கள் உழைத்து இந்நூலை உருவாக்கி இருக்கிறார். ஒரு பொருளைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த உழைப்பின் பயனை அவர்கள் அடையவில்லை. வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.

நியூஜெர்சிக்கு நான் சென்றிருந்த போது விஞ்ஞானி ஐன்ஸ்டீன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் கடைசியாகக் கரும்பலகையில் எழுதி வைத்திருந்த 'இயற்பியற் சூத்திரத்தை' அப்படியே பாதுகாத்து வைத்திருந்தார்கள்.

நியூ ஸ்டோரி என்பது நாவலாகும். இந்த நாவல் 'நாவல்லா' என்ற சொல்லிலிருந்து தோன்றியது. இந்நூலில் சொல்லவேண்டிய கருத்துக்களை சொல்லவேண்டிய விதத்தில் வாசகர்களுக்கு அலுப்புத்தட்டாமல் சொல்லப்பட்டிருக்கின்றன. பல இடங்களில் கவிதைகளாகக் கதை வெளிப்பாடுகள் காணப்படுகின்றன.

கதைக்குள்ளாக அறிவியல் விஷயங்கள் இடையிடையே கூறப்படும் போது வாசகர் பார்வை வேறு பகுதிக்கு மாறிவிடாதிருக்கும்படி மிகச் சாமர்த்தியமாகக் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார் நூலாசிரியர். இதைச் சரியாகச் செய்யாது போனால் அனைத்தும் வீணாகிவிடும்.

அதேபோல் இந்நூலில் நாடு நகர்கள் பற்றி விவரித்திருக்கும் விதம், சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காதையில் ஆடற்கலைச் சிறப்புப் பற்றிக் கதையிலிருந்து விலகி விரிவாகப் பேசப்பாட்டாலும், அவை தமிழர் கலைத்திறனாக எக்காலத்திலும் தமிழ்மக்களிடையே பதிய வேண்டியவை என்பதனால் பொருந்தி நிற்கின்றன. இந்நூலில் பேசப்படும் நாடுகளில் மொனாக்கோ என்ற சின்னஞ்சிறிய நாட்டைப் பற்றிய தகவல் கூட சுவையாகக் கூறப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

புதினங்களை மூன்று பெரும் வகைகளாக சமூகப் புதினம், வரலாற்றுப் புதினம், அறிவியல் புதினம் எனக் கொள்ளலாம். மூன்றும் கலந்த கலவையாக இந்நூல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு பாராட்டத்தக்க அம்சம் இந்நூலில் வரும் பெண் பாத்திரங்கள் பற்றியது. கதாநாயகி தாரிணியாகட்டும், ஓரிரு இடங்களில் பேசப்படும் ஜெனிபர், நிஷாந்தியாகட்டும், இன்டர்போல் அதிகாரியாக வரும் வினோதினியாகட்டும் அனைவரும் மிக உயர்வாக, அறிவார்ந்த பாத்திரங்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கருடா விமானத்தின் வேகத்தைவிட அதிவேகத்தில் அவளிடமிருந்து விலகி ஓடிவிடத் துடிக்கும் அவன் உள்ளம் என்றும், தாரிணியைப் பற்றி சொல்லும் போது, குளிர் நிலவென நெற்றி, இன்பமொழி பேசும் கண்கள், கம்ப்யூட்டர் வரைவில் மூக்கு, கிள்ளிப்பார்க்கத் தூண்டும் கன்னம், என்றும் நாவலின் வர்ணணைகளில் கூட அறிவியல் வார்த்தைகள் கையாண்டவிதம் அற்புதமானது.

நூலின் தனிச்சிறப்புகள்:


1. சமூகத்தளத்தில் இயங்குகிற வாழ்க்கையின் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கை கூறுகள்.

2. இவற்றினூடாக இயங்கும் விஞ்ஞான தொழில்நுட்ப புதுமைகள் கதையைச் சேதப்படுத்தாமல் சிதைக்காமல் வெளிப்படுத்தியிருக்கும் விதமும் அவற்றின் மிகத் துல்லியமான விவரங்களும்.

3. இது விஞ்ஞானக் களத்தில் இயங்கும் கதை என்பதனால் விஞ்ஞான கூறுகள் உவமைகள்கூட மின்னி வெளிப்படுகிற மேம்பாடு.

4. கலைச் சொல்லாக்கம் கதையின் நோக்கம் இல்லையானாலும் ஆங்காங்கு ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற விஞ்ஞான கலைச்சொற்களுக்கு தகுந்த முறையில் தமிழில் உருவாக்கி பயன்படுத்தியிருக்கும் முறைமை.

இப்புதினம் ஒரு கலைப்படைப்பாக கருதத்தக்கது என்னும் சமூக உண்மைகளுக்கு சமன்பாடான நிலையில், விஞ்ஞான உண்மைகளையும் வெளிப்படுத்தியிருப்பதன் மூலம் கலைப்பணி, சமுதாயப்பணி, விஞ்ஞானப்பணி, தமிழ்ப்பணி என நான்கு கோணங்களிலும் தமது எல்லையை விரிவுபடுத்தி தன் வெற்றியைச் சாதித்திருக்கிறது என்று என்னால் கூற முடியும்.

No comments: